Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் தவிக்கும் ஹீரோக்கள்!

01 பிப், 2015 - 15:20 IST
எழுத்தின் அளவு:

பொன்முட்டையிடும் வாத்து கதை நாம் எல்லாம் அறிந்ததுதான். தினமும் ஒரு பொன்முட்டையிட்டு வந்த வாத்தை கொன்றுவிட்டல் அதன் வயிற்றுக்குள் இருக்கும் அத்தனை பொன்முட்டைகளும் அன்றைக்கே கிடைத்துவிடுமே என்ற பேராசையில் வாத்தை கொல்கிறான் ஒருவன். வாத்தின் வயிற்றுக்குள் பொன்முட்டைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். பேராசைக்கு உதாரணமாக சொல்லப்படும் இந்தக்கதை, தற்போதைய சூழ்நிலையில் திரையுலகில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும்தான். என்றாலும் மற்ற எல்லோரையும்விட கதாநாயக நடிகர்களுக்குத்தான் கனக்கச்சிதமாகப் பொருந்துவதாக இருக்கிறது.


சினிமாவில் தங்களுக்கு கிடைத்த இடத்தை தக்க வைத்துக் கொண்டு, காலாகலத்துக்கும் கதாநாயக நடிகனாக கோலோச்ச வேண்டும் என்ற எண்ணம் இன்றைய ஹீரோக்களிடம் இல்லை. சினிமா என்பதே கூட்டு முயற்சி என்ற உண்மையை உணராமல், ஒரு படம் வெற்றியடைந்தால் அந்த வெற்றி தன்னால் மட்டுமே கிடைத்ததாக எண்ணிக்கொண்டு, படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்த தொடங்கினர். ஒருவரை பார்த்து மற்றவர், அவரைப் பார்த்து இன்னொருவர் என அத்தனை ஹீரோக்களும் சம்பளத்தை உயர்த்தத் தொடங்கினர்.


சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் நடிகர்களின் சம்பளம் லட்சங்களில்தான் இருந்தது. இப்போது கோடிகளைக் குறைவாக சம்பளம் நடிகர்களே கோடம்பாக்கத்தில் இல்லை என்கிற அளவுக்கு, ஹீரோக்களின் சம்பளம் ஏகத்துக்கும் எகிறிவிட்டது. வெற்றிப்படத்தில் நடித்த ஹீரோக்கள் மட்டுமல்ல, தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வரும் ஹீரோக்கள் கூட கூசாமல் கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள். சினிமாவை கலையாய், தொழிலாய் எண்ணாமல், பணம் கொட்டும் எந்திரமாக நினைத்ததன் விளைவை...விபரீதத்தை விரைவில் அறுவடை செய்ய இருக்கிறார்கள் முன்னணி கதாநாயக நடிகர்கள்.


முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சிக்கலை, நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அபாயத்தை...ஆபத்தை அவர்கள் உணர்ந்துள்ளார்களா என்றால்... இல்லை என்றே தோன்றுகிறது.


கதாநாயக நடிகர்களை என்ன ஆபத்து... என்ன அபாயம் சூழ்ந்திருக்கிறது?


இன்றைய தேதியில் ரஜினியின் சம்பளம் சுமார் 60 கோடிக்கும் மேலாக இருக்கிறது. தான் நடிக்கும் படத்தில் அவரே ரகசிய பங்குதாரராக இருப்பதால் இந்த தொகைக்கு அதிகமாகவும் அறுவடை செய்யும் வாய்ப்பு ரஜினிக்கு இருக்கிறது. அவரது சகவான கமல்ஹாசன் 50 கோடிக்கும் குறைவில்லாமல் கல்லா கட்டி வருகிறார். வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை, பிற மொழி உரிமை அனைத்திலும் பங்கு கேட்பதன் மூலம் இவ்வளவு பெரிய தொகையை எளிதாகப் பெற்று வருகிறார் கமல்.


இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அஜித், விஜய், சூர்யா 20 கோடி சம்பளம் வாங்குகின்றனர். விக்ரம், தனுஷ், போன்றவர்களும் 10 கோடிக்கு குறையாமல் சம்பளம் வாங்குகின்றனர். விஷால், கார்த்தி, ஆர்யா, சிம்பு என அடுத்த வரிசையில் இருப்பவர்களும் 5 கோடிகள் வரை கேட்கிறார்கள்.


இப்படியாக கதாநாயக நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதால் அவர்களுக்குக் கொட்டிக் கொடுத்து படம் தயாரிக்கும் சக்தி பல தயாரிப்பாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. சில கார்ப்பரேட் கம்பெனிகள் சினிமா தயாரிக்கும் ஆசையில் வந்து, இவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து படம் தயாரித்தன. போட்ட பணத்துக்கு லாபம் வராதது மட்டுமல்ல, போட்ட பணத்தையும் தொலைத்துவிட்டு நடையைக்கட்டிவிட்டன.


ஹீரோக்களின் பேராசையினால், காலம்காலமாக படம் தயாரித்து வந்த பட நிறுவனங்களும் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தன. கார்ப்பரேட் நிறுவனங்களும் கடையைகட்டிவிட்டுச் சென்றுவிட்டன. இதனால் மிகப்பெரிய சிக்கலுக்குள்ளாகி உள்ளனர் ஹீரோக்கள். அதாவது இன்றைய தேதியில் இவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து படம் தயாரிக்க ஆள் இல்லை. எனவே தாங்களே படம் தயாரித்து நடிக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


ரஜினியும் இதற்கு விதிவிலக்கில்லை. அவர் அண்மையில் நடித்த படங்கள் வேறு பேனரில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் ரஜினியும் பங்குதாரராகவே இருக்கிறார். தன் பேனரிலும், மற்றவர்களின் பேனரிலும் மாறிமாறி நடித்து வரும் கமல் பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும்போது, ஏற்கனவே வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை, பிற மொழி உரிமை அனைத்தையும் எழுதி வாங்கிக் கொள்கிறார். எனவே அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற சுமை தயாரிப்பாளர்களுக்கு இல்லாமல் போகிறது. இதன் காரணமாக மட்டும் அவ்வப்போது வெளிப்படங்களில் நடித்து வருகிறார் கமல்.


ஆரம்பம், என்னை அறிந்தால் மற்றும் சிவா இயக்கும் புதிய படம் என தொடர்ந்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படங்களிலேயே நடித்து வருகிறார் அஜித். இதன் பின்னணி புரிந்திருக்குமே? ஏ.எம்.ரத்னம் பெயரில் அஜித் தயாரிக்கும் படங்களே இவை. விஜய் தற்போது நடிக்கும் புலி படத்தின் தயாரிப்பாளர் என்று அவரது பி.ஆர்.ஓ.பெயரைச் சொல்கிறார்கள். அவரை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்... உண்மையில் விஜய்யின் பணத்தில் பினாமி பெயரில் தயாராகும் படமே புலி.


ஸ்டுடியோ க்ரீன் என்ற பட நிறுவனம் சூர்யாவின் பினாமி நிறுவனம்தான். தன்னை வைத்து படம் தயாரிக்க மற்ற நிறுவனங்கள் முன்வராதபோதெல்லாம் இந்த நிறுவனத்தின் மூலம் படம் தயாரித்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சூர்யா. அவரது தம்பி கார்த்தி நடிக்கும் அத்தனை படங்களுமே இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். காரணம் கார்த்தியை வைத்து வேறு எவரும் படம் தயாரிக்க முன் வருவதில்லை.


கடந்த சில வருடங்களாக விஷால் நடிக்கும் அத்தனை படங்களும் அவரது சொந்த தயாரிப்புதான். சிம்பு தற்போது நடிக்கும் இது நம்ம ஆளு படம் அவரது அப்பாவின் தயாரிப்புதான். மார்க்கெட் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கும் ஜீவா அடுத்து நடிக்க இருப்பதும்கூட அவரது அப்பா தயாரிக்கும் படத்தில்தான். தனுஷ் பெரும்பாலும் தன்னுடைய தயாரிப்பிலேயே நடித்து வருகிறார்.


மார்க்கெட் உள்ள ஹீரோக்கள் மட்டுமல்ல மார்க்கெட் இல்லாத சிபிராஜ், ஷாம், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் கூட சொந்தப்படம் எடுத்தே தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மற்ற ஹீரோக்கள் வெளிப்படங்களில் நடித்து வந்தாலும் விரைவில் இவர்களும் கூட தயாரிப்பாளர்கள் இல்லாமல் தாங்களே படம் தயாரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்கவே முடியாது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in