ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய் சினிமாவிற்கு வந்த புதிதில் அவரை வைத்து படம் இயக்க யாரும் முன்வரவில்லை என்று கூறியுள்ளார் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய், விஜயகாந்த் என பல ஹீரோக்களை உருவாக்கியவர், பவித்ரன், ஷங்கர், ராஜேஷ், பொன்ராஜ்... என பல இயக்குநர்களை பட்டை தீட்டியவர், பல படங்களை தைரியத்தோடு எடுக்க ஆரம்பகால வழிகாட்டியாக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 35 வருடத்திற்கு மேலான சினிமா அனுபவத்தோடு, தற்போது டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை அவரே நடித்து, இயக்கியுள்ளார்.
இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள, ''டூரிங் டாக்கீஸ்'' படத்தின் இசை வௌியீட்டு விழா இன்று(ஜன.,26ம் தேதி) சென்னையில் நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரை ஒரு நடிகராக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், முதல்படம் பண்ணும்போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் தான் இப்போதும் படம் இயக்கியுள்ளேன். இவ்வளவு படங்கள், இவ்வளவு மொழி்யில் படம் பண்ணிவிட்டேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை, சொல்லப்போனால் நான் எதுவும் சாதிக்கவில்லை.
7 நாட்கள் தண்ணீரை குடித்து உயிர் வாழ்ந்தேன்
சினிமாவின் தாக்கத்தால் சென்னை ஓடி வந்தவன் நான். தங்க இடமின்றி ராஜகுமாரி தியேட்டர் பிளாட்பாரம் முன்பு பல நாட்கள் படுத்து தூங்கியிருக்கிறேன். பட்டினியாக, 7 நாட்கள் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்த நாட்களும் உண்டு. அப்போதெல்லாம் நான் சினிமாவை மட்டுமே சுவாசித்தேன். இத்தனை படங்கள் நான் எடுத்திருந்தாலும் இந்த டூரிங் டாக்கீஸ் படத்தை எனது முதல்படம் போல் எடுத்திருக்கிறேன், அந்த திருப்தி இந்தப்படத்தில் கிடைத்துள்ளது. ஒரு படைப்பாளியாக பெருமையை கொடுத்துள்ளது இந்தப்படம்.
தமிழில் என் கடைசிபடம்
தமிழில், என் இயக்கத்தில் இது கடைசி படம் என்ற நிலையில் நான் உள்ளேன். தமிழில் நான் எடுத்த முதல் 6 படத்தை தெலுங்கு, கன்னடம், இந்தி என அத்தனை மொழிகளிலும் எடுத்தேன். அதேப்போல் இந்தப்படத்தையும் பிறமொழிகளில் இயக்கி ஒரு ரவுண்ட் வருவேன் என நினைக்கிறேன். பலரும் நான், இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்ததாக சொல்கிறார்கள். கதையை ஹீரோவாக வைத்து நான் எடுத்த படம் இது. 75 வயது கிழவனுக்கு அவனுடைய குறும்புகள், அவன் செய்யும் சில விஷயங்கள், அவனது யதார்த்தங்கள்... உள்ளிட்டவைகள் தான் இந்தப்படம்.
விஜய்யை வைத்து படம் பண்ண யாரும் முன்வரவில்லை
90களிலேயே, நான் படம் இயக்கியது போதும், பணம் சம்பாதித்தது போதும் என பாதி சாமியார் ஆனேன். ஆனால் என் மகன் நடிக்க வந்தார். அவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அவரை வைத்து படம் பண்ண சொல்லி, அவரை அழைத்து கொண்டு நான் போகாத கம்பெனியே இல்லை, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் தயாரிக்கிறேன், நீங்கள் படம் பண்ணுங்கள் என்றேன், ஆனாலும் யாரும் முன்வரவில்லை. அதனால் தான் என் மகனின் ஆசைக்காக இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஆனேன். அந்த இடைவௌிக்கு பிறகு இப்போது மீண்டும் நல்ல படம் எடுத்துள்ளோம் என எனக்கு திருப்தி கிடைத்தது. நல்ல மனைவி, மகன், மருமகள் பேரன் பேத்திகள் என சந்தோஷமான வாழ்க்கையில் இருக்கிறேன்.
புதிய இயக்குநர்களிடம் கற்று கொண்டேன்
முருகதாஸ் போன்று பல இயக்குநர்கள் இப்போது தமிழ் சினமாவில் ஜொலிக்கிறார்கள். நான், அதை செய்தேன், இதை செய்தேன் என்று பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. சொல்லப்போனால் இரண்டு வருடங்களாக வருகின்ற படங்களை பார்த்து, அதன்மூலம் சில விஷயங்களை கற்றுக்கொண்டு இந்தப்படத்தை எடுத்துள்ளேன் என்று சொல்லலாம்.
முருகதாஸ் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்
முருகதாஸின் துப்பாக்கியை விட கத்தி நல்ல படம், ஆனால் துப்பாக்கியின் திரைக்கதை என்னை பிரமிக்க வைத்தது. அவர் என்னிடமும், விஜய்யிடமும் துப்பாக்கி பட கதை சொல்லும் போதே இன்டர்வெல் காட்சியை சொன்னபோது அவரை கட்டிப்பிடித்து பாராட்டினேன். முருகதாஸ் தயாரிப்பில் நான் நடிக்கவில்லை என்றாலும், அவர் என்னை நடிகனாக அறிமுகப்படுத்த ஆசைப்பட்டேன், அதனால் தான் இந்த முயற்சி, இனி இந்தப்படத்தை பல மொழிகளிலும் எடுத்து செல்ல ஆசைப்படுகிறேன்.
இன்று வெற்றி பெற்றிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க அணி நல்ல அணி, அரசியல் கூட்டணியாக இல்லாமல், ஒற்றுமையாக செயல்பட வேண்டும். புது தயாரிப்பாளர்களுக்கும், என்னை போன்ற சிறு தயாரிப்பாளர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து அவர்களுக்கும் வாழ்வு அளிக்க வேண்டும் என பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.
இந்த விழாவில், தயாரிப்பாளர்கள் சிவா, தேனப்பன், கதிரேசன், டி.ஜி.தியாகராஜன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், கே.வி.ஆனந்த், விமலா பிரிட்டோ, சங்கீதா விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.