இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் அரிதான சில ஆளுமைகள் முரண்பாடான குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பார்கள், அந்த வரிசையில் இருந்தவர் வீணை எஸ்.பாலச்சந்தர். வீணை இசையில் குறிப்பிடத்தக்க சிறந்த கலைஞராக இருந்த அவர் ஹாலிவுட் திரைப்படங்களின் தீவிர ரசிகர். அதுவும் குறிப்பாக திகில் படங்களின் தீவிர ரசிகர். திகில் படங்களை பார்ப்பதோடல்லாமல் அதுபோன்ற படங்களை தமிழில் இயக்கியவர். 1954ம் ஆண்டு அந்த நாள் என்ற திகில் படத்தையும், 1962ம் ஆண்டு அவனா இவன் என்ற திகில் படத்தையும் இயக்கி தயாரித்தார். என்றாலும் 1964ம் ஆண்டு அவர் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த பொம்மைதான் அவருக்கு மிகப்பெரிய பெருமைய ஈட்டிக் கொடுத்தது.
கதை
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்பிரட் ஹிட்சாக் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற திகில் படங்களை எடுத்தவர். 1936ம் ஆண்டு அவர் சோபோடேஜ் என்ற திகில் படத்தை எடுத்தார். வில்லன் ஒருவன் ஒரு பொம்மைக்குள் குண்டு வைத்து ஹீரோவை கொல்ல அனுப்பி வைப்பான். அது வெடித்ததா, ஹீரோ இறந்தானா என்பது அந்த படத்தின் கதை. ஆல்பிரட் ஹிட்சாக்கின் தீவிர ரசிகரான வீணை எஸ்.பாலச்சந்தர் அதே படத்தை பொம்மை என்ற பெயரில் தமிழில் இயக்கினார். அதனை அப்படியே காப்பி அடிக்காமல் தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாறுதல்களை செய்தார். அவரது படத்தில் பொம்மையை நடக்கும் பொம்மையாக மாற்றினார். அது வில்லனால் ஹீரோவை கொல்ல அனுப்பப்பட்டாலும் ஹீரோவிடம் அது வந்து சேர்ந்ததும் வில்லனுக்கு எதிராக திரும்புவதாக காட்டினார். ஹாலிவுட் படத்தில் பொம்மைக்குள் வைக்கப்பட்ட குண்டு பஸ்சில் வெடித்து மக்கள் சாவார்கள். பொம்மை படத்தில் குண்டு காருக்குள் வெடித்து வில்லன் ஆட்கள் மட்டுமே சாவார்கள். இப்படி பல மாற்றங்களுடன் பொம்மை கதையை வடிவமைத்திருப்பார்.
ஹீரோ பாலச்சந்தர்
இந்தப் படத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு வீணை வித்வான் ஹாலிவுட் ஸ்டைலில் ஹீரோவா நடித்தது பாராட்டப்பட்டது. விஜயலட்சுமி என்பவர் ஹீரோயினாக நடித்திருந்தார். சீனிவாசன், ரமேஷ் என்று நிறைய புதுமுகங்கள் இந்தப் படத்தில் அறிமுகமானார்கள் ஆனால் அதன்பிறகு அவர்கள் யாரும் சினிமாவில் பெரிய அளவில் வரவில்லை.
சிரமமும், வெற்றியும்
படம் 1963ம் ஆண்டே தயாராகிவிட்டது. படத்தை பார்த்துவிட்டு விநியோகஸ்தர்கள் யாரும் வாங்கவில்லை. பார்க்க பயமாக இருக்கிறது மக்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க மாட்டார்கள் என்று கை விரித்து விட்டார்கள். மிகுந்த சிரமப்பட்டு 1964ம் ஆண்டு வீணை எஸ்.பாலச்சந்தரே சொந்தமாக வெளியிட்டார். ஆரம்பத்தில் தியேட்டர்கள் டல் அடித்தது. "வீணை வாசிப்பவர்கள் எல்லாம் படம் எடுத்தால் பணம் வீணாகத்தான் போகும்" என்று கடுமையாக விமர்சனங்கள் செய்தார்கள். ஆனால் இரண்டாவது வாரத்திலிருந்து மக்கள் அலை அலையாக தியேட்டருக்கு வர ஆரம்பித்தார்கள். யார் பயப்படாமல் பார்க்கிறார்கள் என்று பந்தயம் கட்டி பார்க்க ஆரம்பித்தார்கள். படம் பல தியேட்டர்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது.
பாரீஸ் கார்னர் பொம்மை
படத்தின் முக்கிய கேரக்டர் பொம்மை. இதற்காக ஒரு பொம்மை தேடி வெளிநாட்டுக்கெல்லாம் ஆள் அனுப்பினார். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் பாரீஸ் கார்னரில் ஒரு பிளாட்பார கடையில் அவர் எதிர்பார்த்த மாதிரி பொம்மை கிடைத்தது.