சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தந்த கசப்பான அனுபவங்களிலிருந்து மீண்டு, பிசாசை ரசித்து இயக்கிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். பிசாசுவின் இறுதிகட்ட வேலைகளில் பிசாசு மாதிரி வேலை செய்து கொண்டிருந்தவரோடு பேசியதிலிருந்து...
* இப்போது பேய் பட சீசன் அதுதான் நீங்களும் அந்த ஏரியாவிற்குள் வந்து விட்டீர்களா?
முதலில் இது பேய் படம் இல்லை. பிசாசு படம். மனிதர்கள் அனைவருமே பிசாசுதான். ஏதோ ஒரு பிசாசு குணம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறது. நானும் பிசாசுதான். நான் பார்த்த எல்லா பேய் படங்களிலும் பேய் மற்றவர்களை கொடுமைப்படுத்துகிறது. கொன்று சாப்பிடுகிறது. பயமுறுத்துகிறது. எல்லா நல்ல விஷயத்திலும் ஒரு கெட்டது இருக்கும். எல்லா கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும். அப்படியென்றால் நல்லது செய்யும் பேய் ஏன் இருக்ககூடாது என்று நினைத்தேன். அதுதான் பிசாசு படத்தின் மைய கரு.
* மற்ற பேய் படங்களிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்?
ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரைக்கும் பேய் படங்களுக்கென்று தனி இலக்கணம் இருக்கிறது. அது மாதிரி எதுவும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக புகழ்பெற்ற 100 பேய் படங்களுக்கு மேல் பார்த்தேன். பேய் படங்கள் பற்றிய பல புத்தகங்கள் படித்தேன். பேய் பற்றிய புத்தகங்களையும் படித்தேன். பேய் கதைகளுக்கு திரைக்கதை எப்படி அமைக்கலாம் என்ற புத்தகம் இருக்கிறது அதையும் படித்தேன். எல்லாவற்றையும் படித்துவிட்டு அதில் இல்லாத ஒரு புது விஷயத்தை இதில் பயன்படுத்தியிருக்கிறேன். படத்தை பார்த்து விட்டு வருகிறவர்களுக்கு பேயையும் ஒரு நண்பனாக பார்க்க தோன்றும்.
* பிரயாகா எப்படி?
100 பெண்களுக்கு மேல் பார்த்து அதிலிருந்து செலக்ட் ஆனவர்தான் பிரயாகா. பெரிய அழகு தேவையில்லை. ஆனால் பார்த்தவுடன் பிடிக்கிற முகமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அப்படி அமைஞ்சவங்க பிரயாகா. கேரளாவில் பெரிய டான்சர். படத்தில் அவுங்க முகம் சில காட்சிகள்தான் பளிச்சின்னு வரும் மற்ற காட்சிகளில் அவர்கள் பேயாத்தான் வருவாங்க. 60 அடி உயரத்துக்கு ரோப் கட்டி அவரை தூக்கித்தான் நிறைய காட்சிகள் படமாக்கி இருக்கோம். சுவரில் மோதி, கீழே விழந்து நிறைய காயம் பட்டிருக்காங்க. அதையெல்லாம் பெருசா நினைக்காம நடிச்சிருக்காங்க. அவுங்களோட அப்பா அம்மா, மகள் படுற கஷ்டத்தை பார்த்து அழுதாங்க. அதுக்கான பலன் கிடைக்கும்னு நம்புறேன்.
* ஹீரோ நாகா பற்றி...?
சார் என்ன என்னவேணாலும் பண்ணிக்குங்க நான் உங்க படத்துல நடிக்கணும்னு நம்பிக்கையோட வந்த பையன். ஒரு வருஷமா என்னோட ஆபீசிலேயே கிடந்தான். நான் சொல்றபடி தன்னை மாத்திக்கிட்டு வந்தான். அவனை நிறைய கஷ்டபடுத்தியிருக்கிறேன். கசக்கி பிழிஞ்சு நடிக்க வச்சிருக்கேன். இத்தனைக்கும் நாகா கோடீஸ்வர குடும்பத்து பையன். சினிமாவுக்காக அவனோட அர்ப்பணிப்பு ரொம் பெருசு.
* பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய மறுத்துட்டாராமே?
இந்தப் படத்துக்கு பி.சி சார்தான் ஒளிப்பதிவு பண்ணனும்னு விரும்பினேன். அவர்கிட்ட போய் கேட்டேன். கதையை கேட்டுட்டு "எனக்கு பெரிய சவாலா இருக்கும் நான்தான் பண்ணனும். நான் இப்போ இந்தி மற்றும் ஐ படங்களில் பிசியா இருக்கேன். அது முடிய லேட் ஆகும். என்னைவிட பெட்டரா ஒரு ஆள் சொல்றேன்"னு ரவிசங்கரனை அறிமுகப்படுத்தினார். அவர் பி.சியோட பெயரை காப்பாற்றியிருக்கார். என்னோட நம்பிக்கையை காப்பாற்றியிருக்கார்.
* இளையராஜா இல்லாததற்கு கருத்து வேறுபாடுதான் காரணமா?
அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போறதில்லையா? அதுமாதிரிதான் சில விஷயங்கள். என்றைக்குமே என் இசைத் தந்தை அவர்தான். என்னோட ஆபீஸ் தேடி வந்து வாய்ப்பு கேட்ட இளைஞன் தான் ஆரோள். வாய்ப்பை வாயால் கேட்கவில்லை. தன் கீ போர்டால் கேட்டான். அந்த கீ போர்டுக்குள் பல அற்புதங்களை வைத்திருக்கிறான். அதில் ஒரு சிலவற்றை பிசாசுக்கு கொடுத்திருக்கிறான்.
* பாலாவை எப்படி தயாரிப்பாளராக்கினீங்க?
நான் அவரை தயாரிப்பாளராக்கலீங்க. அவர்தான் என்னை கைதூக்கி கரை சேர்த்திருக்கிறார். ஒரு சந்திப்பில் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க கேட்டார். சொன்னேன். மறுநாளே ஆபீஸ் வரச் சொன்னார். ஒரு படம் பண்ணுங்க நான் தயாரிக்கிறேன்னு சொன்னார். கதைகூட கேக்கல. கொஞ்சம் அவகாசம் கேட்டு பிசாசை ரெடி பண்ணிட்டு போய் நின்னப்பா நாளைக்கே ஷூட்டிங் கிளம்புங்கண்ணார். ஒரு படைப்பாளியின் வலியை இன்னொரு படைப்பாளியாலதான் புரிஞ்சுக்க முடியும். பாலா என்னோட தயாரிப்பாளர் இல்லை. தகப்பன், நண்பன், சகோதரன், கடவுள் அதுக்கும் மேல...!
இவ்வாறு மிஷ்கின் கூறினார்.