ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவையும் ஏவிஎம் ஸ்டூடியோவையும் பிரித்து பார்க்க முடியாது. கருப்பு வெள்ளை காலத்திலிருந்து சினிமாவை தேடி சென்னை வந்த படைப்பாளிகளின் சரணாலயமாக இருந்தது ஏவிஎம். அன்று தொடங்கி இன்று வரை சினிமாவில் காவல் அரணாக ஏவிஎம் விளங்கி வருகிறது. பழைய சினிமாவுக்கும், புதிய சினிமாவுக்கும் பாலமாக இருந்து வருவதும் ஏவிஎம்தான். காலமாற்றத்துக்கு ஏற்ப சொத்து மதிப்புகள் உயர்ந்த உடன், பல ஸ்டூடியோக்கள் ஓட்டல்களாகவும், அடுக்குமாடி கட்டிடங்களாகவும், ஆஸ்பத்திரிகளாகவும் மாறிவிட்ட நிலையில், அன்று முதல் இன்று வரை சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது ஏவிஎம். ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நான்காவது தலைமுறையும் சினிமாவிற்குள் வந்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு 70 வயதாகிறது.
அதையொட்டிய ஒரு சிறப்பு பார்வை...
மயிலாப்பூரில் தொடக்கம்
இந்தியாவில் சினிமா அறிமுகமானபோது அது நம் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பி அதில் இறங்கிய மிகச் சிலபேரில் ஏவி.மெய்யப்ப செட்டியாரும் ஒருவர். 1934ம் ஆண்டுமுதல் அவர் சினிமாவில் இருந்தாலும், 1945ம் ஆண்டு அக்டோபர் 14ந் தேதிதான் ஏவிஎம் புரொடக்ஷன் நிறுவனத்தை தொடங்கினார். சென்னை மயிலாப்பூரில் வாடகை கட்டிடத்தில்தான் ஏவிஎம் நிறுவனம் தொடங்கப்பட்டது.
முதல் ஸ்டூடியோ
முதலில் ஏவிஎம் ஸ்டூடியோவை சென்னையில் ஆரம்பிக்கத்தான் மெய்யப்ப செட்டியார் விரும்பினார். ஆனால் மின்சாரம் மற்றும் தண்ணீர் தேவைக்காக காரைக்குடியில் ஆரம்பித்தார். 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந் தேதி தனது முதல் தயாரிப்பான நாம் இருவர் படத்தை வெளியிட்டார். பாரதியாரின் பாடல்களை காட்சியப்படுத்திய முதல் படம் இது. அடுத்த ஆண்டு வேதாள உலகத்தை எடுத்தார். இந்த இரண்டு படம் மட்டும்தான் காரைக்குடி ஸ்டூடியோவில் உருவானது. அதன் பிறகு ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றினார்.
175 படங்கள்
சென்னை வடபழனியில் இன்றுள்ள இடத்தில் உருவான ஏவிஎம் ஸ்டூடியோ காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் வளர்ந்து நிற்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி பெங்காலி சிங்கள மொழிகளில் 175 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது. இதில் நாம் இருவர், வாழ்க்கை, ஸ்ரீவள்ளி, வேதாள உலகம் ஆகியவை மட்டுமே ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய படங்கள் மற்றவவை அவரும் அவரது வாரிசுகளும் தயாரித்த படங்கள்.
விருதுகள்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஹம்பஞ்சிடி ஏக் டால்கே என்ற குழந்தைகள் படம் 1957ம் ஆண்டு சிறந்த குழந்தைகள் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. இந்த விருதை வழங்கியவர் அப்போதைய பிரதமர் பண்டிய ஜவஹர்லால் நேரு. அதேபோல ராஜ்கபூர் நர்கீஸ் நடித்த சோரி சோரி என்ற படம் சிறந்த இசைக்கான விருதை பெற்றது. அந்த நாள், தெய்வபிறவி, பாவ மன்னிப்பு, சர்வர்சுந்தரம் ஆகிய படங்கள் மத்திய அரசின் விருதுகளை பெற்றது. அன்னை, நானும் பெண், குழந்தையும் தெய்வமும் படங்கள் மத்திய அரசின் வெள்ளி பதக்கம் பெற்றது.
சிவாஜியின் 125வது படமான உயர்ந்த மனிதன், பாடல்களுக்காக விருது பெற்றது. சம்சாரம் அது மின்சாரம் சிறந்த ஜனரஞ்சக படத்திற்கான விருது பெற்றது. மின்சார கனவு மூன்று தேசிய விருதுகளை பெற்றது. இப்படி ஏவிஎம் தயாரிப்பில் விருது பெற்ற படங்களின் பட்டியல் நீளமானது.
பின்னணி, டப்பிங் அறிமுகம்
சினிமாவில் நடிப்பவர்கள் அப்போது நடித்துக் கொண்டே பாட வேண்டும் அதை மாற்றி முதன் முதலாக பின்னணி பாடும் முறைய அறிமுகப்படுத்தியது ஏவிஎம். அதேபோல படங்களை டப்பிங் செய்யும் முறையையும் ஏவிஎம்தான் அறிமுகப்படுத்தியது. ஹரிச்சந்திரா என்ற கன்னட படத்தை பல மொழிகளில் டப் செய்தது.
ஏவிஎம் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய கலைஞர்கள் இவர்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (பராசக்தி), லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்(பராசக்தி) டி.ஆர்.மகாலிங்கம் (ஸ்ரீவள்ளி), கமலஹாசன் (களத்தூர் கண்ணம்மா), வெஜயந்திமாலா (வாழ்க்கை), சிவகுமார் (காக்கும் கரங்கள்), நாகேஷ்வரராவ் (ஓர் இரவு), விஜயகுமாரி (குல தெய்வம்), கன்னட நடிகர் ராஜ்குமார் (பேடர கண்ணப்பா),
இயக்குனர்கள்
ப.நீலகண்டன், கே.சங்கர், பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், எஸ்.பி.முத்துராமன், இராம.நாராயணன், ராஜசேகர்.
5 முதல்வர்கள்
ஏவிஎம் நிறுவனத்தில் 5 முதல்வர்கள் பணியாற்றி உள்ளார்கள். அண்ணாதுரை (ஓர்இரவு) கருணாநிதி (பராசக்தி), எம்.ஜி.ஆர் (அன்பே வா), என்.டி.ராமராவ் (பூகைலாஸ், ராமு, சிட்டி), ஜெயலலிதா (மேஜர் சந்திரகாந் உள்பட பல படங்கள்) இவர்கள் தவிர இந்தியில் முன்னணி நடிகர்களான ராஜ்கபூர், சுனில்தத், அசோக்குமார், நர்கீஸ், மீனாகுமாரி, தர்மேந்திரா, ஜிதேந்திரா, மற்றும் தெலுங்கு கன்னட முன்னனி நடிகர்கள் அனைவரும் ஏவிஎம் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளனர்.
சின்னத்திரை
சினிமாவில் வெற்றித் தடம் பதித்த ஏவிஎம் நிறுவனம் சின்னத்திரையிலும் கொடிகட்டியது. ஒரு மனிதனின் கதை, ஒரு பெண்ணின் கதை, சொந்தம், வாழ்க்கை, மனதில் உறுதி வேண்டும் உள்பட பல சீரியல்களை தயாரித்தது. இதுவரை 14 ஆயிரம் எபிசோட்களை தயாரித்து சின்னத்திரையிலும் முன்னணி வகிக்கிறது.
இணையதளம்
கருப்பு வெள்ளை படமான நாம் இருவரில் தொடங்கிய ஏவிஎம்மின் பயணம் நான்காம் தலைமுறையின் இண்டர் நெட் படமான இதுவும் கடந்து போகும் வரை தொடர்கிறது.
சரித்திர சாதனைகள் படைத்து சினிமாவை தாங்கி நிற்கும் தூணாக இருக்கும் ஏவிஎம் நிறுவனம் நூற்றாண்டு விழா கொண்டாட வாழ்த்துவோம்.
ஏவிஎம்மின் சாதனைகளை படங்களாக காண இங்கே கிளிக் செய்யவும்...