பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
பிறந்தது செங்கல்பட்டு; நடுத்தர குடும்பம். இயக்குனர் பாலசந்தரின் "கல்யாண அகதிகள் படம் மூலம் அறிமுகமானவர். நடிகர், இயக்குனர், இலக்கிய ஆர்வலர், தமிழ் பாரம்பரிய கலைகளை கோட்பாட்டு ரீதியாக கற்றவர்; ஒட்டுமொத்த கலைகளையும் நேசிக்கத் தெரிந்தவர்... அவர் நாசர். மதுரையில், அமெரிக்கன் கல்லூரி சார்பில், சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கு "முத்தமிழ் முகாம் நடந்தது. "கலை வழி ஆளுமை தலைப்பில் நாசர் உரையாடியதில் இருந்து...
நான் பள்ளிப்படிப்பை தாண்டாதவன். என் மனைவி எம்.பில்., படித்தவர். சிங்கப்பூர் கல்வி மற்றும் சாலைகளின் தரம், நிச்சயமாக இந்தியாவைவிட மாறுபட்டிருக்கும். உங்களிடம் சில கேள்விகள்...
நாசர்: கல்வி எதற்கு?
ஆசிரியர்கள்: உலக நடப்புகள் தெரிய, தொழில் சிந்தனையை மேம்படுத்த.
நாசர்: மனித சமூக ஆரம்பகாலத்தில், கூர்மையாக கற்களை தீட்டி, மானின் தோலை கிழிக்கத்தெரிந்தவன், தன்னை சார்ந்தவனுக்கும் கற்றுக்கொடுக்க துவங்கினான். இது வெள்ளைக்காரர்கள் கொண்டுவந்த கல்வி அல்ல. ஒரு பெண் பட்டதாரி, வரதட்சணை தர தயாராக இருந்தால், ஒரு ஆண், தான் கற்ற கல்விக்கு ஈடாக வரதட்சணை வாங்கினால், அவர்களை படித்தவர்களாக ஏற்கமாட்டேன். "சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது, கடந்துசெல்பவர் என்ன படித்திருந்தாலும், கல்வியாளர் அல்ல.
குழந்தைகளுக்கு ஏன் தமிழ் கற்பிக்க வேண்டும்?
ஆசிரியர்கள்: தாய்மொழி.
நாசர்: கலாசார பன்முகத் தன்மையின் ஒரு முகம் மொழி. ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழியில் "ட் தவிர எதுவும் இல்லை. அவர்கள் பசி, காதல், சோகம், கோபத்தை காட்ட முடிகிறதே! அது, எந்த மொழிக்கும் குறைவானதல்ல. ஆடல், பாடல் போட்டியில் யார் சிறந்தவர்? என "டிவிகளில் போட்டி நடத்துகின்றனர். இது நம் கலாசாரத்துடன் இணைந்ததா? ஒரு குழந்தை முன் மற்ற குழந்தையை தாழ்த்திப் பேசுவதா நாகரிகம்? அழுகின்ற குழந்தையை "போக்கஸ் செய்து காண்பிப்பதை, ஆசிரியர்கள் தட்டிக் கேட்டீர்களா?
நாடக விஷயத்தை கல்விக்குள் கொண்டுவரவேண்டும். என் மன அழுத்தத்தை போக்க நாடகம்தான் வடிகால். நாடகம் மிகப்பெரிய கண்டுபிடிப்பு. முத்தமிழின் பிறப்பிடமான தமிழகத்தில், நாடகக்கலைக்கு முறையான கல்விக்கூடம் இல்லை. நேரடி நாடகம் மூலம், சுதந்திர உணர்வை வெளிக்கொணர முடியும். அதை கற்பித்தலில் கொண்டுவருவது அவசியம். நாடக நடிகன் உடல், குரல், மனதை "தீட்டிய கத்திபோல் வைத்திருப்பது அவசியம். ஒரு நாடக நடிகனின் தன்மையை, ஆசிரியர்களுக்குள் கொண்டுவர முடியும்.
மொழி பேசுவதால் மட்டும் தமிழராவதில்லை. சமகால தமிழ் சமூக பெருமைக்குரிய விஷயங்களை அறிந்து போற்றுவதால் மட்டுமே, ஒருவன் தமிழனாகிறான். சிறந்த எழுத்தாளர், ஓவியர், கலைஞர்களை அடையாளம் கண்டு பெருமைப்படுத்துவதுதான் தமிழனின் இயல்பாக இருக்க முடியும். வெறும் சினிமா "கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது மட்டும் அல்ல.
ஆசிரியர்கள்: உங்கள் பார்வையில் எது நல்ல தமிழ்ப்படம்?
நாசர்: சினிமாவின் பலம் வெறும் ஒரு கண்ணின் "குளோசப் ஷாட் மூலம் அந்த கதாபாத்திரம் கோபமுற்று அல்லது காமமுற்று இருக்கிறதா? என சொல்லிவிடலாம் என்ற பட்சத்தில், சினிமாவின் அடிப்படை இலக்கணம், வெளிப்பாடுகள், யதார்த்தத்தையொட்டியே இருக்க வேண்டும் என்பது வெளிப்படை நியதியாகிறது. குறைந்தபட்சம் இந்த நியதியானது கடைபிடிக்கப்பட்டால், அதுதான் நல்ல சினிமா வரிசையில் வரும். சினிமாவில் யதார்த்தம் என்பது நடிப்பு, அரங்கு, ஆடை, ஒப்பனை என அனைத்தும் இருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் கதாநாயகன் எனில், அவர் கலெக்டராக இருந்தாலும், திடீரென புரூஸ்லி அளவிற்கு வீராவேசமாக ஒரே அடியில் 100 பேரை சாய்ப்பதும், திடீரென மைக்கேல் ஜாக்சன் அளவிற்கு அற்புதமாக நியூசிலாந்து பனிமலைகளில் கதாநாயகியோடு கட்டிப்பிடித்து ஆடுவது, எந்தவகை சினிமா இலக்கணத்திலும் அடங்காது. நான் ஒருபோதும், பொழுதுபோக்கு படங்களுக்கு எதிரானவன் அல்ல. அவற்றிலும் தரம் இருக்க வேண்டும். மன அழுத்தம் இருக்கும்போது, இன்றும் "டைட்டானிக் பார்ப்பேன். இவ்வாறு கலந்துரையாடினார்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தித்தான் நாம், பார்த்திருக்கிறோம். அவர்களுக்கே ஒரு கலை, இலக்கிய ஆளுமை பாடம் நடத்தியது மாறுபட்ட அனுபவம்தான்.