பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
இன்றைய தேதியில் சினிமாவில் ரொம்ப பிஸியான பாடலாசிரியர் யார் என்றால் நிச்சயம் அது மதன் கார்கி தான். கம்ப்யூட்டர் இன்ஜினியரான கார்கி, எந்திரன் படத்திற்கு தான் முதலில் பாட்டு எழுதினார். ஆனால் அதற்கு முன்பாகவே "கண்டேன் காதலை" படம் ரிலீஸாகிவிட்டது. பின்னர் எந்திரன் படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புது சிந்தனைகளோடும், புதுப்புது வரிகளோடும் தமிழ் சினிமாவில் நம் அனைவரின் இதயத்தில் நிற்கிறார். கோ படத்தில் அவர் எழுதிய என்னமோ ஏதோ, ஏழாம் அறிவில் சீன மொழிப்பாடல், நண்பனில் அஸ்க் அஸ்க்... உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது சினிமாவில் பிஸி பாடலாசிரியராக இருக்கும் கார்கி, தினமலருக்கு அளித்த பிரத்யேக தீபாவளி பேட்டி இதோ...
* எதற்கெல்லாம் பயம்?
ஆழம், உயரம் இவை இரண்டுக்கும் பயம். அதை விட பயம், கதாநாயகனுக்கும் நாயகிக்கும் காதல் தோன்றுகிறது, இந்த சூழலில் ஒரு பாடல் என்று இயக்குனர்
சொல்லும் நொடிகள்.
* சமீபத்தில் ரசித்த பாடல் வரி...
"காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே" கடல் படத்தில் அப்பா எழுதிய வரிகள்.
* திரைத்துறையில் இருந்து வந்த பாராட்டுகளில் மறக்க முடியாத பாராட்டு எது?
நான் ஈ பாடல்களைக் கேட்டுவிட்டு கிரேசி மோகன் அவர்கள் எனக்காக எழுதிய வெண்பா
"தாயாரா தந்தையா தீந்தமிழை தந்துமக்கு
வாயார ஊட்டியது; வாரீசு - சேயாரே
யார் கீ கொடுத்தார் எதுகைக்கும் மோனைக்கும்
கார்க்கிசினி மாவை கலக்கு…!"
* இதுவரை நீங்கள் எழுதிய பாடல்களில் டாப் 10 எவை?
வாய மூடி, என்னமோ ஏதோ, இரும்பிலே ஓர் இருதயம், அஸ்க் லஸ்கா, நீ கோரினால், அழைப்பாயா, நெஞ்சில் நெஞ்சில், வீசும் வெளிச்சத்திலே, கூகுல்
கூகுல்.
* புதிய பாடலாசிரியர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர்கள் யார்?
நா முத்துக்குமார், கபிலன், தாமரை, கார்த்திக் நேத்தா.
* இந்தப் பாடலை எழுதியிருக்க வேண்டாமே என்று எந்தப் பாடலுக்காவது வருந்தியதுண்டா?
இல்லை. அப்படி எதிர்காலத்தில் வருத்தப்படுவேன் என்று தோன்றிய பாடல்களை வாய்ப்பு வரும்பொழுதே மறுத்துவிடுகிறேன். இன்னும் அழகாக எழுதியிருக்கலாம் என்று இப்பொழுதும் தோன்றும் பாடல் பூம் பூம் ரோபோடா.
* மரணத்தின் நொடிகள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
தூரத்தில் என் பாடல் எங்கோ ஒலித்துக்கொண்டிருக்க, மனைவியின் கண்களில் கடந்து வந்த அழகிய இறந்த காலத்தையும், மகனின் கண்களில் நம்பிக்கையான ஒரு
எதிர்காலத்தையும் பார்த்துக் கொண்டே…
* புதிதாக பாடல் எழுதும் ஆர்வத்தில் வரும் இளைஞர்களுக்கு என்ன சோல்வீர்கள்?
இவரைப் போல் எழுத வேண்டும் என்றோ அந்தப் பாடலைப் போல் எழுத வேண்டும் என்றோ சிந்திக்காதீர்கள்.
* நேரத்தை விரயம் செய்யும் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற இணைய தளங்களில் இருப்பதன் நன்மை என்ன?
சரியான முறையில் பயன்படுத்தினால் நன்மைகள் ஏராளம். நேரம் மிச்சப்படுத்தலாம். என் ஆராய்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு சில நொடிகளில் விடை கிடைக்கிறது. இந்த சமூக பிணையங்கள் இல்லை என்றால் பல மாதங்கள் ஆகியிருக்கும். ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவு தனி மனித அறிவை விட பெரியது. என் பாடல்களை, திட்டப்பணிகளை பல லட்சம் பேருக்கு கொண்டு சேர்க்கும் எளிமை மட்டுமல்ல, அவை பற்றிய சமூகத்தின் பார்வையையும் உடனுக்குடன் நமக்கு கிடைக்கச்செய்யும் வலிமை சமூக பிணையங்களுக்கு உண்டு.
* பழைய பாடல்கள் போல் இப்போது பாடல்கள் இருப்பதில்லை எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் கருத்து என்ன?
என் தந்தைக்கு உன்னை ஒன்று கேட்பேன் பழைய பாடல். எனக்கு சின்ன சின்ன ஆசை பழைய பாடல். என் மகனுக்கு என்னமோ ஏதோ பழைய பாடல். அது குற்றச்சாட்டு அல்ல, இளவயதில் நம்மை மயக்கிய பாடல்கள் மேல் உள்ள உடைமையுணர்வின் வெளிப்பாடு.