ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முதல் படமான ஆரோகணத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியாக இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். "மீடியாக்கள்தான் என் படத்தை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தது. அதிலும் குறிப்பாக தினமலர் போன்ற இணையதளங்கள்தான் உலக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. தினமலர் இணையதளம் விமர்சனத்தை படித்துவிட்டு உலகம் முழுவதிலுமிருந்து தொலைபேசி வாழ்த்துக்கள் கிடைத்தது" என உற்சாகம் பொங்க பேச ஆரம்பித்தார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
இப்பவாவது சொல்லுங்க பைபோலா டிசாடர் பற்றி படம் எடுக்க உங்களுக்கு தூண்டுகோலாக இருந்தது எது?
என்னோட உறவுக்கார பெண் ஒருத்தி இருந்தா. அவளுக்கு கவிதை எழுதுவது ரொம்ப பிடிக்கும், ஆனா திருமணம், வீட்டு வேலை இதுல எதுலேயும் விருப்பம் இல்லை. திடீர்னு காணாமப்போயிடுவா. கேட்டா கவிதை எழுதுறதுக்கு நல்ல இடம் தேடி மலைக்கு போனேன்னு சொல்லுவா. நாங்கள்லாம் அவளை ஒரு மனநோயாளியா பார்தோம். ஒரு நாள் அவ செத்துப்போயிட்டா. அதன்பிறகு அதை எல்லோரும் மறந்துட்டோம். ஒரு முறை இணைய தளத்தில் பைபோலா டிசாடர் பற்றி படித்தேன். அப்பதான் அந்த பெண்ணுக்கு இருந்தது மனநோய் இல்லை. பைபோலா டிசாடர்தான் என்பதை உணர்ந்தேன். அவள் கவிதைகளை ரசித்து, ஊக்கப்படுத்தியிருந்தால் நிச்சயம் அவள் ஒரு கவிதாயினியா வந்திருப்பா. எல்லோரும் அவளை பைத்தியம் என்று ஒதுக்கியதால் அவள் இறந்துவிட்டாள். இந்த நிலைமை இன்னொரு பெண்ணுக்கு வரக்கூடாதுன்னு நினைச்சேன். இந்தப் படத்தை எடுத்தேன்.
ஏன் நீங்க நடிக்கல?
ஆரம்பத்துல நான் நடிக்கிறததாத்தான் இருந்தது. காரணம் அப்போ என்கிட்ட இருந்த ஸ்கிரிப்டுல ஒரு பிராமணப் பெண்தான் ஹீரோயின். நான் நடிக்கிறதாக முடிவு பண்ணியிருந்தேன். ஒரு நாள் மார்க்கெட்டுக்கு போனப்போ ஒரு வாட்டசாட்டமான பொண்ணு தள்ளுவண்டியில தன் இரு குழந்தைகளையும் வச்சிக்கிட்டு காய்கறி வியாபாரம் பண்றதைப் பார்த்தேன். அந்த காட்சி என்னை ரொம்ப பாதிச்சுது. அப்போதே என் கதை நாயகி காய்கறி விற்கும் பெண் என்று முடிவு செய்தேன்.
விஜியை எப்படி தேர்வு பண்ணினீங்க?
காய்கறி விக்குற பொண்ணுதான் ஹீரோயின்னு முடிவு பண்ணின உடனேயே என் மனசுல வந்தது சரிதாதான். ஆனால் இப்போ அவுங்க நடிக்கிறதில்லைன்னு கேள்விப்பட்டதும். சரிதாவோட தங்கை விஜி இருக்காங்க. அவுங்களும் சரிதா மாதிரியே இருப்பாங்க. நடிப்பாங்கன்னு சொன்னாங்க. அவுங்கள போய் பார்த்தா அப்படியே என் கேரக்டரா கண்முன்னால நிண்ணாங்க. சினிமால நடிக்கிறதில்லைன்னு உறுதியா இருந்தவங்ககிட்ட கதைய கேளுங்க அப்புறம் முடிவை சொல்லுங்கன்னு சொன்னேன். கதை கேட்டதும் ஷூட்டிங் எங்கே எப்போன்னு மட்டும் சொல்லுங்க அங்க வந்து நான் நிக்குறேன்னு சொன்னாங்க.
படப்பிடிப்பு அனுபவங்கள்...?
நிறைய இருக்கு. ஒரு வீராப்புல படத்தை ஆரம்பிச்சிட்டேன். எனக்கு டைரக்ஷன்ல ஏபிசிடிகூட தெரியாது. ஷாட்டை எப்படி வைக்கிறதுன்னுகூட தெரியல. ஒவ்வொரு சீனையும் பாலச்சந்தார் சார் எப்படி வைப்பார், மணிரத்னம் சார் எப்படி வைப்பார்னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு வச்சு எடுத்துக்கிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல அதுவும் குழப்பமாகி மிஷ்கின் சாரோட உதவியை கேட்டேன். அவரு நேரா படப்பிடிப்பு நடக்குற இடத்துக்கே வந்தார். "இத பாருங்க மேடம் நான் எதுவும் சொல்லித்தர மாட்டேன். காரணம் சினிமாங்றது எந்த இலக்கண விதிக்குள்ளும் வராது. அவரு மாதிரி ஷாட் வைக்கலாமா, இவரு மாதிரி வைக்கலாமான்னு யோசிக்காதீங்க. உங்களுக்கு தோணுற மாதிரி வையுங்க. அதுதான் புதுசா இருக்கும், உண்மையா இருக்கும், நல்லா இருக்கும்"னு சொல்லிட்டுபோனார். அதுக்கு பிறகுதான் மனசு தெளிவாகி படத்தை எடுத்து முடிச்சேன்.
நிறைய இடத்துல கேண்டிட் கேமரா மூலமா ஷூட் பண்ணினோம். கேமரா இருக்குறது யாருக்கும் தெரியாது விஜி காய்கறி விற்கும்போது நிறைய பொண்ணுங்க அவுங்கள நிஜ வியாபாரியா நினைச்சு காய்கறி வாங்கினாங்க. அதை அப்படியே படம் பிடிச்சோம். கபாலீஸ்வரர் கோவில் வாசல்ல பிச்சை எடுக்க வச்சோம். நிறைய பேரு நிஜ பிச்சக்காரின்னு நினைச்சு காசு போட்டுட்டு போனாங்க. ஒரு பிச்சைக்காரி புது ஏரியாவுக்குள்ள நீ எப்படி வரலாமுன்னு சண்டையே போட்டாங்க. இப்படி நிறைய இருக்கு.
மறைக்காம உண்மைய சொல்லுங்க படத்தோட பட்ஜெட் என்ன?
இதுல மறைக்றதுக்கு எதுவுமே இல்லை. இதுக்கு முன்னாடி கேட்டப்போ நான் சொல்லலை காரணம் படத்தோட வியாபாரம் பாதிக்குங்றதால. இப்போ சொல்றேன் படத்தோட பட்ஜெட் 34 லட்சம். 36 லட்சத்துக்கு பிளான் போட்டு 2 லட்சம் குறைவாகவே முடிச்சேன். ஆனா படத்தோட விளம்பரத்துக்கும் இதே அளவு செலவு செய்தனர் படத்தை வாங்கிய நிறுவனத்தினர். இப்போ படத்தோட சேட்டிலைட், வெளிநாட்டு ரைட்சே இந்த தொகையை சரிக்கிட்டிருச்சு. தியேட்டர்ல வர்றது லாபம். சினிமா எடுக்குறதும் லாபம் சம்பாதிக்றதும் சிம்பிள். ஆனா கதையில உயிர் இருக்கணும். அப்பதான் படம் ஜெயிக்கும்.
இடையில சில மோதல்கள் நடந்ததே?
அந்த கசப்பான அனுபவங்களை சொல்றதுல எந்த லாபமும் இல்லை. இருந்தாலும் மற்றவங்களுக்கு என் அனுபவம் பாடமா இருக்கட்டுங்றதுக்காக சொல்றேன். நான் படம் இயக்க ஆரம்பிச்சதுமே இயக்குனர் சங்கத்துலேருந்து வந்து நீங்க சங்க உறுப்பினராகணும்னு சொன்னாங்க. நான் இயக்குனரான்னு எனக்கே தெரியாது ஒரு படம் இயக்குறேன். மக்கள் என்னை இயக்குனரா அங்கீரிச்சுட்டா சங்கத்துல சேர்றேன்னு அவுங்க சமாளிச்சேன். அடுத்து படப்பிடிப்பு நடக்குற இடத்துக்கு ஏதோ இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்துற மாதிரி பெப்சி நிர்வாகிகள் வந்தாங்க. பெப்சி அல்லாதவங்களை வச்சு படம் எடுக்றீங்கன்னு சண்டை போட்டாங்க. இது சின்ன படம் ஒரு நாளைக்கு 50 ஆயிரம்தான் செலவு பண்ணமுடியும்னு அவுங்ககிட்ட கெஞ்சாத குறையா சொல்லி அப்புறம் கொஞ்சம் பெப்சி ஆளுங்களை வச்சி வேலைய முடிச்சேன். எல்லாம் முடிஞ்சு வெளியில வந்தேன். ஒரு நிறுவனம் படத்தை வாங்குச்சு. அந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களோட கொடுக்கல் வாங்கல்ல ஏதோ பிரச்சினை இருந்திருக்கு. நாளைக்கு படம் ரிலீசுன்னா இன்னிக்கு படத்தை வெளியிட பிரிண்ட் கொடுக்காதீங்கன்னு தயாரிப்பாளர் சங்கத்துலேருந்து ரியல் இமேஜ் நிறுவனத்துக்கு லட்டர் அனுப்பினாங்க. அதையும் ஒரு வழியா சமாளிச்சு படத்தை ரிலீஸ் பண்ணினேன். என்னோட பட அனுபவங்களை வச்சே ஒரு படம் இயக்கலாம். அத்தனை இருக்கு.
பைபோலா டிசாடரால பாதிச்சவங்களா வெளிநாட்டுக்காரங்களை காட்டுறீங்க. இந்தியாவுல யாரும் இல்லையா?
நிறைய பேர் இருக்காங்க. ஆனா அதை யாரும் வெளியில சொல்லிக்றதில்லை. காரணம் அதை ஒரு மனநோயா பார்க்குறாங்க. எனக்கும் கூட அந்த பாதிப்பு இருக்கு. ஆனா அதோட சதவிகிதம் குறைவா இருக்கும்.
அடுத்த படம்?
ஒரு ஆக்ஷன் ஸ்டோரி, ஒரு ஆழமாக லவ் ஸ்டோரி கைவசம் இருக்கு. இரண்டுக்கும் தயாரிப்பாளர்கள் ரெடி. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பேமிலி பங்ஷன் இருக்கு. என் மூத்த பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன். அது முடிந்ததும் பட வேலையை ஆரம்பிப்பேன். படம் இயக்கினாலும் தொடர்ந்து நடிப்பேன்.
மாமியார் ஆகப்போறதுக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்!