பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
தமிழ் நாட்டில் மிகவும் பழமையான நாடக சபாக்களில் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ் என்ற அமைப்பும் ஒன்று. வெவ்வேறு பணிகளில் இருந்தாலும் நடிப்பு ஆர்வமிக்கவர்களால் பகுதி நேர நடிப்புக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இது. சுங்க இலாகா அதிகாரியாக இருந்த ஒய்.ஜி.பார்த்தசாரதியால் தொடங்கப்பட்டது. இப்போது 60 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறது. ஒய்.ஜி,மகேந்திரன் இப்போது தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அமைப்பு தொடங்கி 60 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில் நாரதகான சபாவில் வருகிற 23ந் தேதி முதல் 30ந் தேதி வரை நாடக விழா ஒன்றை நடத்துகிறார். இதுகுறித்து தினமலர் இணைய தளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
* தமிழ் நாட்டில் தொடங்கப்பட்ட பல நாடக அமைப்புகள் மறைந்து விட்ட நிலையில் உங்கள் அமைப்பு மட்டும் 60 ஆண்டுகளை கடந்திருப்பது எப்படி?
அது எங்கப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதை, ஒழுக்கம், தொழில் பக்தி இவைதான் காரணம். நடிப்பை ஒரு புண்ணியகாரியமாக நானும் எனது குடும்பமும் பார்க்கிறோம். சினிமாவில் லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் இன்னமும நாடகத்தை விடாமல் இருக்கிறோமே அதுதான் பக்தி. நான் முழுமையான நடிகன் என்பது எல்லோருக்கும் தெரியும். என் மனைவி சுதாவும் ஒரு நடிகை என்பது பலருக்குத் தெரியாது. ஒருமுறை நாகடத்தில் எனக்கு அன்னியாக நடிக்க வேண்டிய ஒரு நடிகைக்கு உடல்நலமில்லாமல் போய்விட்டது. உடனே அந்த கேரக்டருக்கு தன் மருமகளை தயார் செய்து விட்டார் எங்கப்பா. அன்றிலிருந் அவள் எமர்ஜென்சி நடிகையானாள். ஒரே நாள் இரவில் அத்தனை வசனத்தையும் மனப்பாடம் செய்து மறுநாள் நடிக்க கூடியவள். இப்போது என் மகள் மதுவந்தி அருண் ஒரு நாடகத்தை எழுதி நடித்துக் கொண்டிருக்கிறாள். இந்த அமைப்பின் 100வது ஆண்டு விழாவின் போது இதேபோன்ற என் மகள் பேட்டி கொடுப்பாள். இந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் இந்த அமைப்பை காத்து வருகிறது.
* இந்த அமைப்பின் மூலம் சினிமாவுக்கு சென்றவர்கள் யார்?
நிறைய இருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அம்மா சந்தியா எங்கள் அமைப்பில் நடித்தவர்தான். எங்கப்பாவுக்கு ஜோடியாக பல நாடகங்களில் நடித்திருக்கிறார். அதேபோல ஜெயலலிதா அவர்கள் எனக்கு ஜோடியாக பல நாடகங்களில் நடித்திருக்கிறார். ஜெயலலிதா முதன் முதலாக ஹீரோயினாக நடித்த அண்டர் செகரட்டரி நாடகத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் யார் தெரியுமா சோ. அடுத்து ஜெயலலிதா நடித்தது ஒரு ஆங்கில நாடகத்தில் அதில் அவருக்கு வில்லனாக நடித்தார் சோ. லட்சுமியின் அம்மா ருக்மணி எங்கப்பாவுக்கு ஜோடியாக நடித்தார். லட்சுமி எனக்கு ஜோடியாக நடித்தார். இவர்கள் தவிர வியட்நாம் வீடு சுந்தரம், மவுலி, நாகேஷ், விசு இப்படி நிறையபேர் எங்கள் அமைப்பிலிருந்து சினிமாவுக்குச் சென்றவர்கள். வியட்நாம் வீடு சுந்தரம், கவுரவம் படங்கள் எங்கள் நாடகமாக இருந்து சினிமாவானது. இப்படி நிறைய சாதனைகள், பெருமைகள் உண்டு.
* நாடகத்துறை நசிந்து விட்டதாக கூறப்படுகிறதே?
நிச்சயமாக இல்லை. எல்லா துறையிலும் ஒரு தேக்கம் இருப்பதைபோல நாடகத்துறையிலும் தேக்கம் இருக்கிறது அவ்வளவுதான். இப்போதும் நான் மட்டுமே ஆண்டுக்கு 100 நாடகங்கள் நடத்துகிறேன். எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல்லாகத்தான் நடக்கிறது. தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் கோவில் விழாக்களில் இப்போதும் நாடகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
* சினிமா நடிகர், நடிகைகள் நாடகத்தை கண்டுகொள்வதில்லையே?
இது உண்மைதான். நாடகத்தை குறைத்து மதிப்பிடும் போக்கு சினிமாவில் இருக்கிறது. அதையும் தாண்டி, கே.பாலச்சந்தர், கமல் போன்றவர்கள் நாடகத்தை நேசிக்கிறார்கள். வாய்ப்பு வரும்போது நாடகத்தில் நடிக்கிறார்கள், இயக்குகிறார்கள்.
* சினிமாவும், நாடகமும் இணையவே முடியாதா?
இணைய வேண்டும், சினிமாவின் தாய் நாடகம். தாயும், பிள்ளையும் சேர்ந்துதானே இருக்க வேண்டும். சினிமா நடிகர்களாக இருந்தாலும், மும்பையிலும், கேரளாவிலும் நாடகத்தில் நடிப்பார்கள். அதன் மூலம் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வார்கள். ஒரு நடிகனோ, நடிகையோ தங்களது உண்மையான திறமையை நிரூபிக்க வேண்டுமானால் அவர்கள் நாடக மேடைக்குத்தான் வரவேண்டும். நேரடியாக கிடைக்கும் கைதட்டலும், அனுபவமும சினிமாவில் அவர்களுக்கு கைகொடுக்கும்.
* சினிமாவின் வளர்ச்சிதான் நாடகத்தின் தளர்ச்சிக்கு காரணமா?
சினிமா எங்கே வளர்ந்திருக்கிறது. 100 படம் வெளிவந்தால் 10 படங்கள்தான் வெற்றி பெறுகிறது. வெறும் எண்ணிக்கையை வைத்து சினிமா வளர்ந்து விட்டதாக கருத முடியாது. ஆனால் நாடகம் வளர்ந்திருக்கிறது. கதையில், தொழில்நுட்பத்தில் புதிய புதிய பரிமாணங்களில் நாடகம் வளர்ந்திருக்கிறது. அதை அரங்கில் வந்து நாடகத்தை பார்க்கும்போதுதான் தெரியும்.
* ஒரு படம் நன்றாக இல்லாவிட்டால் நாடகம் மாதிரி இருக்கிறது என்கிறார்கள். ஒரு நடிகர் நன்றாக நடிக்காவிட்டால் நாடகத்தனமாக நடிக்கிறார் என்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறார்கள்?
நானும் அதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பல பத்திரிகை விமர்சனங்களில் கூட இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நாடகங்கள் என்றால் தூய தமிழ் பேசும் சரித்திர நாடகங்களே இவர்கள் நினைவுக்கு வருகிறது. யதார்த்தமான, சினிமாவை விட அதிக திருப்பம், செண்டிமெண்ட் நிறைந்த நாடகங்கள் நிறையவே இருக்கிறது. சினிமாவில் தவறாக நடித்தால் அடுத்த டேக் போகலாம். நாடகத்தில் அது சாத்தியமில்லை. நாடகத்தில் குளோஸ்-அப் கிடையாது. அதனால் எல்லா உணர்வுகளையும் உடல்மொழியில் வெளிப்படுத்த தெரிய வேண்டும். நாடகத்தில் நடிப்பதுதான் மிகவும் சிரமமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
* உங்கள் அமைப்பின் அடுத்த கட்டம் என்ன?
இன்றைய இளைஞர்களை நாடகத்தை நோக்கி திருப்ப வேண்டும். பார்க்கவும், பங்கேற்கவும், திரைப்பட நட்சத்திரங்களை நாடகத்திற்குள் கொண்டு வரவேண்டும். சினிமாவும், நாடகமும் கலைக்கு இரண்டு கண்கள் என்ற எண்ணத்தை பதிவு செய்ய வேண்டும். இப்படி நிறைய இருக்கிறது.