Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஹாலிவுட் படங்களில் நடிப்பேன்: சரத்குமார் சிறப்பு பேட்டி...!

I will soon in hollywood says sarath kumar in Special interview
தமிழ் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த சரத்குமார். பழசிராஜாவின் வெற்றிக்குப் பிறகு மலையாளத்தில் பிசியானார். அதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற டிராபிக் படத்தின் தமிழ், மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். அவரின் சிறப்பு பேட்டி:

* மலையாள டிராபிக்கில் நடிக்க மறுத்துவிட்டு இப்போது அதன் ரீமேக்கில் நடிக்கிறீர்களே ஏன்?


டிராபிக் படம் மலையாளத்தில் உருவானபோது அதில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது அவர்கள் கேட்ட தேதியை வேறொரு படத்திற்கு கொடுத்திருந்ததால் நடிக்க முடியவில்லை. அதில் நான் விரும்பிய போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு வேறொருவரை முடிவு செய்திருந்தார்கள். அதனால் இப்போது நானே அதை தமிழில் ரீமேக் செய்து நான் விரும்பிய போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன்.

* தமிழ் நாட்டில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். இப்போது தமிழில் எடுக்கிறீர்கள், கதையில் மாற்றம் இருக்குமா?

மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞனின் இருதயத்தை எடுத்து ஒரு குழந்தைக்கு பொருத்திய சம்பவம்தான் கதை. இருதயத்தை எடுத்து அதை வேகமாக கொண்டு சென்றதுதான் திரைக்கதை. ஒவ்வொரு கேரக்டருக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும். மரணம் அடைந்த இளைஞனின் தாயாக என் மனைவி ராதிகாவும், தந்தையாக பிரகாஷ்ராஜூம் நடிக்கிறார்கள், இயக்குனர் சேரன் ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கிறார். இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சென்னை டிராபிக்கில் படம் எடுக்க முடியாது என்பதால் கதையை சென்னை-வேலூர் என்று மாற்றி இருக்கிறோம். இதுதவிர சின்ன, சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறோம். சாலைவிதிகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கம்.

* உடல் உறுப்பு தானம் பற்றியும் படம் பேசும்தானே...?

கண்டிப்பாக. சாலை விதிகள், உடல் உறுப்புதானம் இரண்டையும் வலியுறுத்தும் படம். நான் எப்போதுமே சாலை விதிகளை மதிப்பவன். குருவாயூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கு என் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக எழுதிக் கொடுத்திருக்கிறேன். நான் ஒரு மருத்துவ நிறுவனத்தின் விளம்பர அம்பாசிடராக இருக்கிறேன். அவர்கள் எனக்கு அன்பளிப்பாக கொடுக்கும் கருவிகளையும், பணத்தையும் மருத்துவ சேவை செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கி விடுகிறேன். அதனால் இந்தப் படத்தை உருவாக்கும் முழு தகுதியும் எனக்கு உண்டு.

* தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே நடிக்கிறீர்களே?

இது நானே எதிர்பார்க்காத ஒன்று. தமிழ் படங்கள்தான் என் எல்லைக்கோடு என்று இருந்தேன். ஆனால் திடீரென்று மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பிசியாகிவிட்டேன். மற்றமொழி ரசிகர்களுக்கும் என்னை பிடித்துப்போனதில் ரொம்பவே மகிழ்ச்சி. மக்களுக்கு அறிவுரை சொல்லும் கேரக்டர்கள் என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறார்கள். நானும் ஹீரோ என்றில்லாமல் நல்ல கேரக்டர் எது கிடைத்தாலும் நடித்து விடுகிறேன். மைனா என்ற கன்னடப் படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். ஓய்வு பெற்ற பிறகு 30 கொலைகள் செய்த ஒரு கொலையாளி பற்றி ஆய்வு செய்து அவன் நல்லவனா கெட்டவனா என்று கண்டுபிடிக்கும் வித்தியாசமான கேரக்டர்.

* இந்திப் படத்தில் நடிப்பீர்களா...?


அப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அது இன்னும் முடிவாகவில்லை. எனக்கு நன்றாக இந்திப் பேசத் தெரியும் அதனால் விரைவில் நடிப்பேன். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கி விட்டது. தமிழ் சினிமாவை ஹாலிவுட் இயக்குனர்கள் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் கமலை ஹாலிவுட் அழைத்திருக்கிறது. தமிழ் சினிமாவும், ஹாலிவுட் சினிமாவும் நெருங்கி வரும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. அதனால் நானும் ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

* கோச்சடையானில் என்ன கேரக்டர்?

கேரக்டர் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. அதைப்பற்றி இயக்குனர் ஐஸ்வர்யாவிடம்தான் கேட்க வேண்டும். எனது போர்ஷன் முடிந்து விட்டது. டப்பிங் மட்டுமே பாக்கி உள்ளது. ரஜினியுடன் நடித்தது நல்ல அனுபவம். கோச்சடையான் எனக்கு முக்கியமான படமாக இருக்கும்.

* சூரியன் படத்தை ரீமேக் செய்கிறார்களாமே?

அப்படியா, அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனர் பவித்ரனுக்கு எனது வாழ்த்துக்கள். சூரியன் படத்தை ரீமேக் செய்வதை விட அதை டிஜிட்டல்படுத்தி மறு வெளியீடு செய்வது சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

* ஒரு நாவலை படமெடுக்கும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறதே?

சமீபத்தில் ஒரு நாவல் படித்தேன். அதில் வரும் கேரக்டர் என் சொந்த மேனரிசங்களை பிரதிபலிப்பதாக இருந்தது. குறிப்பாக நான் டென்ஷன் ஆனால் நிறைய தண்ணீர் குடிப்பேன், எப்போதும் பிளாக் காப்பிதான் சாய்ஸ், எந்த சூழ்நிலையிலும் புன்னகையை இழக்க மாட்டேன். அந்த நாவல் கேரக்டரும் அப்படியே, அதனால் அந்த கேரக்டரை மட்டும் எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி ஒரு கதை உருவாக்கும்படி சில நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். அந்த பணி முடிந்ததும், நாவல் எது? கேரக்டர் என்ன என்பதைப் பற்றிச் சொல்கிறேன்.

Tags »
Sarathy kumar, Special interview, சரத்குமார், சிறப்பு பேட்டி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in