கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தமிழ்த் திரையுலகத்திற்கு, ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும் மாதம் சிறப்பான ஒரு மாதமாக இருக்கும். மற்ற பண்டிகை நாட்களை விட தீபாவளிக்கு வரும் திரைப்படங்களுக்கு அதிகமான வசூல் கிடைக்கும். அந்த நாளில் வெளியாகும் படங்களைப் பார்க்க ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். அதனால்தான் பலரும் அந்த நாளில் தங்களது படங்களை வெளியிட விரும்புவார்கள்.
இந்த வருட தீபாவளி நவம்பர் 6ம் தேதி வந்தது. ஆனால், அன்றைய தினம் மூன்றே படங்கள் தான் வெளிவந்தது. விஜய் நடித்த 'சர்கார்' படம் வந்ததால் மற்ற படங்கள் வந்தது கூட பலருக்குத் தெரியாமல் போனது. மாதத்தின் முதல் வாரத்தில் வந்த 'சர்கார்' படத்தாலும், மாதத்தின் கடைசியில் வெளிவந்த '2.0' படத்தாலும் நவம்பர் மாதம் பல கோடி வசூலித்த மாதமாக அமைந்தன. பல கோடி என்றால் சாதாரணத் தொகை அல்ல சுமார் 800 கோடி.
'சர்கார்' படம் மட்டுமே 250 கோடி வசூலித்துள்ளது என்கிறார்கள். 2.0 படம் 550 கோடி வசூலித்திருக்கும். நவம்பர் மாதம் வெளிவந்த 17 படங்களில் இந்த இரண்டு படங்கள் மட்டுமே 800 கோடியை வசூலித்தது, இதுவரை தமிழ்த் திரையுலகத்தில் ஒரே மாதத்தில் வசூலான சாதனைத் தொகையாக இருக்கும். மற்ற படங்கள் 15 படங்கள் 20 கோடியை வசூலத்திருந்தால் அதுவே சாதனைதான்.
2018ம் ஆண்டின் நவம்பர் மாதம் புரிந்த இந்த வசூல் சாதனை அடுத்த ஐம்பது வருடங்களில் முறியடிக்கப்படுமா என்பது சந்தேகம்தான். இனிமேலும் 2.0 படம் போல 500 கோடி ரூபாய் செலவு செய்து தமிழில் வேறு யாராவது படம் எடுக்க வருவார்களா என்பது சந்தேகம்தான்.
டிசம்பர் 6ம் தேதி 'சர்கார், பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'சர்கார்' படம் எதிர்பார்த்த அளவிற்கு தரமான படமாக இல்லை என்றாலும் வசூலில் நிறைவான படமாக இருந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. அப்படியே ஒரு சில ஏரியாக்களில் நஷ்டம் வந்தாலும் அது குறைவான நஷ்டமாகவே இருக்கும் என்கிறார்கள். 'சர்கார்' படம் வந்தாலும் பரவாயில்லை என வெளிவந்த 'பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை' தெரிந்தே சூடு போட்டுக் கொண்டார்கள்.
நவம்பர் 16ம் தேதி 'காற்றின் மொழி, திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா' ஆகிய படங்கள் வெளிவந்தன. ஹிந்தி பட ரீமேக்காக வந்த 'காற்றின் மொழி' பெரிய வரவேற்பையும், பெரிய வெற்றியையும் பெறவில்லை. திருமணத்திற்குப் பின் நடிக்க வந்த ஜோதிகாவிற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பைத் தரவில்லை என்பதையே இந்தப் படம் காட்டுகிறது.
தொடர்ந்து தன் படங்களுக்கு எதிர்மறையான தலைப்பைத் தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி, 'திமிரு புடிச்சவன்' படத்தின் மூலம் தன்னுடைய தொடர் தோல்வியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 'பிச்சைக்காரன்' படம் போல மீண்டும் ஒரு வெற்றி வந்தால்தான் அவரால் நடிகராக நிலைக்க முடியும் என்பதே உண்மை. 'உத்தரவு மகாராஜா' பட வெளியீட்டுச் சிக்கலால் விஷாலுடன் மிக நெருக்கமாக இருந்த உதயா இப்போது எதிரியானதுதான் மிச்சம்.
நவம்பர் 23ம் தேதி “கரிமுகன், கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பட்டினப்பாக்கம், சகவாசம், செய், செம்மறி ஆடு, வண்டி” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் இரண்டு படங்களை மட்டுமே கொஞ்சமாவது ஓட வைக்க வேண்டும் என அதன் தயாரிப்பாளர்கள் நினைத்தார்கள். அவை 'செய், வண்டி'. மற்ற படங்களுக்கு அதன் தயாரிப்பாளர்கள் அதைக் கூட நினைத்த மாதிரி தெரியவில்லை. மிதமிஞ்சிய பணம் இருந்தால் அதை கஜா புயல் நிவாரண நிதிக்கு கொடுத்தாவது உதவலாம். ஏன், இப்படி படம் எடுத்து பணத்தை விரயம் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
நவம்பர் 29ம் தேதி ரஜினிகாந்த் நடித்த பிரம்மாண்டப் படைப்பான 2.0 படம் வெளிவந்தது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட் படம். அழுத்தமான கதை இல்லாதது படத்திற்கு மிகப் பெரிய மைனஸ் பாயின்டாக அமைந்தது. பண்டிகை நாளில், விடுமுறை நாளில் வெளிவராதது ஆகியவை இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள். இருப்பினும் தெலுங்கு, ஹிந்தி, வெளிநாடுகள் என 2.0 படம் தமிழ் சினிமா வரலாற்றில் புதிய வசூல் சாதனையை ஏற்படுத்தி வருகிறது.
நவம்பர் மாதத்தின் துவக்கம் விஜய் படத்தாலும், முடிவு ரஜினி படத்தாலும் இரண்டே படங்களால் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
2018ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். நவம்பர் மாதம் முடிய சுமார் 157 படங்கள் வெளிவர உள்ளன. கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் 5 படங்கள் வெளிவந்துள்ளன. டிசம்பர் மாதத்தில் மீதமுள்ள மூன்று வாரங்களில் சுமார் 25 படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களைப் போல இந்த வருடமும் 200 படங்கள் வெளியாகும் சூழ்நிலை இல்லை. மார்ச், ஏப்ரல் மாதங்களில் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய ஸ்டிரைக்கால் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. அந்த மாதங்களில் படங்களை வெளியிட்டிருந்தால் இந்த வருடமும் 200 படங்களைக் கடந்திருக்கும்.
டிசம்பர் மாதத்திலும் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. 2018ம் வருடத்தில் எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு இந்த கடைசி மாதத்தில் அதிகமான படங்கள் வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
நவம்பர் மாதம் வெளியான படங்கள்
நவம்பர் 6 : பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை, சர்கார்
நவம்பர் 16 : காற்றின் மொழி, திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா
நவம்பர் 23 : கரிமுகன், கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பட்டினப்பாக்கம், சகவாசம், செய், செம்மறி ஆடு, வண்டி
நவம்பர் 29 : 2.0