பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் இளைஞர்களைக் கவரும் விதத்தில் வரும் படங்கள் மட்டுமே ரசிகர்களின் வரவேற்பைப் பெறுகின்றன. மற்ற படங்களை ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து பார்க்க விரும்புவதில்லை என்ற ஒரு தகவல் பரவலாகப் பரவியது.
மேலும், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும், யு டியூப் போன்ற வீடியோ தளங்களிலும் டிரென்டிங்கில் வரும் படங்கள்தான் ரசிகர்களைக் கவர்கின்றன என்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதற்குப் பின்னணியில் சிலர் செயல்படுவதாகவும் திரையுலகினர் சிலர் சொல்கிறார்கள். ஆனால், டிரென்டிங்கிற்கும், படங்களின் வெற்றிக்கும், வசூலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பல படங்கள் நிரூபித்திருக்கின்றன.
சில நடிகர்களும், நடிகைகளும், சில தயாரிப்பு நிறுவனங்களும் சமூக வலைத்தளங்களில் அவர்களுடைய படங்கள் டிரென்டிங்கில் வருவதை பெரிய இமேஜ் ஆக கருதுகிறார்கள். அதனாலேயே இதற்காகவே சிலரை நியமித்து, செலவு செய்து அந்த டிரென்டிங்கை உருவாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
சினிமா என்பது இளைஞர்களுக்கானது மட்டுமல்ல, அது அனைத்துவிதமான ரசிகர்களுக்குமானது என்பதை கடந்த மாதம் வெளிவந்த சில படங்கள் ஆணித்தரமாமக உணர்த்தியிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணமாக கார்த்தி நடித்து வெளிவந்த 'கடைக்குட்டி சிங்கம்' படம் அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றி இளைஞர்களுக்காக மட்டுமே சினிமா என்பதை மாற்றி அனைவருக்குமானது தான் சினிமா என்ற பழைய பாதையை மீண்டும் ஒரு புதிய பாதையாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
ஜுலை மாதத்தில் 6ம் தேதியன்று 'இட்லி, காசு மேல காசு, மிஸ்டர் சந்திரமௌலி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'மிஸ்டர் சந்திரமௌலி' ஓரளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. கார்த்திக், அவருடைய மகன் கௌதம் கார்த்தி முதல் முறையாக இணைந்து நடித்ததால் அந்த எதிர்பார்ப்பு. ஆனால், சுவாரசியமில்லாத கதையும், விறுவிறுப்பில்லாத திரைக்கதையும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. 'இட்லி' படம் சரியாக சமைக்கப்படவில்லை, 'காசு மேல காசு' படத் தயாரிப்பாளருக்கு முதலீடு செய்த காசை எண்ணி நிச்சயம் மனம் வருந்தி இருப்பார்.
ஜுலை 12ம் தேதி 'தமிழ்ப் படம் 2' வெளியானது. 2010ம் ஆண்டு வெளிவந்த முதல் பாகத்திற்குப் பிறகு 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பாகம் வந்தது. முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் இரண்டாம் பாகமும் டீசரால் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை ஓட வைத்துவிட்டது. படத்தை வாங்கியவர்களுக்கும் நல்ல லாபம் என்பதுதான் திரையுலகினரின் தகவல்.
ஜுலை 13ம் தேதி 'கடைக்குட்டி சிங்கம்' படம் வெளிவந்தது. பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி என மிகப் பெரும் நட்சத்திரப் பட்டாளம் படத்தில் நடித்தது. படம் வெளியான அன்று இந்தப் படத்தை டிவி சீரியல் என கிண்டலடித்தவர்கள் பல பேர். ஆனால், தமிழ்நாடு முழுவதும் குடும்பத்தினர் அனைவரையும் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வர வைத்ததில் இந்த சிங்கத்திற்கு மிகப் பெரும் பங்கு என தியேட்டர்காரர்களே மகிழ்ச்சியடைந்து தெரிவித்தார்கள். ரசிகர்கள் ரசிக்கும்படியான படத்தைக் கொடுத்தால் மக்கள் நிச்சயம் தியேட்டர் பக்கம் வருவார்கள் என்பதை நிரூபித்த படம் இது.
ஜுலை 20ம் தேதி 'போத, மாயா பவனம், ஒண்டிக் கட்ட, விண்வெளி பயணக் குறிப்புகள்' ஆகிய படங்கள் வெளிவந்தன. சினிமா எடுக்கும் ஆசை இருந்தால் மட்டும் போதாது அதை சினிமாவாகவும் எடுக்க வேண்டும் என இப்படங்களை உருவாக்கியிவர்களுக்கு யாராவது வகுப்பு எடுத்தால் நல்லது.
ஜுலை 27ம் தேதி 'பிரம்மபுத்ரா, ஜுங்கா, மோகினி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் விஜய் சேதுபதி நடித்த 'ஜுங்கா' படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதி இம்மாதிரியான படங்களிலும், கதாபாத்திரங்களிலும் ஏன் நடிக்கிறார் என்று கேள்வியை எழுப்பிய படம். நகைச்சுவை என்ற பெயரில் இப்படிப்பட்ட மக்கள் மனதில் பதியாத படங்களில் நடித்து விஜய் சேதுபதி அவருடைய பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றே பலரும் நினைக்கிறார்கள்.
த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் 'மோகினி'. இப்படத்தை பெயருக்கு வெளியிட்டுவிட்டு அத்துடன் தங்கள் வேலையை நிறுத்திக் கொண்டார்கள் படக்குழுவினர். த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளை நடிக்க வைத்துவிட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவிடாமல் அவர்களே தடுப்பதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. பாவம் த்ரிஷா, தனியாக நடித்து, நயன்தாரா அளவிற்கு அவரால் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை.
ஜுலை மாதத்தில் 12 படங்கள் மட்டுமே வந்திருந்தாலும் , 'தமிழ்ப் படம் 2, கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு படங்கள் குறிப்பிடத்தக்க பிரமாதமான வெற்றியைப் பெற்றுள்ளன. 'ஜுங்கா' படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது. எந்தப் படம் வெற்றி பெறும், எந்தப் படம் ஓடாது என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு ஜுலை மாதம் சிறந்த உதாரணம்.
கடந்த ஏழு மாதங்களில் 80க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஐந்து மாதங்களில் அதே அளவு படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் பல பெரிய படங்கள் வெளிவர உள்ளன. அவற்றால் படங்களின் வரவேற்பும், வசூலும் அதிகரிக்கலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
ஜுலை மாதம் வெளிவந்த படங்கள்
ஜுலை 6 : இட்லி, காசு மேல காசு, மிஸ்டர் சந்திரமௌலி
ஜுலை 12 : தமிழ்ப் படம் 2
ஜுலை 13 : கடைக்குட்டி சிங்கம்
ஜுலை 20 : போத, மாயா பவனம், ஒண்டிக் கட்ட, விண்வெளி பயணக் குறிப்புகள்
ஜுலை 27 : பிரம்மபுத்ரா, ஜுங்கா, மோகினி