பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழ் சினிமாவை கெடுப்பது யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்... ஹீரோக்கள்? இயக்குநர்கள்? இல்லை தயாரிப்பாளர்கள் தான். என்னது கந்துவட்டிக்கு கடனை வாங்கி ரிஸ்க் எடுத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மீது குறை சொல்வதா என்று கேட்கலாம்...? ஆனால் உண்மை அது தான்.
இங்கே இயங்கும் தயாரிப்பாளர்களில் வெகு சிலரே வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்கள் அப்போதைய சூழலில் மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற ஒரு படத்தை சொல்லி, அந்த படம் மாதிரியே கதை சொல்லுப்பா... என்பார்கள். அதன் பெயர் தான் டிரண்ட். சரி இப்போதைய தமிழ் சினிமாவும் "டிரண்ட்"-ஐ நம்பி தான் உள்ளது. அதைப்பற்றி அலசுவோம்.
டிரண்ட் விஷயத்தில் 2017-ல் தமிழ் சினிமாவுக்கு ஒருவித குழப்பமே மிஞ்சியிருக்கிறது. கடந்த ஆண்டு அதாவது 2016ல் பேய் படங்களும் டார்க் காமெடி படங்களும் அதிகமாக வரிசை கட்டி வந்தன. பேய்களே யூனியன் அமைத்து நேரில் வந்து கெஞ்சும் அளவுக்கு பேய் படங்களாக எடுத்து தள்ளினார்கள் சினிமாக்காரர்கள். இளம் நடிகர்கள் மட்டுமல்லாது கார்த்தி, சித்தார்த், போன்ற முன்னணி ஹீரோக்களும் பேய் படங்களில் நடித்தார்கள்.
கிரைம் த்ரில்லர்
பேய் படங்களாக பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு 2017-ம் ஆண்டு துவங்கும் நேரத்தில் டிசம்பர் மாதத்தில், துருவங்கள் பதினாறு படம் ரிலீஸானது. மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட்டானது இப்படம். இதனால் 2017-ம் ஆண்டின் துவக்கத்தில் கிரைம் த்ரில்லர் வகை படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதற்கு ஏற்றபடி, கலையரசன் - ஷிவதா நாயர் நடிப்பில் வெளியான அதேகண்கள், அருண் விஜய்யின் குற்றம் 23, அறிமுக இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய எட்டு தோட்டாக்கள், கார்த்திக்கின் நடிப்பில் ரங்கூன், விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் விக்ரம் வேதா, விஷாலின் துப்பறிவாளன், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, சிபிராஜின் சத்யா, சிவி குமாரின் மாயவன் போன்ற படங்கள் கிரைம் த்ரில்லர் படங்களாக வெளிவந்து வெற்றி பெற்றன.
ராஜேஷ் குமார், சுபா போன்றவர்களின் நாவல்களை போல ரசிகர்கள் படங்களிலும் விறுவிறுப்பை எதிர்பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் 2 மணி நேரம் கூட படம் பார்க்க விரும்பவில்லை. குறைந்த நேரமாக இருந்தாலும் இருக்கையின் நுனியில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அந்த வகையில், துருவங்கள் பதினாறு தொடங்கி வைத்த கிரைம் த்ரில்லர் டிரெண்ட் இன்னும் தொடர்கிறது. 2018-ம் ஆண்டிலும் இது தொடரும் என தெரிகிறது.
அய்யோ... பேய் (படம்)
2016-ஐ போன்று 2017-ம் ஆண்டிலும் பேய் படங்களுக்கு குறைவில்லை. 2016-ல் கதை சொல்லி உருவாகிக் கொண்டிருந்த படங்கள் வெளியாகின. ரம், டோரா, சிவலிங்கா, எங்க அம்மா ராணி, சரவணன் இருக்க பயமேன், சங்கிலி புங்கிலி கதவ தொற, அவள், பலூன், சங்கு சக்கரம் என்று இன்னும் பட்டியல் நீண்டது. இந்த படங்களில் அவள் மட்டுமே வித்தியாமான பேய் படமாக அமைந்ததால் ரசிகர்களை ஓரளவுக்கு கவர்ந்தது. மற்ற படங்கள் எல்லாம் பத்தோட பதினொன்று என்ற நிலையிலேயே இருந்தன. இதனால் பேய் டிரண்ட்டுக்கு விரைவில் கெட்-அவுட் வரும் என தெரிகிறது. இருந்தாலும், பேய் படங்களை போன்ற படமாக இருந்தாலும் காமெடியில் பின்னி எடுத்ததால் மரகத நாணயம் படம் வெற்றி பெற்றது.
அடல்ட் காமெடி
இது நல்லதுக்கா, கெட்டதுக்கா என்று தெரியவில்லை. ஆனால் வரிசை கட்டுகின்றன அடல்ட் காமெடி படங்கள். வரிவிலக்கு இருந்தபோதே த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்று எகிறி அடித்த சினிமாக்காரர்கள், வரிவிலக்கு இல்லாவிட்டால் சும்மா இருப்பார்களா? மீனை வைத்து படம் என்று சொல்லி விளம்பரப்படுத்தப்பட்ட கட்டப்பாவ காணோம், அடல்ட் காமெடியைத் தான் சொன்னது.
இதையடுத்து வெளிவந்தது ஹர ஹர மஹாதேவகி. கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் அறிமுக இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ஹரஹர மஹாதேவகி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. படம் முழுக்க ஆபாச செய்கைகளும், டபுள், டிரிபிள் மீனிங் வசனங்களும் இருந்தன. ஆனாலும் படம் வசூலை வாரிக் குவித்து இன்ப அதிர்ச்சி அடைய வைத்தது.
ஒரு பக்கம் மதுவிலக்கு கோஷம் எழ எழ, இன்னொரு பக்கம் டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பது போல, ஹரஹர மஹாதேவகி போன்ற அடல்ட் காமெடி படங்கள் ஹிட்டடிக்க, இப்போது அதை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.
பெண்மை பேசும் படங்கள்
பெண்மையை முதன்மைப்படுத்தி வெளியாகும் படங்கள் எல்லாம் பாலசந்தர், ருத்ரைய்யா காலத்தோட முடிந்து போனது என்று அடித்து சொன்னவர்களுக்கு சமீபத்திய படங்கள் தக்க பதிலடி தந்தது. தரமணி, மகளிர் மட்டும், சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட அறம், அன்பையும் மனிதத்தையும் பேசிய அருவி ஆகிய படங்கள் 2017-ஐ தமிழ் சினிமாவின் முக்கியமான ஆண்டாக மாற்றின. காதல் இல்லை, நாயகன் இல்லை, மசாலா இல்லை ஆனாலும் இந்த படங்கள் வெற்றி பெற்றன. ரசிகர்கள் மனநிலை ஆரோக்கியமான விஷயங்களை எதிர்பார்ப்பதையே இது காட்டுகிறது.
ஆக, 2017-ல் கிரைம் த்ரில்லர், ஹாரர், அடல்ட் காமெடி என்று தமிழ் சினிமா குழம்பினாலும் கடைசி கட்டத்தில் சமூகநோக்கமுள்ள கதைகளும், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதைகளும் அமைந்தது பாராட்டுதலுக்குரியது. இந்த நல்ல விஷயம் வரும் ஆண்டும் தொடர வேண்டும்.
சினிமா சமையல் போன்றது. அது நாம் மட்டுமே சாப்பிடப்போவதில்லை. மற்றவர்கள் தான் அதிகம் ருசிக்க போகிறார்கள். டிரெண்ட் எதுவாக இருந்தாலும் சரி... ரசிகர்கள் அதையெல்லாம் பார்ப்பதில்லை. பிடிச்சிருக்கு பிடிக்கலை என இரண்டு வார்த்தைகள் தான் அவர்களுக்கு. எனவே ரசிகர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, அதில் சமூகம் சார்ந்த விஷயங்களையும் இணைந்து படம் எடுப்பது சிறந்தது.