ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2016 ம் ஆண்டு இனிதே நிறைவுகிறது. வழக்கம் போலவே நல்லது நடந்தவர்களும், வெற்றி கிடைத்தவர்களும் இந்த ஆண்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். தோல்வியடைந்தவர்களும், எதிர்பார்த்தது நடக்கவில்லையே என்று நினைப்பவர்களும் இந்த ஆண்டை மறக்க நினைப்பார்கள்.
எப்போதும் போல புது வருடம் பிறக்கும் போது வரும் ஆண்டாவது நமக்கு நல்ல ஆண்டாக அமையட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புதான் பலருடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் 2017ம் ஆண்டு வெளியாக உள்ள படங்களின் எதிர்பார்ப்பு 2016ம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. 2017ம் ஆண்டு வெளிவர உள்ள பல பெரிய படங்கள் 2016ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, சில படங்கள் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கும் தயாராக உள்ளது.
சில படங்கள் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளன, சில படங்கள் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளன.
அது மட்டுமல்ல 2017ம் ஆண்டில் பல புதிய கூட்டணிகளில் பெரிய நட்சத்திரங்களின் படங்களும் வெளிவர உள்ளன. இப்படி பல புதிய விஷயங்களுடன், புதிய கூட்டணிகளுடன், 2017ம் ஆண்டை ஆவலுடன் எதிர்கொள்ள ரசிகர்களும் தயாராகி விட்டார்கள்.
2017ம் ஆண்டில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
2.0
'சிவாஜி, எந்திரன்' படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் - ஷங்கர் மீண்டும் இணைந்துள்ள படம். தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்தின் வெளியீட்டை ஒரு வருடத்திற்கு முன்பே அறிவித்ததில்லை. 2017ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவர உள்ள இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இருக்கிறது. முதல் பார்வை வெளியிட்ட பின் இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழ்த் திரையுலகத்தில் முதல் முறையாக சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எடுக்கப்படும் படம், அடுத்த ஆண்டில் மிகப் பெரிய சாதனையை புரியும் என்று இந்தியத் திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
சபாஷ் நாயுடு
கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் அமெரிக்காவில் பரபரப்பாக ஆரம்பமான படப்பிடிப்பு கமலுக்கு காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை நடந்ததால் கடந்த சில மாதங்களாக அப்படியே நின்றுவிட்டது. கமல்ஹாசன் நன்றாக நடக்கும் அளவிற்கு குணம் அடைந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்கு அவர் இன்னும் தயாராகவில்லை என்பதால் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகாமல் உள்ளது. எப்படியும் ஜனவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகிவிடும் என்கிறார்கள். 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் அந்த வரிசையில் தற்போது 'சபாஷ் நாயுடு' படமும் இடம் பிடித்துள்ளது கமல் ரசிகர்களுக்குக் கவலையான விஷயம்தான்.
பைரவா
தொடர் வெற்றிகளை அடுத்து விஜய் படங்களுக்கு வணிக ரீதியாக மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 'தெறி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அது இன்னும் அதிகரித்துள்ளது. 'அழகிய தமிழ் மகன்' படம் சரியாக ஓடவில்லை என்றாலும் அந்தப் படத்தின் இயக்குனர் பரதனை அழைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார் விஜய். இப்படத்தின் டீசர் வெளிவந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. 2017ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள 'பைரவா' படம் விஜய் படங்களின் முந்தைய சாதனைகளை முறிடியக்கவும் வாய்ப்புள்ளது.
ஏகே 57 (பெயரிடப்படாத அஜித் படம்)
இயக்குனர் சிவா, அஜித் கூட்டணி இணையும் மூன்றாவது படம். வழக்கம் போலவே படத்திற்கு இன்னும் பெயர் வைக்காமல் படப்பிடிப்பை பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் பெரும் பகுதி வெளிநாடுகளில்தான் நடைபெற்று வருகிறது. அஜித் ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். சிவா அஜித் கூட்டணி இதற்கு முன் இணைந்த “வீரம், வேதாளம்” ஆகிய இரண்டு படங்கள் 'பக்கா லோக்கல்' ஆக்ஷன் படமாக இருந்தது. ஆனால், இந்தப் படம் 'இன்டர்நேஷனல் ஆக்ஷன்' படமாக இருக்கும் என்கிறார்கள்.
எஸ் 3
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக உள்ளதே ஒரு சாதனைதான். இரண்டு பாகங்களைப் பார்த்த தமிழ் சினிமா ஒரே இயக்குனர் - நாயகன் - நாயகி என 'எஸ் 3' படம் மூலம் மூன்றாவது பாகத்திலும் தனி முத்திரை பதிக்க உள்ளது. இயக்குனர் ஹரி, சூர்யா, அனுஷ்கா ஆகியோர் முதல் பாகம், இரண்டாம் பாகம் என இப்போது மூன்றாம் பாகம் என இணைந்திருக்கிறார்கள். சூர்யா கடைசியாக நடித்த சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அந்தக் குறையை 'எஸ் 3' போக்கிவிடும் என அவர் திடமாக நம்புகிறார்.
எனை நோக்கி பாயும் தோட்டா
கௌதம் மேனன், தனுஷ் முதன் முறையாக இணைந்துள்ள பம். படத்தின் டீசரை வெளியிட்டதிலிருந்தே இந்தப் படம் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ அல்லது அதையே கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இருந்தாலும் இதுவரை பார்க்காத தனுஷைப் படத்தில் பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி. எப்படிப்பட்ட நடிகராக இருந்தாலும் வேறு ஒரு இயக்குனருடன் முதல் முறை சேரும் போது ஒரு மாற்றம் தெரியும். கௌதம் மேனன் - தனுஷ் கூட்டணி தங்களது முதல் படத்தின் மூலம் எப்படிப்பட்ட முத்திரையைப் பதிக்கப் போகிறது என்பதை திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் 'செம லோக்கல்' படத்தைக் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு முதல் முறையாக இணையும் படம். சிம்பு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா மற்றும் பலர் நடிப்பதும் படத்தின் பெயரே ஆரம்பத்தில் இருந்தே ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தக் கூட்டணியில் பாடல்களும் சிறப்பாக வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கும் சிம்புவிற்கு இந்தப் படம்தான் மீண்டும் ஒரு திருப்புமுனையைக் கொடுக்க வேண்டும்.
கடம்பன்
2013ல் வெளிவந்த 'ராஜா ராணி' படத்திற்குப் பிறகு தன்னுடைய தனிப்பட்ட வெற்றிக்காக கடந்த மூன்று வருடங்களாக கடுமையாகப் போராடி வருகிறார் ஆர்யா. இனியும் வழக்கம் போல காதல் நாயகனாகவே நடித்துக் கொண்டிருந்தால் தமிழ் ரசிகர்கள் தன்னைத் தள்ளி வைத்துவிடுவார்கள் என்று நினைத்தாரோ என்னவோ 'கடம்பன்' படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை மிகவும் பலமாக்கி இருக்கிறார். 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற 'மஞ்சப் பை' படத்தை இயக்கிய ராகவன் இயக்கி வரும் இரண்டாவது படம் இது. மலைவாழ் மக்களைப் பற்றிய யதார்த்தமான கதையில் ராகவன், யுவன்ஷங்கர்ராஜா, ஆர்யா என அனைவருமே தங்களது முழு முயற்சியைக் கொடுத்து வருகிறார்கள். 2017ம் ஆண்டு ஆர்யாவுக்கு அம்சமான ஆண்டாக இருக்கும் என நம்பிக்கையைக் கொடுக்கும் படமாக 'கடம்பன்' இருக்கப் போகிறது.
காற்று வெளியிடை
மணிரத்னத்திடம் 'ஆய்த எழுத்து' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கார்த்தி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்த பின் தன்னுடைய குரு இயக்கத்திலேயே நாயகனாக நடிப்பது பெரிய விஷயம். 'ஓ காதல் கண்மணி' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கி வரும் இந்தப் படத்தில் முதலில் யார் யாரோ நடிப்பதாகச் சொன்னார்கள். கடைசியில் கார்த்தி நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது. இளம் ரசிகர்களுக்கு 2017ம் ஆண்டில் குறிப்பிடப்படும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும்.
இந்தப் படங்களைத் தவிர்த்து எதிர்பார்ப்பில் உள்ள மற்ற படங்களின் பட்டியல்...
சூர்யா நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்'
விஜய் சேதுபதி நடிக்கும் “கவண், புரியாத புதிர், விக்ரம் வேதா, தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம், 96” ஆகிய படங்கள். 2016ஐப் போலவே விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் 2017லும் அதிகம் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்க மோகன்ராஜா இயக்கும் படம்
சந்தானம் நடிக்க செல்வராகவன் இயக்கும் 'மன்னவன் வந்தானடி'
எஸ்.ஜே.சூர்யா நடிக்க செல்வராகவன் இயக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை'
தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் 'பவர் பாண்டி'
நயன்தாரா நடிக்கும் 'டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம்'
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 'பாகுபலி 2'.
2016ம் ஆண்டில் வெளியான 200 க்கும்ச ற்று அதிகமான படங்களில் பெரிய வெற்றியை 10 படங்களும், சுமாரான வெற்றியை 10 படங்களும் மட்டுமே பெற்றன. 2017ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகட்டும் என்ற வாழ்த்துகளுடன் புத்தாண்டை வரவேற்போம்.