ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரைப்படங்களில் சில கதாபாத்திரங்கள் காலத்தை கடந்து வாழும். படங்கள் மறந்து விடும், யார் இயக்கினார்கள், யார் தயாரித்தார்கள் என்பது மறந்து விடும். ஆனால் அந்த கதாபாத்திரங்களும், அதில் நடித்தவர்களும் நம் அடி மனதின் ஆழத்தில் பதிந்து விடுவார்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன், உலக நாயகன் கமலஹாசனுக்கு சப்பாணி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு காளி. அது மாதிரி மறைந்த பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு மீரா. மற்ற கேரக்டருக்கும் மீராவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மீரா படத்தில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் தன் வாழ்நாள் முழுவதும் மீராவாகவே வாழ்ந்தார். அவரது 101வது பிறந்த நாளையொட்டி அந்த மீரா பற்றிய சில நினைவுகள்...
சேவாதனம் படத்தில் சுமதியாக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அதன் பிறகு சகுந்தலை, சாவித்ரி படங்களில் அந்ததந்த கேரக்டராகவே வாழ்ந்தார். அவரது 4வது படமும், கடைசி படமும் மீராதான்.
1945ம் ஆண்டு வெளிவந்த மீரா படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கி இருந்தார். மீராவின் கணவராக நாகய்யா நடித்தார். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்திருந்தார். கல்கி கிருஷ்ணமூர்த்தி வசனம், பாடல்களை எழுதினார். எஸ்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவம் தயாரித்தார்.
தமிழில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தை பண்டித ஜவஹர்லால் நேரு, கவிக்குயில் சரோஜி நாயுடு ஆகியோரின் விருப்பத்திற்கு இணங்க இந்தியில் மீராவை ரீமேக் செய்தார் சதாசிவம்.
மீரா படத்தை தயாரிக்க நூற்றுக் கணக்கான யானைகள், குதிரைகள் தேவைப்பட்டது. அதை ஏற்பாடு செய்ய நிறைய செலவாகும். உதய்ப்பூர் மன்னர் மஹாராணாவிடம் யானைகளும், குதிரைகளும் இருந்தது. அவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பரம ரசிகர். மீரா படத்திற்கு யானைக்கும், குதிரைக்கும் அவர் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு "எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைக்கு என் ராஜ்யத்தை தருவேன் யானை குதிரைகளை தரமாட்டேனா" என்று கூறி... தன்னுடைய யானைகளையும், குதிரைகளையும் கொடுத்து உதவினார்.
இந்தி மீராவின் முதல் காட்சியை பண்டித ஜவஹர்லால் நேருவும். இந்தியாவின் கடைசி வைசிராய் மவுண்ட் பேட்டனும் குடும்பத்துடன் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில்தான் சரோஜி நாயுடு தனக்கு வழங்கப்பட்டிருந்த இந்தியாவின் வானம்பாடி பட்டத்தை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வழங்கினார்.
இந்தப் படத்தில் நடித்த போது எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு நடிகையாக இருந்து படிப்படியாக மீராவாக மாறிய சம்பவங்கள் நடந்தது. ஆற்றில் மீரா பயணம் செய்யும்போது தவறி ஆற்றுக்குள் விழுவார் கிருஷ்ணர் அவரை காப்பாற்றுவதாக கதை. இந்த காட்சி படமாக்கப்பட்டபோது எம்.எஸ்.சுப்புலட்சுமி நிஜமாகவே ஆற்றுக்குள் தவறி விழ... அவரை நீரில் மூழ்கி படகோட்டி காப்பாற்றினார். அந்த படகோட்டியின் பெயர் கிருஷ்ணன். இப்படி நிறைய சம்பவங்கள் நடந்தது.
மீராவுக்கு பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமி தொடர்ந்து நடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார். அப்போது கல்கி கிருஷ்ணமூர்த்தியிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டார் அதற்கு கல்கி "மீரா படத்திற்கு பிறகு எந்தப் படத்தில் நீங்கள் நடித்தாலும் அது குறைவாகத்தான் இருக்கும். மீரா மூலம் உன்னதமான தெய்வநிலையை அடைந்து விட்டீர்கள். அந்த நிலையிலிருந்து கீழே இறங்கி வர வேண்டாம்" என்றார். அதை ஏற்று சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு கடைசி வரை நிஜ மீராவாக அந்த கண்ணனின் புகழ்பாடியே வாழ்ந்தார்.