வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
2016ம் ஆண்டின் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பல பெரிய படங்கள் வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டதால் ஆகஸ்ட் மாதமே பல சிறிய படங்கள் வெளிவந்தன. மிகப் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவராத காரணத்தால் எந்த ஆரவாரம் இன்றி, பரபரப்பும் இன்றி ஆகஸ்ட் மாதம் அமைதியாகவே கடந்தது.
இருந்தாலும் தமிழ்த் திரையுலகில் இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களுடன் ஒப்பிடும் போது இரண்டு சிறிய படங்கள், தரமான படங்களாக அமைந்து ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அவை ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜோக்கர்' மற்றும் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த 'தர்மதுரை' ஆகிய படங்கள்.
இரண்டு படங்களுமே வெறும் கமர்ஷியலாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களைப் பற்றிய படமாக அமைந்தன. தமிழ் சினிமாவில் இன்னமும் மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த சமரசமும் இல்லாமல் தங்களது படைப்புகளில் நிஜத்தையும் வெளிப்படுத்துகிறார்கள் என்பது மிகப் பெரிய ஆறுதல்.
ஆகஸ்ட் 5ம் தேதி “என்னமா கத வுடுறாங்க, சண்டிக் குதிரை, தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும், திருநாள்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'திருநாள்' படத்தைத் தவிர மற்ற படங்களுக்கு போஸ்டர் அடித்த செலவாவது மிஞ்சியிருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தப் படங்களில் 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்த படம். தான் இயக்கும் படங்களை எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் பெரும் கவனம் உடையவர் கௌதம். ஆனால், அவர் எப்போதோ தயாரிக்க ஆரம்பித்த இந்தப் படத்தை கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டார். ஒரு அறிமுக இயக்குனரின் வலி என்ன என்பது கௌதமுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தும் ஒரு தயாரிப்பாளராக இந்த அளவிற்கு ஒரு இயக்குனரை அவர் தவிக்க விட்டது மிகப் பெரும் தவறு.
ஜீவா, நயன்தாரா நடித்த 'திருநாள்' படத்தைத் தயாரித்தவர்களே படம் ஒரு வெற்றிப் படம் என அறிவித்துவிட்டார்கள். மற்ற படங்கள் வழக்கம் போல இந்த ஆண்டின் பட எண்ணிக்கையை அதிகப்படுத்திய படங்கள் மட்டுமே.
ஆகஸ்ட் 12ம் தேதி “வாகா, முடிஞ்சா இவன புடி, ஜோக்கர்” ஆகிய படங்கள் வெளிவந்தன. 'வாகா' படம் எதற்காக எடுக்கப்பட்டது என்பது அந்தப் படத்தின் இயக்குனருக்காவது தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. 'ஹரிதாஸ்' என்ற அற்புதமான படத்தை எடுத்த இயக்குனரா இந்தப் படத்தை எடுத்தார் என்பது ஆச்சரியமே. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'முடிஞ்சா இவன புடி' படம் இயக்குனருக்கு மீண்டும் ஒரு தோல்விப் படமாக அமைந்தது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய முதல் படமான 'குக்கூ' படம் தோல்விப் படமாக அமைந்தது. ஆனால், அடுத்து அவர் இயக்கி வெளிவந்த 'ஜோக்கர்' படம் ஒரு சமுதாய மறுமலர்ச்சி படமாக அமைந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. நல்ல சினிமாவை தமிழ் ரசிகர்கள் கைவிட மாட்டார்கள் என்பதை இந்தப் படம் மீண்டும் உணர்த்தியது.
ஆகஸ்ட் 19ம் தேதி “தர்மதுரை, யானை மேல் குதிரை சவாரி, நம்பியார்,” ஆகிய படங்கள் வெளிவந்தன. 'தர்மதுரை' படம் அதிகப்படியான விளம்பரங்கள் இல்லாமல் மக்களைச் சென்றடைந்தது. படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி இதற்கு முன் இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' அப்படியே முடங்கிக் கிடந்த போதிலும், அதற்கடுத்து ஆரம்பித்து, முடித்து, வெளியிட்டும் விட்ட 'தர்மதுரை' படம் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 'நம்பியார்' படத்தில் சந்தானம் நடித்திருந்தும் அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. ஸ்ரீகாந்த் எப்போதுதான் நடிக்கக் கற்றுக் கொள்வாரோ...?. 'யானை மேல் குதிரை சவாரி' படத்தைத் தயாரித்தவர்களுக்கு யானை அடி கிடைத்திருக்கும்.
ஆகஸ்ட் 25ம் தேதி 'பயம் ஒரு பயணம்' படம் வெளிவந்தது. இந்தப் படத்தையெல்லாம் தயாரிப்பதற்கான பணத்தை பாங்கிலாவது போட்டு வைத்திருக்கலாம்.
ஆகஸ்ட் 26ம் தேதி “54321, அந்தக் குயில் நீதானா, கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, மீண்டும் ஒரு காதல் கதை, வென்று வருவான்” ஆகிய படங்கள் வெளிவந்தன. 'தட்டத்தின் மறயத்து' என்ற அருமையான மலையாளப் படத்தை ரீமேக் என்ற பெயரில் 'மீண்டும் ஒரு காதல் கதை' எனத் தயாரித்து மறக்க முடியாத குற்றத்தைச் செய்தார்கள். 'கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தை மீடியாவிடம் சரியாகக் கொண்டு போய் சேர்த்திருந்தால் மிகப் பெரும் லாபத்தைப் பெற்றிருக்கலாம். மற்ற படங்கள் வழக்கம் போலவே பட எண்ணிக்கையை அதிகப்படுத்திய படங்கள் மட்டுமே.
ஆகஸ்ட் மாதம் வெளிவந்த 16 படங்களில் “ஜோக்கர், தர்மதுரை” ஆகிய படங்கள் தரமான படங்களாக வெளிவந்தன. 'திருநாள்' படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. மற்ற படங்களைத் தயாரித்த விதத்தில் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு எப்படியும் 50 கோடி ரூபாய்க்கு நஷ்டம் வந்திருக்கும். சில சிறிய படங்களை எதற்காகத் தயாரித்து வெளியிடுகிறார்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.
இந்த வருடம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ளன. அதற்குள் மேலும் 50 படங்கள் வெளிவர உள்ளன. அதில் எத்தனைப் படம் அசத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆகஸ்ட் மாதம் வெளியான படங்கள்...
ஆகஸ்ட் 5
என்னமா கத வுடுறாங்க
சண்டிக் குதிரை
தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்
திருநாள்
ஆகஸ்ட் 12
வாகா
முடிஞ்சா இவன புடி
ஜோக்கர்
ஆகஸ்ட் 19
தர்மதுரை
யானை மேல் குதிரை சவாரி
நம்பியார்
ஆகஸ்ட் 25
பயம் ஒரு பயணம்
ஆகஸ்ட் 26
54321
அந்தக் குயில் நீதானா
கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
மீண்டும் ஒரு காதல் கதை
வென்று வருவான்