இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நட்பு என்ற ஒருவழிப்பாதையில் நடந்து, இயக்கம், நடிப்பு என இருவழிப்பாதையில் பயணிப்பவர், அப்பா என்ற உறவின் பெருமைகளை சொல்லி ரசிகர்கள் மனதில் நிமிர்ந்து நிற்பவர், சினிமா என்ற சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி, மதுரையில் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்து பேசியதிலிருந்து...
* நடிப்பு, இயக்கம்...?
இயக்க வேண்டும் என்று முடிவு செய்த பின், நடிப்பிற்கு இரண்டு மாதம் இடைவெளிவிட்டு இயக்கத்தில் கவனம் செலுத்துவேன். நடிக்கும் போது இயக்குனர் என்ற முகமூடியை கழட்டி விட்டுத்தான் போவேன். நடிப்பு வேறு, இயக்கம் வேறு என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
* அப்பா பற்றி...?
இந்த படத்தை ரிலீஸ் செய்வதுதான் பெரிய போராட்டமாக இருந்தது. பெரிய நடிகர்கள் இல்லை. நானும், என் நண்பர்களும் தான். இதற்கு இடையில் இரண்டு மலையாள படங்கள் வேறு இருந்ததால், கடந்த ஆண்டு முடிந்த படம் இந்தாண்டு வெளியாகியிருக்கிறது.
* ரஜினிமுருகனில் வில்லன் ஏழரை மூக்கன்...?
முதலில் நான் சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக தானே நடித்தேன். இது என் ஊரில் நான் பார்த்த கேரக்டர் தான், எனக்கு சவாலாக இருந்தது. அப்பா வந்த பின் இதுபோன்று வில்லனாக நடிக்க முடியாது. அதனால என் ரிக்கார்டில் இப்படியும் ஒரு கேரக்டர் இருக்கட்டுமே என்று நடித்தேன்.
* அப்பாவிற்கு பின் நடிப்பு...?
ஓரளவிற்கு சமூகத்திற்கு பயனுள்ள, நியாயமான கேரக்டர்களில் நடிப்பேன்.
* உங்கள் படங்களில் கருத்து...?
நான் கருத்துக்களை சொல்லவில்லை... வெளிநாடுகளில் கடமையை செய்யாமல் இருக்கத் தான் லஞ்சம் கொடுக்கிறார்கள். இங்கே கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. நியாயமாக இரு என்று சொல்வது யதார்த்தம். அதை தான் நான் என் படங்களில் சொல்கிறேன்.
* அப்பா, அம்மா கணக்கு...?
அப்பா படத்தை எடுத்து முடித்த பின் தான் அம்மா கணக்கு படத்தில் நடிக்க போனேன். அந்த படம்தான் என்னை முழு நடிகனாக மாற்றிய படம். புது அனுபவத்தை கொடுத்தது.
* டப்பிங்...?
ஆடுகளம் படத்தில் நான் நடிக்க வேண்டிய கிஷோர் கேரக்டருக்கு டப்பிங் பேசினேன். கோலி சோடா, தோனி படங்களில் டப்பிங் பேசியிருக்கிறேன்.
* சொந்தக் குரலில் பாட்டு..?
பாடுகிறோம் என்று சொல்லி வம்சம் படத்தில் நானும் சசிக்குமாரும் ஒரு பாட்டை வாசித்தோம். போராளி படத்தில் சசிக்குமார் பாடும் விதியே போற்றிங்குற பாடலின் கடைசியில் நானும் குரல் கொடுத்திருக்கிறேன். பாடல் என்பது நம்மை மறந்து நம் இன்ப, துன்பங்களுக்காக நமக்குள் இருந்து வரும் குரல். அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
* உங்கள் நண்பர்கள்...?
நட்பு தான் என்னை இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது. நட்பால் நான் அடியும் வாங்கியிருக்கிறேன். ஆனால், அடியை விட நட்பு எனக்கு நல்ல வளர்ச்சிகளை தான் கொடுத்திருக்கிறது.
* உங்கள் அப்பா...?
நல்ல மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். ஊரில் இருப்பவர்களை எல்லாம் உறவு முறை சொல்லி அழைப்பார். என் அப்பாவின் பழக்க, வழக்கங்களை பார்த்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
* சினிமாவில் சொல்ல வேண்டியது...?
நம் நாட்டில் ஜாதி காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கிறது. ஜாதி, கேன்சரை விட மிகக் கொடுமையான வியாதி. இதை வளரவிட்டால் நம்மை நாமே அழித்துக் கொள்வோம். விவசாயம், முதியோர்கள் குறித்து சொல்ல வேண்டும்.
* நீங்கள் ரசித்த மனிதர்...?
என் குருநாதர் இயக்குனர் பாலச்சந்தர், என்னிடம் இருக்கும் நல்ல குணங்கள் எல்லாம் அவரிடம் இருந்து வந்தது.
* சினிமாவில் மாற்றம்...?
சினிமா தன்னைத், தானே மாற்றிக் கொள்ளும் நாம் மாற்றத் தேவையில்லை. எல்லோரும் 70 எம்.எம் படம் எடுக்கும் போது, அப்பா படத்தை நான் 65 எம்.எம்,மில் எடுத்தேன். நம் கண்ணின் அளவிற்கு ஏற்ப படம் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாற்றத்தை முயற்சித்தேன்.
* அடுத்த நடிப்பு, இயக்கம்...?
மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் ஒரு படம் நடிக்கிறேன். சசிகுமார் அல்லது ஜெயம் ரவியை இயக்குகிறேன்.
* மதுரை...?
என் மண், என் மக்கள் நான் நினைத்ததை எல்லாம் விட அப்பா படத்தை கொண்டாடிய சொந்தங்கள் நிறைந்த ஊர். மதுரைக்குள் வந்தாலே என் வீட்டிற்குள் இருப்பதை போல் உணர்கிறேன்.
* இயக்குனராக துடிக்கும் இளைஞர்களுக்கு...?
தன்னம்பிக்கை வேண்டும், உங்களுக்கான வெற்றி அடுத்த நொடியில் இருக்கிறது என்று நம்புங்கள்.