பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
முன்பை விட, இப்போது ரொம்பவே நிதானமாக பேசுகிறார் சிம்பு. அடுக்கடுக்கான சோதனைகளால் ஏற்பட்ட வலியின் தாக்கம், அவர் வார்த்தைகளில் தெரிகிறது. இது நம்ம ஆளு படம் பற்றியும், திருமணம், பீப் சாங் பற்றியும், நம்மிடம் மனம் திறந்து பேசினார்.
* இது நம்ம ஆளு பற்றி சொல்லுங்க?
முழுக்க முழுக்க, காதல் நிரம்பிய படம் இது. 100 காரை அடித்து நொறுக்கி, அடிதடி சண்டை போடுகிற ஹீரோவாக நான் இதில் நடிக்கவில்லை. ரொம்ப சாதாரணமான ஆளாக நடித்து உள்ளேன். கல்யாணத்துக்கு முன், ஒரு காதல் இருக்குமே, அதைப் பற்றிச் சொல்லும் கதை இது. ரொம்ப யதார்த்தமான கதைக் களம் கொண்ட படம்.
இந்த படத்தில் என்ன ஸ்பெஷல்?
ஆஷா சர்மா என்ற நடிகையுடன் இணைந்து, 90 நொடிகள், ஒற்றைக்காலில் நடனமாடியிருக்கிறேன். பிரம்மாண்டமான செட்டிங்ஸ் பின்னணியில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படம் வெளியானதும், இந்த பாடல்,பெரிதாக பேசப்படும்.
இது நம்ம ஆளு ஏன் இவ்வளவு தாமதம்.?
படம் என்னால் தாமதம் கிடையாது. நான் எப்போதோ முடித்து கொடுத்துவிட்டேன். ஆனால் ஒன்று, படம் எப்போது வந்தாலும் ஹிட் தான். ஏனென்றால் இந்தப்படம் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழ்ந்த நிகழ்வாக இருக்கும். அந்தளவுக்கு படத்தில் காதலும், அன்பும் நிரம்பி வழிந்திருக்கிறது.
இது நம்ம ஆளுன்னு யாரையோ பார்த்து சொல்ற மாதிரி இருக்கே...?
அய்யய்யோ அப்படி எல்லாம் எதுவுமில்லை. கல்யாணம் செய்ய போகிறவன், தனக்கு மனைவியா வரும் பெண்ணை, இது நம்ம ஆளு என்று தானே சொல்வான். அதையே தலைப்பாக வைத்தால், டச் இருக்குமே என்று தான், அப்படி வைத்தோம். மற்றபடி, நீங்கள் நினைப்பது போல் எதுவுமில்லை.
அண்ணன் படத்திற்கு தம்பி இசை இதைப்பற்றி சொல்லுங்க.?
நான் நிறைய இசையமைப்பாளர்களுடன் வேலை பார்த்துள்ளேன். எனக்கு பிடித்தமாதிரி பாடல்கள் வரும் வரை அவர்களை நான் டார்ச்சர் செய்வேன், ஆனால் குறளிடம் அந்தமாதிரி எதுவும் செய்யவில்லை. அவனுடைய விருப்பத்திற்கு விட்டுவிட்டேன். ஒரு தலை ராகம் பாட்டு போட்டு காட்டினான், அதைகேட்டு கண்கலங்கிவிட்டேன். என் தம்பி என்னை புரிந்து அமைத்து கொடுத்த பாடல்கள் இந்த இது நம்ம ஆளு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
பெயர் மாற்றம், ஆன்மிக நாட்டம், பீப் சாங் சர்ச்சை, இப்படி எதிலும் ஒரு நிலையான தன்மை இல்லாமல் செயல்படுகிறீர்களே?
சில ஆண்டுகளுக்கு முன் வரை, என்னை ஒரு ஹீரோவாக நினைத்தேன். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த சம்பவங்களுக்கு பின், மாறி விட்டேன். இப்போது பழைய சிம்பு இல்லை. ரொம்ப சாதாரண ஆள். ஒரு மனிதனாக, இந்த சமூகம் என்னை அடையாளம் காட்டியது. மனதளவில் இப்போது மாறியிருக்கிறேன்.
பீப் சாங் தப்பான விஷயமாக தோணலியா உங்களுக்கு?
இந்த மாதிரி ஒரு பாட்டை வெளியிட்டு, விளம்பர படுத்தி, வியாபாரமாக்கி இருந்தால், தப்பு என்று சொல்லலாம். தனிப்பட்ட முறையில் அமைத்த ஒரு பாட்டை, ரெடி ஆகும்போதே திருடி வெளியிட்டு, எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய விஷயங்கள் தான் வருத்தமாக இருக்கின்றன.
பீப் பாடல் விவகாரத்தில் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்னை இருந்திருக்காதே.?
நீங்க சொல்றதும் சரிதான். ஆனால் நான் தப்பு செய்திருந்தால் முதல் ஆளாய் மன்னிப்பு கேட்டிருப்பேன். நான் தவறே செய்யாதபோது இந்த உலகமே எதிர்த்து நின்றால் நான் என்ன செய்ய முடியும். யாருக்காகவும் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்றி கொள்ளும் பழக்கம் கிடையாது. எல்லோரும் ஒருநாள் இந்த மண்ணுக்குள் போய் தான் ஆக வேண்டும். வாழும் நாட்களில் ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமலும், கஷ்டப்படுத்தாமலும் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு மட்டும் ஏன் காதலில் இவ்ளோ பிரச்னை வருது?
எனக்கு காதல் மட்டும் தான் பிரச்னை. பலருக்கு, வாழ்க்கையே பிரச்னை தான். சிலர், சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுறாங்க. குடியிருப்பதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுறாங்க. அப்படிப் பார்க்கும்போது, நான் பரவாயில்லை தானே. பிரச்னை இல்லை என்றால், மனிதனாக வாழ்வதில் எந்த பயனும் இல்லை. தோல்வி தான், என்னை மேலும், பலசாலி ஆக்குகிறது.
நடிகர் சங்கத்தில், இப்போது இருக்கிறீர்களா; இல்லையா?
ஒரு மனநிலையில், நடிகர் சங்கத்தில் இருந்து விலக வேண்டும் என தோன்றியது. அதுக்கு சில காரணம் இருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினராகத் தான் இருக்கிறேன்.
உங்கள் ரசிகர்கள் பற்றி?
நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் எனக்கு புதுபுது ரசிகர்களை கொடுத்திருக்கிறது. எனக்கு எல்லா தரப்பு ரசிகர்களையும் கொண்டு வர ஆசை தான்.
எப்போது படம் இயக்க போறீங்க.?
கதை எல்லாம் ரெடியாக உள்ளது. நடித்து கொடுக்கவே நிறைய படங்கள் கையில் இருப்பதால் கொஞ்ச நாளாகும் என்று நினைக்கிறேன்.
காதலிப்பவர்கள் உங்களிடம் அறிவுரை கேட்டால் என்ன சொல்வீர்கள்?
காதலை பொத்தி வைத்தோ, கைக்குள் அடக்கி வைக்கவோ முடியாது, எங்கே பொசசிவ்நஸ் வருதோ அங்கே பிரச்னை தான் வரும். அபரிதமான அன்பும், அளவுக்கு அதிகமான பிரியத்தினாலும் தான் தவிக்கிறோம். காதலை ஒரு ஹர்ட் டிஸ்க்கில் அடக்கி வைக்கும் விஷயம் அல்ல, அவரவர் தனிப்பட்ட விஷயம்.
சினிமாவில் உங்களுக்கான எந்த ஒரு விஷயத்தையும் தல கிட்டவும், தளபதி கிட்டவும் பகிர்ந்து கொள்வீர்களாமே?
அப்படி இல்லை. சாதரணமாகத்தான் அவங்கிட்ட பேசுவேன். மிகவும் தனிப்பட்ட விஷயங்களை என் தங்கை இலக்கியாவுடன் தான் பகிர்ந்து கொள்வேன்.
உங்க அப்பாவை அநியாயத்துக்கு கலாய்க்கும் போது, உங்களுக்கு கோபம் வராதா?
கண்டிப்பாக கோபம் வராது. புலி, புலியாகத் தான் இருக்கும்; எலியாகாது. அப்பா, ஒரு இடத்தில் பேசுகிறார் என்றால், அங்கிருக்கும் அனைவரது கவனத்தையும் அவரது பக்கம் கொண்டு வந்து விடுவார். அவரை ரசிக்க வைத்து விடுவார். அவர், திறமைசாலி என்பதை, நான் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. ரசிகர்கள், ஒரு சந்தோஷத்துக்காக அப்படி செய்கின்றனர். இதற்காக எதற்கு கோபப்பட வேண்டும்.
உங்க திருமணம் எப்போது?
இதற்கான பதிலை கடவுளிடம் தான் கேட்க வேண்டும். அவருக்கு மட்டும் தான், இந்த கேள்விக்கு பதில் தெரியும். எதுவும் என் கையில் இல்லை.
நயன், ஹன்சிகா, இந்த இரண்டு பேரில், யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க?
யாரையுமே மிஸ் பண்றதா நினைக்கவில்லை; நயன், ஹன்ஸ் இரண்டு பேருமே, எனக்கு ஒரே மாதிரி தான். இப்போது அதற்கான யோசனைகளில், நான் இல்லை. என் வேலையை பார்த்துட்டு இருக்கிறேன். கண்டிப்பாக இனி வரும் காலங்கள் என்னை மாற்றும்.