அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
மே மாதம் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத சில கூட்டணிகள் உருவானதைப் போலவே தமிழ்த் திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே சில எதிர்பாராத கூட்டணிகள் உருவாகியுள்ளன. புதிய கூட்டணி அமைப்பு வெற்றிகரமாக உருவாகி, செயல்படுவதிலும் வெற்றிகரமாக முன்னேறி தற்போது கடைசி கட்டத்தை அடைந்துள்ளனர். விரைவில் ரசிகர்கள் என்ற வாக்காளர்களும் அந்தந்தக் கூட்டணிக்கான வாக்கு என்ற டிக்கெட்டை அளித்து வெற்றி பெறச் செய்வார்களா அல்லது தோல்வியுறச் செய்வார்களா என்பது வரும் வாரங்களில் தொடர்ந்து தெரிய வரும். அப்படி உருவாகியுள்ள சில கூட்டணிகள் யார் யார் என்று பார்ப்போமோ....
ரஜினிகாந்த் - பா.ரஞ்சித்
ரஜினிகாந்த் படம் என்றாலே இவர்கள்தான் இயக்குவார்கள் என்ற ஒரு கட்டத்துக்குள்தான் இயக்குனர்கள் இருந்து வந்தார்கள். ரஜினிகாந்த் எப்போதுமே மூத்த இயக்குனர்களுடன்தான் கடந்த சில காலமாக பயணித்து வருகிறார். 'லிங்கா' படத் தோல்வி அவரை நிறையவே யோசிக்க வைத்திருக்க வேண்டும். அதனால்தான் 'மெட்ராஸ்' என்ற மாறுபட்ட படத்தைக் கொடுத்த பா.ரஞ்சித்துடன் இணைந்து 'கபாலி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தக் கூட்டணி உருவான போது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ, அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
கமல்ஹாசன் - ராஜீவ்குமார்
சுமார் 27 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கமல்ஹாசன் - ராஜீவ் குமார் கூட்டணியில் வெளிவந்த 'சாணக்யன்' படம் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு அந்தக் கூட்டணி வேறு எந்தப் படத்திலும் இணையாமல், தமிழில் முதல் முறையாக இணைய உள்ள படம் நாளை ஆரம்பமாக உள்ளது. வேறு மாநிலத்தில் வெற்றிகரமாக இருந்த ஒரு கூட்டணி, இவ்வளவு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உருவானது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்று. இதில் மேலும் சிறப்பம்சமாக கமல்ஹாசன் - இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைவது, கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன் முதல் முறையாக இணைந்து நடிப்பது ஆகியவையும் உண்டு.
தனுஷ் - கௌதம் மேனன், தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் கூட்டணிக்குப் பிறகு திரையுலக ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகத்தினரையும் ஆச்சரியப்பட வைத்த கூட்டணி இது. தனுஷ் என்றாலே கொஞ்சம் 'லோக்கல்' ஆன கதாபாத்திரங்களிலும், படங்களிலும்தான் நடிப்பார் என்ற பேச்சு இருந்தது. அவர் ஹிந்திக்குப் போன பிறகு அது அப்படியே மாறிவிட்டது. ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயரெடுத்த கௌதம் மேனனுடன் தனுஷ் இணைந்து படப்பிடிப்பை ஆரம்பித்தது பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது. இந்தக் கூட்டணியில் வெளிவரும் படம் எப்படியும் ரசிகர்களுக்கு மாறுபட்ட தனுஷ் படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.
தனுஷ், சில நாட்களுக்கு முன் கார்த்திக் சுப்புராஜுடன் அறிவித்த புதிய கூட்டணி மேலும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தனது அடுத்தடுத்த அடியை தனுஷ் மிகச் சரியாக எடுத்து வைக்கிறாரே என்று மற்ற நடிகர்களையும் வியக்க வைத்துள்ளது. தன்னுடைய படங்களால் ரசிகர்களை சீக்கிரமே தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இப்போதைக்கு கூட்டணி அமைத்துள்ளதில் மிகவும் வலிமையாக இருப்பவர் தனுஷ் மட்டுமே.
விஷால் - முத்தையா, விஷால் - மிஷ்கின்
'குட்டிப் புலி, கொம்பன்' என்ற இரண்டு படங்களைக் கொடுத்த இயக்குனர் முத்தையா, விஷாலுடன் இணைந்து 'மருது' படத்தை எடுத்து முடித்துவிட்டார். மதுரைப் பின்னணியில் விஷால் நடித்து வெளிவந்த படங்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. முத்தையாவும் மதுரை, ராமநாதபுரம் பின்னணியில் படங்களைக் கொடுத்தவர். 'மருது' படத்தில் விஷாலுக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்திருப்பார் என்பது படத்தின் முதல் பார்வையைப் பார்த்த போதே தெரிந்தது. இந்தக் கூட்டணியின் முடிவு எப்படியிருக்கப் போகிறது என்பது அடுத்த மாதக் கடைசியில் தெரிந்துவிடும்.
விஷால் மிஷ்கினுடன் சேரும் அடுத்த கூட்டணி அறிவிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுவாக முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து படம் இயக்காத மிஷ்கின் விஷாலுடன் இணைந்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். அவர் இதற்கு முன் ஜீவாவுடன் இணைந்த 'முகமூடி' தோல்விப் படமாகவே அமைந்தது. அந்தத் தவறை விஷால் - மிஷ்கின் கூட்டணி முறியடிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா
'தனி ஒருவன்' என்ற வித்தியாசமான ஆக்ஷன் படத்தைக் கொடுத்து தமிழ்த் திரையுலகத்தை மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தித் திரையுலகத்தையும் ஆச்சரியப்படுத்தியவர் மோகன்ராஜா. அடுத்த படத்தில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி இயக்குனர்களுடன் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரை தன் படத்தை இயக்க சரியாக இழுத்துவிட்டார் சிவகார்த்திகேயன். இந்தக் கூட்டணியின் அறிவிப்பு மற்ற முன்னணி நடிகர்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். அந்த அதிர்ச்சியை மேலும் அதிகமாக்க சிவகார்த்திகேயன் ஜோடி நயன்தாரா, மற்றொரு நாயகனாக மலையாள முன்னணி நடிகர் ஃபகத் பாசில் என மக்கள் நலக் கூட்டணியை விட மேலும் மேலும் அதிர்ச்சி தரும் கூட்டணியாக இந்தக் கூட்டணி அமைந்துள்ளது.
விஜய் சேதுபதி - மணிகண்டன், விஜய் சேதுபதி - கேவி ஆனந்த்
'காக்கா முட்டை' என்ற அறிமுகப் படத்தின் மூலம் தேசிய விருதுகளை மட்டுமல்லாது மக்கள் விருதுகளையும் வாங்கியவர் இயக்குனர் மணிகண்டன். தற்போது 'குற்றமே தண்டனை' என்ற படத்தை முடித்து வெளியீட்டிற்காகக் காத்துள்ளார். இவரும் விஜய்சேதுபதியும் இணைந்து 'ஆண்டவன் கட்டளை' என்ற படத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் விஜய் சேதுபதி, தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனருடன் இணைவது ஒரு தரமான படத்தைத் தமிழ்த் திரையுலகத்திற்குத் தரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
விஜய் சேதுபதியின் மற்றுமொரு கூட்டணியும் முன்னணி ஹீரோக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த கூட்டணியாகவே அமைந்தது. இயக்குனர் கே.வி.ஆனந்துடன் விஜய் சேதுபதி இணைந்து படம் செய்ய இருப்பதும் அந்தப் படத்தில் நடிப்பதற்காக முயற்சித்திருந்த மற்ற ஹீரோக்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
சூர்யா - விக்ரம் குமார்
தமிழில் 'அலை, யாவரும் நலம்' என்று இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும் இயக்குனர் விக்ரம் குமாரை தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தெரியாது. தெலுங்கில் 2014ல் 'மனம்' என்ற மாறுபட்ட படத்தைக் கொடுத்த பிறகுதான் இங்கும் அவரைப் பற்றிப் பலரும் பேசினார்கள். அப்படிப்பட்ட இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா அமைத்த கூட்டணி எதிர்பாராத ஒன்றுதான். இதோ, '24' படமும் முடிந்து அடுத்த வார வெளியீட்டிற்குத் தயாராகிவிட்டது. வித்தியாசமான படங்களைத் தர வேண்டும் என்றால் வித்தியாசமான இயக்குனர்களுடன் இணைய வேண்டும் என்று சூர்யாவுக்குத் தெரியாதா என்ன ?.
மேலே சொன்ன புதிய கூட்டணிகளோடு இன்னும் சில கூட்டணிகளையும் கூடச் சொல்லலாம். ஆனால், ஆச்சரியம், அதிர்ச்சி, அதிசயம் ஆகிய அம்சங்களுடன் இணைந்த கூட்டணிகள்தான் மேலே குறிப்பிட்டவை.
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு கூட்டு முயற்சி. அதிலும் சரியான இயக்குனர்களிடம் சரியான நடிகர்கள் கூட்டணியாக இணையும் போது நிச்சயம் வித்தியாசமான புதுமையான படைப்பும் ரசிகர்களுக்குக் கிடைக்கும்.
புதிய கூட்டணிகள் தமிழ்நாட்டு அரசியலில் ஏமாற்த்தைத் தந்தாலும் தருமே தவிர, இந்த தமிழ்த் திரையுலகப் புதிய கூட்டணிகள் ஏமாற்றத்தைத் தராது என்று நம்புவோமாக....!