ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2015ம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தது. 2014-லும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து முதன் முதலாக ஒரு புதிய சாதனையைப் படைத்தது. அதே போல 2016ம் ஆண்டும் அமையும் என்பதற்கு முன்னோட்டமாக இந்த ஆண்டின் முதல் மாதமே நிரூபீத்து விட்டது.
ஜனவரி மாதம் 1ம் தேதியன்றே 5 திரைப்படங்கள் வெளிவந்து அந்த எண்ணிக்கையை வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது. ஜனவரி மாதத்தில் மொத்தமாக 18 படங்கள் வெளிவந்துள்ளன. சராசரியாக இதே அளவில் படங்கள் வெளிவந்தால் இந்த ஆண்டும் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவருவது உறுதி.
ஜனவரி மாதத்தில் வெளிவந்த 18 படங்களுமே முதல் நிலை நடிகர்கள் நடித்த படங்கள் அல்லது முதல் நிலை இயக்குனர்கள் இயக்கிய படங்கள், பிரம்மாண்டமான படங்கள் என்று சொல்ல முடியாது. அனைத்துமே ஓரளவிற்கு மீடியம் பட்ஜெட் படங்கள்தான். இருந்தாலும் தேவையற்ற செலவுகளைச் செய்து சாதாரண படங்களைக் கூட தேவையில்லாமல் அதிக செலவு செய்து கோடிகளை இழந்த படங்களும் அந்தப் பட்டியலில் உள்ளன.
ஜனவரி 1ம் தேதியன்று “அழகு குட்டி செல்லம், கரையோரம், பேய்கள் ஜாக்கிரதை, தற்காப்பு, மாலை நேரத்து மயக்கம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தைத் தவிர மற்ற படங்களுக்கு க்யூப் செலவாவது வசூலிகியிருக்குமா என்பது சந்தேகம்தான். 'மாலை நேரத்து மயக்கம்' படமும் அப்படி சொல்லிக் கொள்ளும்படியான படமாக இடம் பெறவில்லை. இருந்தாலும் மற்ற படங்களை விட ஓரளவிற்காவது பார்க்கும்படி இருந்தது.
ஜனவரி 8ம் தேதியன்று வெளிவந்த “திகிலோடு விளையாடு, அரிதாரம், மீனாட்சி காதலன் இளங்கோவன், குரங்கு கைல பூமாலை” ஆகிய படங்கள், இந்த ஆண்டின் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைப்பதற்காகவே வந்த படங்கள் மட்டுமே. இந்தப் படங்களுக்கு பத்திரிகையாளர் காட்சி கூட போடவில்லை என்பதை வைத்தே இந்தப் படங்களின் நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம். அது கூட செய்ய முடியாத இப்படிப்பட்ட படங்களை எதற்காக எடுக்கிறார்கள் என்றே புரியவில்லை.
ஜனவரி மாதத்தில் பொங்கல் தினம் 15ம் தேதி வந்தாலும் ஒரு நாள் முன்னதாகவே பொங்கல் படங்களை வெளியிட்டு வசூலை அள்ள நினைத்திருந்தார்கள். அன்றைய தினம் வெளிவந்த “கெத்து, தாரை தப்பட்டை, கதகளி, ரஜினி முருகன்” ஆகிய படங்களில் 'ரஜினி முருகன்' படம் மட்டுமே வசூல் சாதனை புரிந்த படமாக அமைந்துள்ளது. 'கெத்து' திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 15 கோடி என்கிறார்கள், ஆனால், படம் 5 கோடி கூட வசூலிக்கவில்லை என்பதுதான் உண்மை. மிகப் பெரிய அளவில் விளம்பரம், பெரிய நிறுவனம் என்று இருந்தாலும் நல்ல கதை இல்லை என்றால் ரசிகர்கள் நிராகரித்து விடுவார்கள் என்பதற்கு 'கெத்து' படம் சிறந்த உதாரணம்.
இளையராஜாவின் 1000மாவது படம் என்று வெளிவந்த 'தாரை தப்பட்டை' பாலா படமாகவும் இல்லாமல், இளையராஜா படமாகவும் இல்லாமல் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி தோல்வியைத் தழுவியது. 'கதகளி' படம் வழக்கமான விஷால் படம்தான். 234 தொகுதிகளிலும் உள்ள ரவுடிகளை விஷால் அழித்த பிறகுதான் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வார் என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடிக்கும் அளவிற்கு விஷால் இந்தப் படத்திலும் ஒரு ரவுடியைத்தான் எதிர்க்கிறார். விஷால், அவரை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்றால், ரசிகர்கள் மாறி விடுவார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
'ரஜினி முருகன்' படம் எதிர்பார்த்ததைப் போலவே வசூல் ரீதியாகவும் அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்து வருகிறது. சிவகார்த்திகேயனின் இந்த வெற்றி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது என்று கோலிவுட்டில் பரவலாகப் பேச்சு எழுந்துள்ளது.
ஜனவரி 22ல் வெளிவந்த 'மூன்றாம் உலகப் போர்' படம் எந்தப் போட்டியும் இல்லாமல் தனியாக வந்த படம். இருந்தாலும் மூன்று நாட்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் போன படமாக அமைந்தது.
ஜனவரி 29ல் “நனையாதே மழையே, நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க, அரண்மனை 2, இறுதிச் சுற்று” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'அரண்மனை 2, இறுதிச் சுற்று' ஆகிய படங்கள்தான் வசூலில் போட்டி போடும் படமாக அமைந்துள்ளன. 'அரண்மனை 2' படம் முதல் பாகத்தைப் போல இல்லை என்றாலும் கடந்த இரண்டு நாட்களாக வசூல் கொடுத்து வருகிறது என்கிறார்கள். 'இறுதிச் சுற்று' படத்திற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. ஏ சென்டர்களில் மட்டுமே ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் பி அன்ட் சி சென்டர்களிலும் நல்ல வரவேற்பைப் பெறுவதாகத் தெரிவிக்கிறார்கள்.
ஜனவரி மாதத்தில் இரண்டு பெண் இயக்குனர்களின் படங்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவில் இது ஒரு ஆச்சரியமான விஷயம். 'மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்குனராக அறிமுகமானார். 'றுதிச் சுற்று' படத்தை சுதா கோங்கரா இயக்கியுள்ளார்.
ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படங்களில் வசூலிற்காக 'ரஜினி முருகன்' படத்தையும், தரமான படம் என்பதற்காக 'இறுதிச் சுற்று' படத்தையும் ரசிகர்கள் எதிர்காலத்திலும் குறிப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
2016 ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படங்கள்
ஜனவரி 1
அழகு குட்டி செல்லம்
கரையோரம்
பேய்கள் ஜாக்கிரதை
தற்காப்பு
மாலை நேரத்து மயக்கம்
ஜனவரி 8
திகிலோடு விளையாடு
அரிதாரம்
மீனாட்சி காதலன் இளங்கோவன்
குரங்கு கைல பூமாலை
ஜனவரி 14
கெத்து
தாரை தப்பட்டை
கதகளி
ரஜினி முருகன்
ஜனவரி 22
மூன்றாம் உலகப் போர்
ஜனவரி 29
நனையாதே மழையே
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க
அரண்மனை 2
இறுதிச் சுற்று