தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகத்தில் வெள்ளச் சேதத்தையும் மறக்கும் அளவுக்கு பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது சிம்பு-அனிரூத் கூட்டணியில் உருவாகியுள்ள பீப் பாடல் எனும் சர்ச்சை பாடல். மிகவும் ஆபாசமாக வெளியாகி இருக்கும் இப்பாடலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக மகளிர் அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தினமும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இருவரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பீப் சாங் சர்ச்சை பற்றி பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்று இப்போது பார்ப்போம்...
புலமைப்பித்தன் : தமிழ் மொழி பாட்டு மொழி மாத்திரம் அல்ல, பண்பாட்டு மொழியும் கூட. உலகத்தில் தாய்குலத்தை உயர்த்தி பிடித்தது தமிழ் சமுதாயம். சிலப்பதிகாரம், மணிமேகலை என்று பெண்களை போற்றிய நாடு நம் நாடு, அவர்களை வணங்கிய நாம், இப்போது வெட்கப்படும் நிலையில் உள்ளோம். நீதி நிலைநாட்டாமல் போய்விட்டது. இது எப்படி இருக்கிறது என்றால், அல்வாவை மலத்தில் தொட்டுக்கொள்வது போன்று உள்ளது. பாட்டு, இசை இப்போது வசையாக வந்திருக்கிறது. இந்த பதர்களை நாம் அழிக்க வேண்டும். பச்சை வசனப்பாட்டு கேட்பதற்கே கேவலம். பண்பாடு தெரிந்தவர்கள் இந்த பதர்களை ஒட்டுமொத்த தாய்மார்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்ய வேண்டும்.
விவேகா : இந்த வரிகள் பயன்படுத்தியிருக்க கூடாது, அப்படி பயன்படுத்தியது யாராக இருந்தாலும் தவறு தான்.
தாமரை : 18 வருடங்களாகவே என் பாடல் பயணம் இருக்கிறது. தப்பான இரட்டை அர்த்த வார்த்தைகளோ, சமூகத்தை கெடுக்கும் வரிகளோ... நான் பயன்படுத்தமாட்டேன் என்று கொள்கை முடிவோடு கடைபிடித்து வரும் நிலையில், அதை இப்போதும் எப்போதும் கடைப்பிடிப்பேன். சமூகத்தின் எல்லா பகுதிகளும் சீரழிந்து வருகிறது. அதேப்போல் சினிமாவும் சீரழிந்து வருகிறது என்று சொல்வேன். அறம், விழுமியங்கள் அற்ற சமூகத்திற்கு, அறம், விழுமியங்கள் அற்ற படைப்புகள் தான் கிடைக்கும். பணம் மட்டுமே குறிக்கோளாக இன்று சமூகமே மாறிப்போனது.
இசையமைப்பாளர் கே : தேவையில்லாமல் பெண்களை திட்டி பாட்டு எழுதி, ஹிட் கொடுக்கும் காலம் முடிந்துவிட்டது. நமது கலாச்சாரத்திற்கு நல்ல விஷயங்களை கையில் எடுங்கள். தரம் தாழ்ந்த விஷயங்களை கையில் எடுக்க வேண்டாம். கேவலமான பப்ளிசிட்டி தேவையில்லாதது.
கபிலன் : எம்.ஏ., எம்.பில்., முடித்து தமிழ் இலக்கியம் முறையாக பயின்று பாடல் எழுத வந்த முறையான பாடலாசிரியர் நான். எல்லா துறைக்கும் அனுபவத்தோடு உள்ளே வர முடிகிறது. ஆனால் இசைக்கும், பாடல் எழுதுவதற்கும் அந்த வரைமுறை இல்லை. முதலில் பாடலாசிரியர் என்பவருக்கு வரைமுறை கொண்டு வர வேண்டும். நான் தமிழில் எழுதிய, ஆழம் குயில் கூவும் ரயில், ஆசை ஆசை.., உன் சமையலறையில்... உள்ளிட்ட இந்தபாடல்களும் வெற்றி பெற்றன. இளைய சமுதாயம் விழிப்போடு இருப்பது அவசியம்.
தாஜ்நுர் : இந்த பீப் சாங் ரொம்ப வருத்தமான விஷயம். பாட்டைகேட்டவுடன் கோபம் தான் வந்தது. இந்தமாதிரி பாடல் எழுதி வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை வளரவிட்டால் இதுபோன்ற பாடல்கள் இன்னும் உருவாகிவிடும். சமூகத்திற்கு இது பெரிய ஆபத்து. எது செய்தாலும் ஹிட்டாகிவிடும், நம்மை யாரும் ஒன்று செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். குழந்தைகளை கருத்தில் கொண்டாவது இதுபோன்ற பாடல்களை தவிர்க்க வேண்டும்.
பவதாரிணி : இந்தமாதிரி ஒரு பாட்டை ஏன் பண்ணாங்க என்று எனக்கு தெரியவில்லை. மக்கள் கேட்கிற மாதிரியும், பிறர் கற்று கொள்ளக்கூடிய பல விசயங்களை இசை மூலம் சொல்லலாம். இதைப்போல் எல்லாம் வெளிநாடுகளில் செய்ய முடியாது. பெண்களுக்கு சட்டதிட்டம் உள்ளது. நமது கலாச்சாரத்தை காக்கும் அளவிற்கு அடுத்த தலைமுறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்
இசையமைப்பாளர் எல்வி.கணேஷ் : சிம்பு-அனிரூத் இரண்டு பேருடன் நான் வேலை பார்த்துள்ளேன். இரண்டு பேரும் நல்ல திறமைசாலிகள், ஆனால் இப்படி ஒரு பாட்டை உருவாக்க அவசியம் என்ன.? முறைப்படி அவர் வெளியிடவில்லை என்கிறார்கள் ஆனால் இது சரியான பாடல் இல்லை. இப்படித்தான் ஒரு பாட்டை ஹிட் பண்ண வேண்டும் என்று அவசியம் கிடையாது. இது மிகவும் வருந்தத்தக்க செயலாக உள்ளது.
இசையமைப்பாளர் சத்யா : இந்தமாதிரி ஒரு பாடல் சமூகத்திற்கு நல்லது அல்ல. சமூகத்திற்கு விரோதமான வார்த்தைகள் கேட்பதற்கே வருத்தமாக உள்ளது. நாளை கலாச்சார பாதிப்பு ஏற்படாது இருக்க நாம் ஒவ்வொரு வரும் பொறுப்பு
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா : இப்போதெல்லாம் கவர்ச்சி படங்களில் கூட பாடல்கள் இனிமையாக வருகின்றன. இப்படி கொச்சைப்படுத்தி பாடல்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது யாருக்கான நிர்பந்தம். மக்கள் கேட்பதற்கான இசை இப்படியொரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தியது, நாம் தாய்மொழியான தமிழ் மொழிக்கே அசிங்கம் ஏற்படுத்தியது போல. எம்எஸ்வி, இளையராஜா போன்றவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நாம் வாழ்கிறோம். இங்கு பொறுப்பும், கூடுதல் விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
இசையமைப்பாளர் தரண் : பீப் சாங் என்பது வெளிநாட்டு கலாச்சார பாடல். அங்கே ஒரு கான்சட்டில் பாடலை ரிலீஸ் செய்து ஒரு தப்பான வார்த்தையை கட் செய்துவிட்டு பீப் வைப்பார்கள். அந்த கலாச்சாரத்திற்கு அந்தப்பாடல் வெற்றி பெறும். ஆனால் நம் கலாச்சாரத்திற்கு இது நல்ல விஷயம் இல்லை. எனக்கு எப்போதும் மெலடி பாடல் பிடிக்கும். நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாரிஜாதம் படத்தில் உன்னை கண்டனே.. பாடல் நான் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் ஊதா கலரு ரிப்பன், எவன்டி உன்ன பெத்தான் போன்ற பாடல்கள் தான் வெற்றி பெற்றது. இதற்கு மக்களும் தான் பொறுப்பு. மெலடி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. கலாச்சார மாற்றம் மாறிவருவது வருத்தம் தரும் விஷயம் தான். இப்போது இளைஞர்களுக்கான காலம் இது. கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு.
பழனிபாரதி : இந்தப்பாடல் கண்டிப்பான வருத்தமான செயல். சினிமா பாடல் என்பது வெகுஜன கலை. மக்கள் முன்மாதிரியாக எடுத்து கொள்வார்கள். வார்த்தைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். சூரியகாந்தி படத்தின் 100வது நாளில் பெரியார் கலந்து கொண்டு, சினிமாக்காரர்களின் பொறுப்பு, மிகப்பெரிய பொறுப்பு என்று சொன்னார். ஏனென்றால், மக்களிடம் விஷயங்களை கொண்டு செல்வது பெரும் பங்கு சினிமாவிற்கு இருக்கிறது. படங்கள், கதைகளை மக்கள் மறந்தாலும், பாடல்களை மறப்பதில்லை. கடைசிவரை பெண்களை சரக்கு பொருளாக பயன்படுத்தி வருகின்றனர். ஒன்றை கவனியுங்கள், ஆண்களுக்கு எதிராக எந்த கலாச்சார வார்த்தையும் இல்லை. இப்பொதெல்லாம் குழந்தைகள், அடுத்த தலைமுறைகள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். 10 வயதுடையவர்கள் எல்லாம் இணையதளத்தை சாதாரணமாக கையாளுகின்றனர். எப்படி இந்தப்பாடல் வெளியானது என்று பொறுப்பற்ற தகவல் எதையும் யோசிக்க முடியாது. நம்மிடம் இருந்ததால் தானே வெளியே போனது. இந்த சமூகத்தின் மீது பொறுப்பும், சமூக அக்கறையும் கொள்ள வேண்டும். தவறு செய்பவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.
யுகபாரதி : பாடலில் பயன்படுத்த தக்க சரியான சொல் இல்லை. இது கண்டித்தக்கது. நானே யோசித்தேன், இனி பாடல்கள் எழுதலாமா.? இல்லை சொந்த ஊருக்கு என்று விவசாயம் செய்யலாமா.? என்று யோசிக்கிறேன். உங்கள் பேனாவில் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் சமுதாய அக்கறையுடன் இருந்தால் நல்லது.