இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கண்களால் பேசும் நடிகையர் வெகு சிலர். சின்ன சின்ன அசைவுகளால், இயல்பான நடிப்பால், ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்களில் முக்கியமானவர், சமீபத்திய வரவு, அனுமோல். இவர், பகத் பாசில், துல்கர் சல்மான் என்று, ஜோடி போட்டு நடித்தவர்; மலையாளத்தில்
தேசிய விருதை கிட்டத்தட்ட தொட்டு வந்தவர்; தமிழில் சமீபத்தில் வெளிவந்த, ஒரு நாள் இரவில் படத்தில், விலைமாதுவாக நடித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அவர், நமது நாளிதழுக்காக பேசியது இதோ:
உங்களைப் பற்றி?
கேரளாவில், நடுவட்டம் என்ற கிராமத்தில் இருந்து வந்தவள். என் சிறு வயதில், அப்பா இறந்துவிட்டார். வீட்டில், அம்மா, நான், தங்கை, என சிறிய குடும்பம். கோவையில் பொறியியல் படிப்பை முடித்து, வேலைக்காக கொச்சிக்கு சென்றேன். அங்கேதான் என் வாழ்க்கை மாறியது. பிரபல சேனலில் தொகுப்பாளினியாக சேர்ந்து, பல பிரபலங்களை பேட்டி எடுத்தேன். நான் நிறைய பேசுவேன்; அதனால், எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது, தமிழ், மலையாளம் உட்பட, 20 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு நாள் இரவில் படத்தில், விலைமாதுவாக நடித்த, உங்கள் நடிப்பு பேசப்பட்டதே, அந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?
மலையாளத்தில் வெளிவந்த, ஷட்டர் படத்தோட, ரீமேக்தான் இந்த படம். தமிழில், இந்த ரோலில் நடிக்க முடியுமா என்று தயாரிப்பாளர், ஏ.எல்.விஜய் கேட்டதும், சவாலான அந்த
கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பயந்தேன். மலையாளத்தில் நடித்த, நடிகை ஷஜிதா
நம்பிக்கையளித்தார். படத்தை பார்த்த சிலர், என் பார்வை, நடிப்பு இயல்பாக, நன்றாக இருந்தது என்று பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.
படத்தில் மிகவும் சிரமமான காட்சி எது?
மொபைல் போனில் சத்தமாக பேசும் காட்சியில் நடித்த போது மிகவும் சிரமமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த காட்சி எடுக்கப்பட்ட போது, அழுதுவிட்டேன். ஆனால், இயக்குனர் ஆண்டனி, என்னை சமாதானப்படுத்தி, நடிக்க ஊக்குவித்தார்.
சாயில்யம் படத்திற்காக, தேசிய விருதை, நீங்கள் வாங்க முடியாமல் போன வருத்தம் இருக்கா?
கடந்த, 2013ல் அந்த விருதையும், அந்த படத்தையும் பற்றி, மொத்த மீடியாவும், மக்களும் பேசினர். சாயில்யம் படத்தில் நடித்த பின், பெரிய இயக்குனர்களும், மொழி தெரியாதவர்களும் கூட பாராட்டி பேசியது பெருமையாக இருந்தது. விருது கிடைக்காததை எண்ணி கஷ்டப்பட விரும்பவில்லை. சமீபத்தில், சினிமாவுக்கு வந்த என்னை, என் நடிப்பை, மக்கள் பாராட்டியதை, எனக்கு கிடைத்த விருதாக நினைக்கிறேன்.
மேக்கப் இல்லாமல் நடிப்பதையே விரும்புவது ஏன்?
மேக்கப் போட்டால், அதை கலையாமல் பார்த்துக் கொள்வதற்கு பொறுமை வேண்டும்; அது என்னிடம் இல்லை. மேலும், நான், மேக்கப் போட்டால், வேறு யாரோ மாதிரி தெரிவேன். இயக்குனர், ஒளிப்பதிவாளர் கேட்டுக்கொண்டால் மட்டும் சிறிதளவு மேக்கப் போடுவேன். மற்ற படி, இயல்பான முகமும், சாதாரண உடையும் தான் எனக்கு பிடித்தது.
தமிழ், மலையாளத்தில் எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை?
எந்த மொழியாக இருந்தாலும் மனதுக்கு பிடித்த படங்கள், நடிக்க வாய்ப்பு உள்ள கதா
பாத்திரங்கள், சூழ்நிலை நன்றாக இருக்க வேண்டும்; மற்ற படி பெரிய ஆசை எல்லாம்
எனக்கு இல்லை.
மலையாள நடிகைகள் இப்போது நிறைய பேர் பாடுவதில் ஆர்வமாக இருக்கின்றனரே?
எனக்கு பாட்டெல்லாம் பாட வராது. ஆனால், மோகினி ஆட்டம், பரதம், கதகளி தெரியும்; நிறைய நிகழ்ச்சிகள் செய்கிறேன். அப்புறம், கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். மற்ற படி பெரிய திறமைகள் எதுவும் இல்லை.
எப்போது திருமணம்?
நான் திருமணத்தை தவிர்க்கவே இன்ஜினியரிங் படித்தேன். சிறு வயதில் அப்பா இறந்த பின், அம்மாவின் வாழ்க்கையை பார்த்து, நானும் தனியாக வாழ்ந்தால் என்ன என்று இருந்தேன். திருமணம் என்ற பேச்சு எடுத்தாலே, ஒரே படபடப்பு இருக்கு.
கஷ்டப்பட்டு உங்களை இவ்வளவு துாரம் கொண்டு வந்த உங்க அம்மாவுக்கு எதிர்காலத் தில் என்ன செய்யப் போறீங்க?
நான் செய்யும் வேலை, சம்பாதிப்பது எல்லாமே என் அம்மாவுக்கும், தங்கைக்கும் தான். இன்னும் சம்பாதித்து சேர்த்து வைக்கவில்லை. சேர்க்கும் பணத்தில், கொஞ்சம் செலவும் செய்வேன். இப்பவும், அப்பா சேர்த்து வைத்த சொத்து தான் எங்களை காப்பாற்றி வருகிறது.