பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை வாரத்திற்கு வாரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. கடந்த வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டப் போவது நிச்சயம்.
இந்த மாதத்தில் அக். 30 வரை வெளியான படங்களின் எண்ணிக்கை 180ஐத் தாண்டிவிட்டது. இன்னும் முழுவதுமாக இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் எப்படியும் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அக்டோபர் மாதம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 31 படங்கள் வெளிவந்து மார்ச் மாதம் தான் முதலிடத்தில் உள்ளது.
அக்டோபர் மாதம் 1ம் தேதியன்று பலரும் எதிர்பார்த்த 'புலி' படம் திரைக்கு வந்தது. விஜய் முதன் முறையாக நடித்த சரித்திரப் படம், 19 வருடங்கள் கழித்து ஸ்ரீதேவி மீண்டும் தமிழில் நடித்த படம் என பல சிறப்புகளுடன் வந்த 'புலி' கொஞ்சம் கூட பாயாமல் புல்லைத் தின்று விட்டு படுத்துக் கொண்டது. தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பைக் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் வீணடித்து விட்டார் இயக்குனர் சிம்புதேவன்.
2ம் தேதியன்று வெளிவந்த 'டம்மி டப்பாசு' படம் பெயரில் உள்ள டம்மியைப் போலவே டம்மியாகப் போய்விட்டது. பத்திரிகையாளருக்கென ஒரு காட்சி கூட போட முடியாதவர்கள் எதற்காக திரைப்படம் எடுக்க வருகிறார்கள் என்றே தெரியவில்லை.
9ம் தேதியன்று வெளிவந்த நான்கு படங்களுமே மினிமம் பட்ஜெட் படங்கள்தான். அந்தப் படங்களில் நல்ல கருத்தைச் சொன்னதற்காக 'கத்துக்குட்டி' படம் மட்டும் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இருந்தாலும் பெரிய விளம்பரம் எதுவும் இல்லாமல் இந்தப் படம் பலரைச் சென்றடையாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட படங்களை பெரிய நிறுவனங்கள் ஏதாவது வாங்கி வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். திரையுலகில் படங்களை வாங்கி வெளியிடும் பலரும் தரத்தை விட வசூலையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'மசாலா படம்' சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சிப்பவர்களைப் பற்றிய கதையைக் கொண்ட படமாக வந்தது. தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு படமெடுக்கும் எண்ணம் கொண்ட இயக்குனரிடமிருந்து வந்த படம் போலத்தான் இந்தப் படம் இருந்தது. ரசிகர்களின் பார்வையில் ஒரு படம் புரியும்படி இருந்தால்தான் அந்தப் படம் ரசிகர்களைச் சென்றடையும் என்பதை இந்தப் படம் இயக்குனருக்கு நன்றாகவே கற்றுக் கொடுத்திருக்கும்.
16ம் தேதி வெளிவந்த படங்களில் குறிப்பிடும்படியாக இருந்த ஒரே படம் 'சிவப்பு' மட்டுமே. இந்தப் படமும் கடந்த ஆண்டே வெளிவந்திருக்க வேண்டிய படம். ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதமாகி வெளிவந்தது. இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்து எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதைச் சொன்ன படம். ராஜ்கிரண் நடிப்பு மட்டுமே இந்தப் படத்தைக் கொஞ்ச நாட்களுக்காவது ஓடியதற்கு பக்க பலமாக இருந்தது. சரியாச சமயத்தில் வந்திருந்தால் இந்த சிவப்புக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு இல்லையென்றாலும் ஒரு பச்சைக் கம்பள வரவேற்பாவது கிடைத்திருக்கும்.
'மய்யம்' போன்ற படமெல்லாம் திரைப்படம் என்ற வகையில் கூட சேர முடியாத ஒரு படமாகவே இருந்தது. மாணவர்களை வைத்து புதிய முயற்சி என்று சொல்லி பணத்தை வீணடித்ததற்கு கோடம்பாக்கத்தில் நல்ல கதையோடு சுற்றிக் கொண்டிருக்கம் திறமைசாலிகளில் ஒருவரை அடையாளம் கண்டு ஒரு படத்தை இயக்க வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.
சரஸ்வதி பூஜை தினத்தை முன்னிட்டு 'நானும் ரௌடிதான், 10 எண்றதுக்குள்ள' ஆகிய படங்களும் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் மில்டன், விக்ரம் கூட்டணியைத் தோற்கடித்து தனுஷ், விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி கூட்டணி 'நானும் ரௌடிதான்' மூலம் நல்லதொரு வெற்றியைப் பெற்றது. '10 எண்றதுக்குள்ள' மாதிரியான அரைத்த மாவையே அரைத்த படங்களை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பார்ப்பது என்று தெரியவில்லை.
'நானும் ரௌடிதான்' படம் நயன்தாராவின் நடிப்பால் அனைவரையும் கவர்ந்த படமாக அமைந்தது. அவருடைய நடிப்பிற்கு முன் விஜய் சேதுபதியும், பார்த்திபனும் திணறித்தான் போனார்கள் என்பது உண்மை. சொந்தக் குரலில் நயன்தாரா பேசியிருப்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தை தேசிய விருதுப் போட்டிக்கு அனுப்பினால் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கும்.
நேற்று 30ம் தேதி மட்டும் 8 படங்கள் வெளியாகின. அவற்றில் 'ஓம் சாந்தி ஓம்' மட்டுமே ஓரளவிற்காவது தெரிந்த முகம் நடித்த படமாக வெளிவந்தது. நீண்ட நாட்களாக பட வாய்ப்பில்லாமல் தவித்ுக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள படம். எப்போதோ வந்திருக்க வேண்டிய படம், நீண்ட தாமதத்திற்குப் பின் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தையும் சேர்த்து மற்ற படங்களும் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டியுள்ள படங்களே.
அக்டோபர் மாதத்தில் வெளிவந்த 23 படங்களில் 'நானும் ரௌடிதான் மட்டுமே ஒரே ஒரு படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. ஆக, அக்டோபர் மாதத்தில் வெளிவந்த படங்களின் வெற்றி விகிதம் வெறும் 4.3 சதவீதம் மட்டுமே. படங்களின் எண்ணிக்கை அதிகமாவதில் என்ன பயன் இருக்கிறது, நல்ல படங்களும், தரமான படங்களும், வசூலைக் குவிக்கும் படங்களும் வருவதில்லையே என்ற ஏக்கம் இன்னமும் தொடர்கிறது.
அக்டோபர் மாதத்தில் வெளிவந்த படங்கள்
அக்டோபர் 1
புலி
அக்டோபர் 2
டம்மி டப்பாசு
அக்டோபர் 9
அந்தாதி
கத்துக்குட்டி
மசாலா படம்
சதுரன்
அக்டோபர் 16
அதிரடி
மரப்பாச்சி
மய்யம்
திரைப்பட நகரம்
சில்லுனு ஒரு பயணம்
சிவப்பு
அக்டோபர் 21
10 எண்றதுக்குள்ள
நானும் ரௌடிதான்
குபேர ராசி
அக்டோபர் 30
அபூர்வ மகான்
ஆத்யன்
சிக்கிக்கு சிக்கிக்கிச்சு
இளைஞர் பாசறை
கதிர்வேல் காக்க
ஓம் சாந்தி ஓம்
பள்ளிக்கூடம் போகாமலே
விரைவில் இசை