இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் பண்டிகை நாட்களில் புதிய படங்கள் வருவது அந்தப் படங்களுக்கும் சிறப்பானதாக அமையும். பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, தீபாவளி ஆகிய நாட்களில் வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு.
இப்போது அந்த நாட்களுடன் வேறு சில பண்டிகை நாட்களிலும் புதிய படங்கள் வெளியாகின்றன. இந்த ஆண்டில் அப்படிப்பட்ட ஒரு சிறந்த நாளாக அக்டோபர் 21ம் தேதி அமைய உள்ளது. 21ம் தேதி சரஸ்வதி பூஜை, 22ம் தேதி விஜயதசமி, 23ம் தேதி மொஹரம் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அதன் பின் 24, 25 சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வரப் போகிறது என்பதால் அந்தத் தேதிகளை மனதில் வைத்து சில புதிய படங்கள் வெளியாக உள்ளன.
“10 எண்றதுக்குள்ள, நானும் ரவுடிதான், இஞ்சி இடுப்பழகி, கோ 2, ஆகிய படங்கள்தான் தற்போதைக்கு அக்டோபர் 21ம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் சில படங்கள் அன்றைய தேதியில் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், கடைசி நேரத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. அந்தப் பட்டியலில் மேலும் சில படங்களும் இடம் பெற வாய்ப்புண்டு. அக்டோபர் 21ல் வெளிவர உள்ளதாக எதிர்பார்க்கப்படும் படங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தைப் பார்ப்போம்.
10 எண்றதுக்குள்ள
'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் மில்டன். அந்தப் படம் சுமாரான வெற்றியைக் கூடப் பெறாமல் தோல்வியைத் தழுவியது. மீண்டும் ஒளிப்பதிவு பக்கம் திரும்பிய விஜய் மில்டனுக்குள் இருந்த இயக்குனர் தாகம், ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவருக்குள் அதிகம் தூண்ட வைத்தது. அதன் விளைவே 'கோலி சோடா' படம். சில பல லட்சங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட படம் சில பல கோடிகளை லாபமாக சம்பாதித்துக் கொடுத்தது. அந்த சூட்டோடு சூடாக விக்ரமிடம் கதை சொல்லி ஓகே வாங்கி இதோ '10 எண்றதுக்குள்ள' படத்தை எடுத்து முடித்துவிட்டார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் இமான் இசையமைப்பில் விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடிக்க ஒரு பரபர ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீடும் நடக்க உள்ளது. அக்டோபர் 21ம் தேதி வருகிறோம் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். 'ஐ' படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு. படத்தில் நாயகியாக நடித்துள்ள சமந்தா கூட வெறும் டூயட்டுக்கும் காதலுக்கும் மட்டும் படத்தில் இல்லை என்கிறார்கள். மற்ற படங்களை விட இந்தப் படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நானும் ரவுடிதான்
வித்தியாசமான படங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் இதுவரை நடித்து வந்த விஜய் சேதுபதி, முற்றிலும் ஒரு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்தான் 'நானும் ரவுடிதான்'. சிம்பு, வரலட்சுமி நடித்த 'போடா போடி' படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படம் இது. விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனை வைத்து சில படங்களைத் தயாரித்த தனுஷ், முதல் முறையாக விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதே இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நாயகி நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக பரபரப்பாக கிசுகிசு வேறு கிளம்பியது. அது படத்திற்கு இலவச விளம்பரமாகவே அமைந்து விட்டது. கடந்த வாரம்தான் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்களின் வெளியீடு விரைவில் நடக்க உள்ளது. ஒரு புதிய கூட்டணி நிச்சயம் சுவாரசியமான படத்தைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது இயல்பான ஒன்றுதான்.
இஞ்சி இடுப்பழகி
'இரண்டாம் உலகம்' படத்தில் இணைந்த ஆர்யா, அனுஷ்கா ஜோடி மீண்டும் இணைந்துள்ள படம் 'இஞ்சி இடுப்பழகி'. செல்வராகவன் இயக்கிய 'இரண்டாம் உலகம்' படம் படுதோல்வியடைந்து நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்ததால் ஆர்யாவும், அனுஷ்காவும் பெரிய மனதுடன் இந்தப் படத்தில் நடிக்க முன்வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழில் 'இஞ்சி இடுப்பழகி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்ற பெயரிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்காக இரண்டரை மாதங்களில் சுமார் 20 கிலோ எடையைக் கூட்டியுள்ளார் அனுஷ்கா. இதுவரை எந்த ஒரு நாயகியும் செய்யாத ஒரு விஷயத்தை அவர் செய்திருப்பது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடப்பதற்குள் கூட்டிய அந்த எடையை அனுஷ்கா உடனடியாக குறைக்க வேண்டுமாம். அவரின் இந்த ஈடுபாடே படத்தைப் பற்றி அதிகம் பேச வைத்துள்ளது. பிரகாஷ் கொவேலமுடி இயக்கத்தில் மரகதமணி இசையமைத்துள்ள படம் இது. சோனல் சௌஹான் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
கோ 2
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா நடித்த 'கோ' படம் 2011ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் படத்தை இயக்கிய இயக்குனர்தான் இயக்குவார், முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள்தான் நடிப்பார்கள். ஆனால், 'கோ 2' படத்தைப் பொறுத்தவரையில் முற்றிலுமாக வேறு கலைஞர்கள்தான் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சரத் என்ற அறிமுக இயக்குனர் இயக்க, பாபி சிம்ஹா, நிக்கி கல்ரானி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் புதிய கதையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கென தனியாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. 'ஜிகதர்ண்டா' வெற்றிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் திடீர் நாயகனாக உயர்ந்துள்ள பாபி சிம்ஹாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் படமாக இந்தப் படம் அமையும். பிரகாஷ்ராஜ்தான் இந்தப் படத்தின் மையப் புள்ளி. அவரின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளதோ அதுதான் படத்தின் வெற்றிக்குத் துணையாக அமையப் போகிறது.
மேலே சொன்ன நான்கு படங்களைத் தவிர வேறு சில புதிய படங்களும் விஜயதசமி வெளியீட்டில் இடம் பெறலாம். அல்லது மேலே சொன்ன நான்கு படங்களின் வெளியீட்டில் கூட மாற்றம் ஏற்படலாம்.
இப்போதெல்லாம் ஒரு படம் வெளியாகி காலையில் தியேட்டரில் பார்க்கும் வரை அந்தப் படத்தின் வெளியீடு பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது என்ற நிலை வந்துவிட்டது. விஜயதசமி வெளியீட்டில் அந்த ஐந்து நாட்கள் விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றியையும், வசூலையும் அள்ளப் போவது யார் ? என்பதற்கு நாம் இன்னும் 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.