'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2015ம் ஆண்டின் ஆகஸ்ட் மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்றுடன் இதுவரை 140 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் அதிகமாக வெளிவந்துள்ளன. இதே நிலை நீடித்தால் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
படங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக வெற்றி விகிதங்கள் குறைந்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. மாதத்திற்கு ஒரு படம் பெரிய வெற்றியைப் பெற்றால் பெரிது என்ற அளவில்தான் வெற்றி விகிதம் அமைந்துள்ளது. படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்கும், வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட தியேட்டர்காரர்களுக்கும் லாபத்தைக் கொடுக்கும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இந்த ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரையில் 16 படங்கள் வரை வெளிவந்துள்ளன. இந்த 16 படங்களில் நேற்று மட்டும் 'தனி ஒருவன், தாக்க தாக்க, அதிபர், எப்போ சொல்லப் போற' ஆகிய படங்கள் நேற்று வெளிவந்தன. இந்த நான்கு படங்களைப் பொறுத்தவரையில் நேற்றைய நிலவரப்படி 'தனி ஒருவன்' படத்திற்கு மட்டுமே தனிப்பட்ட வரவேற்பு உள்ளது.
அண்ணன் ராஜா இயக்க, தம்பி ரவி நாயகனாக நடித்து வெளிவந்துள்ள 'தனி ஒருவன்' படம் மீண்டும் அந்தக் கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள். தமிழ் சினிமாவில் புத்திசாலித்தனமான ஒரு ஆக்ஷன் படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்ட குறையை இந்தப் படம் போக்கியுள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதென்று தெரிவிக்கிறார்கள்.
மற்றொரு அண்ணன், தம்பி கூட்டணியான அண்ணன் சஞ்சீவ் இயக்க, தம்பி விக்ராந்த் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள 'தாக்க தாக்க' படம் அவர்களுக்கு ஒரு நல்ல முயற்சி என்ற பாராட்டை மட்டும் பெற்றுத் தரும் என்கிறார்கள். கமர்ஷியலாக இந்தப் படம் வெற்றி பெறுமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான் என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள 'அதிபர்' படம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்ற தகவலே கிடைத்துள்ளது. 'எப்போ சொல்லப் போற' படத்தைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
21ம் தேதி வெளிவந்த 'இவங்க அலுச்சாட்டியம் தாங்க முடியலை, திகார், வண்ண ஜிகினா' ஆகிய படங்களில் 'வண்ண ஜிகினா' படத்தின் கதை சிறப்பானதாக இருந்தாலும் அது சொல்லப்பட்ட விதம், நட்சத்திரத் தேர்வு படத்திற்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 'திகார்' படம் தமிழ்ப் படமா அல்லது மலையாளப் படமா என்ற குழப்பத்திலேயே ரசிகர்களைத் திருப்திப்படுத்தாமல் போய்விட்டது. ஒரு தமிழ் நடிகரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டால் அது தமிழ்ப் படமாகிவிடுமா என்று கேட்கிறார்கள். 'இவங்க அலுச்சாட்டியம் தாங்க முடியலை' படம் படங்களின் எண்ணிக்கையை மட்டும் கூட்டியிருக்கிறது.
14ம் தேதி 'அகிலா முதலாம் வகுப்பு, நிராயுதம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாலு' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. 'அகிலா முதலாம் வகுப்பு, நிராயுதம்' ஆகிய படங்களை ரசிகர்கள் நிராகரித்ததற்கான காரணத்தை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. தனக்கு 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் மூலம் மிகப் பெரிய கமர்ஷியல் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் ராஜேஷுக்கு உதவி செய்யப் போய் ஆர்யா சொந்தமாக தயாரித்த 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் கொஞ்சம் சூடுபட்டுக் கொண்டார் என்றுதான் சொல்கிறார்கள். அரைத்த மாவையே அரைப்பதையும், குடிக்கும் காட்சிகளையும் விட்டு ராஜேஷ் புதிதாக எப்போது சிந்திக்கிறாரோ அப்போதுதான் அவருக்கு மீண்டும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி வரும். இருந்தாலும் முதல் சில நாட்கள் படம் ஓரளவுக்கு வசூலைக் கொடுத்துள்ளது என்கிறார்கள்.
வருமா, வராதா என வெளியீட்டுத் தேதி வரை சந்தேகத்தை ஏற்படுத்தி வந்த 'வாலு' படம் ஒரு வழியா 14ம் தேதி வெளியானது. மூன்று வருடங்களாக காத்திருந்த தனது ரசிகர்களை சிம்பு நிறையவே ஏமாற்றிவிட்டார். வழக்கமான காதல், வழக்கமான காட்சிகள் என தற்போதைய டிரெண்டுக்கு படம் இல்லை என்பதே அனைவரின் கருத்து. சிம்புவின் அடுத்த படங்களாவது நல்ல படங்களாக வந்து அவரைக் காப்பாற்றட்டும்.
ஆகஸ்ட் 7ம் தேதி “அழகே இல்லாத அழகான கதை, குரங்கு கைல பூமாலை, கலை வேந்தன், வந்தா மல, சண்டி வீரன்” ஆகிய படங்கள் வெளிவந்த அனைத்துப் படங்களுமே சிறிய படங்கள்தான். 'சண்டி வீரன்' படத்தில் மட்டுமே தெரிந்த முகமான அதர்வா கதாநாயகனாக நடித்திருந்தார். 'களவாணி, வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய சற்குணா 'சண்டி வீரன்' படத்தையும் இயக்கினார் என்பது ஆச்சரியம்தான். இந்தக் கதையில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என நினைத்து பாலா தயாரிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. அழுத்தமான விஷயங்களோ, சம்பவமோ இல்லாத ஒரு படமாகவே இந்தப் படம் அமைந்தது. மற்ற நான்கு சிறிய படங்களுக்கும் வந்த வரை லாபம் என்ற நிலைதான்.
ஆக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியான 16 படங்களில் நேற்று வெளிவந்த 'தனி ஒருவன்' படம் மட்டுமே வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும் என்று சொல்கிறார்கள். ஆனால், படத்தின் தயாரிப்புச் செலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவ்வளவு தொகையையும் இந்தப் படம் வசூலிக்குமா என்பது சந்தேகம் என்றும் சொல்கிறார்கள். தயாரிப்புச் செலைவைக் குறைக்காமல் படங்களின் வெற்றியையும், லாபத்தையும் அதிகம் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தரும் என்பது மட்டுமே கடந்த சில மாதங்களில் நடந்து வரும் ஒரு விஷயமாக உள்ளது.
அடுத்த நான்கு மாதங்களில் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டி விடும் என்பது மட்டும் உறுதி. எண்ணிக்கையில் கடந்த ஆண்டைக் கடந்து என்ன பயன் ?, வசூலிலும் தாண்டினால் மட்டுமே தயாரிப்பாளர்களின் பாக்கெட்டும் நிறையும், மனமும் நிறையும்...
ஆகஸ்ட் 2015 - வெளிவந்துள்ள படங்கள்.
ஆகஸ்ட் 7
அழகே இல்லாத அழகான கதை
குரங்கு கைல பூமாலை
கலை வேந்தன்
வந்தா மல
சண்டி வீரன்
ஆகஸ்ட் 14
நிராயுதம்
அகிலா முதலாம் வகுப்பு
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
வாலு
ஆகஸ்ட் 21
இவங்க அலுச்சாட்டியம் தாங்க முடியலை
திகார்
வண்ண ஜிகினா
ஆகஸ்ட் 28
தனி ஒருவன்
தாக்க தாக்க
அதிபர்
எப்போ சொல்லப் போற