ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியின் நூற்றாண்டு விழா மிக எளிமையாக நடந்தேறியது. பல்கலைகழக இதழியல் துறையின் சார்பில் நடந்த இந்த விழாவின் தலைப்பு "திராவிட இயக்க தொடர்பியலின் கதாநாயகன்" என்பதாகும். ஆம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் முதல் இன்றைய விஜயகாந்த் வரை எத்தனையோ நடிகர்கள் தமிழக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி. திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தனது புகழ், பணம், திறமை அனைத்தையும் கொடுத்தவர்.
தி.மு.வின் தலைமையிடமான அண்ணா அறிவாலயத்திலோ அல்லது பொதுமக்கள்கூடும் பிரமாண்ட மைதானத்திலோ நடந்திருக்க வேண்டிய, தி.மு.க நடத்தியிருக்க வேண்டிய நூற்றாண்டு விழா அண்ணா பல்கலைகழகத்தின் அரங்கில் நடந்திருக்கிறது. நடிப்பிசை புலவரை அவர்கள் மறந்திருக்கலாம். நாம் அவரை நினைவு கூறுவோம்....
நாடகத்தில் துவங்கிய வாழ்க்கை
கும்பகோணம் அருகில் உள்ள அம்மாசத்திரம் என்ற சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1914ம் ஆண்டு பிறந்தவர் கே.ஆர்.ராமசாமி. தந்தை ராமபத்திரன் செட்டியார், தாய் குப்பம்மாள், வீட்டுக்கு 7வது பிள்ளை. இந்தக் காலத்தில் கொஞ்சம் ஸ்டைலாக இருப்பவர்களை சினிமாவில் நடி என்று நண்பர்கள் தூண்டிவிடுவதைப்போல. சிறு வயதிலேயே அழகான தோற்றம், கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்டிருந்த ராமசாமிக்கு நாடகத்தில் சேரத் தூண்டினார்கள் நண்பர்கள். தனது 7வது வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு பி.யூ.சின்னப்பா, காளி என்.ரத்தினம், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் பின்னர் மேனகா என்ற நாடகத்தில் ஹீரோயின் ஆனார். ஆம் ஸ்த்ரீபார்ட் எனப்படும் பெண் வேடமேற்றார். அதன் பிறகு நாடகத்தின் நாயகனாக உயர்ந்தார்.
ராமசாமியின் தனி ஸ்டைல்
சினிமாவில் ரஜினி தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியதைப்போல அந்தக் காலத்தில் நாடகத்தின் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டவர். எல்லோரும் நாற்காலியல் உட்கார்ந்து பேசம்போது இவர் மேஜையில் உட்கார்ந்து பேசுவார், சூவை கையால் கழற்றாமல் காலால் கழற்றுவார் இந்த மாதிரியான ஸ்டைல்கள். ராமசாமிபோல உடை அணிவது, ஹேர் ஸ்டைல் வைத்துக் கொள்ளவது அந்தக்கால இளைஞர்களின் வழக்கம். மனோகரா நாடகமாக நடந்து கொண்டிருந்தபோது இவர் மனோகரனாக நடித்தார் இவருக்கு ஜோடியாக சிவாஜி பெண் வேடத்தில் நடித்தார்.
சினிமாவுக்கு தாவிய ராமசாமி
ராமசாமி நாடகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் சினிமா வந்தது. சினிமாவின் பலம் நாடகத்தை விட பல மடங்கு இருப்பதை உணர்ந்த ராமசாமி நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார். டி.கே.எஸ்.சகோதரர்கள் நடத்தி வந்த குமாஸ்தாவின் மகள் நாடகம் 1941ம் ஆண்டு சினிமாவாக தயாரானபோது அதில் சிறிய வேடத்தில் நடித்தார். ஹீரோ வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிட்டவில்லை. இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பூம்பாவை படத்தில் ராமசாமியை 1944ம் ஆண்டு ஹீரோவாக நடிக்க வைத்தார்கள். அந்தப் படம் வெற்றி பெற்றதும் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது. தெய்வநீதி, கிருஷ்ணபக்தி, கங்கணம் ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது.
திராவிட இயக்கத்தின் மீது ஈர்ப்பு
சினிமாவில் நடித்தாலும் நாடகங்களை அவர் கைவிடவில்லை. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரில் கிருஷ்ணா நாடக சபா ஆரம்பித்து அதன் மூலம் நாடகங்களும் நடத்தினார். புராண நாடகங்களை தவிர்த்து சமூக நாடகங்களை நடத்தினார். சமூக நாடகங்கள் நடத்தியபோது அவருக்கு திராவிட இயக்கம் மீது ஈர்ப்பு வந்தது. பெரியார், அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். இவரது நாடகங்களுக்கு அண்ணா கதை வசனம் எழுதினார். அப்படி இவருக்காகவே எழுதிய நாடகம்தான் ஓரிரவு, வேலைக்காரி. இந்த நாடகங்கள் மகத்தான வெற்றி பெறவும் அதையே திரைப்படமாகவும் எடுத்து நடித்து வெற்றி பெற்றார். நாடகங்களின் மூலமும், திரைப்படங்கள் மூலமும் திராவிட இயக்க கருத்துக்களை பரப்பினார்.
அரசியல் மேடையேறிய முதல் நடிகர்
வேலைக்காரி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இனி புராண நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடிப்பதில்லை என்று அறிவித்தார். இவர் வழியை பின்பற்றித்தான் பின்னாளில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், எம்.ஜி.ஆரும் அறிவித்தார்கள். காஞ்சனா, சுகம் எங்கே, செல்லப்பிள்ளை, நீதிபதி, அமரன், ஆகியவை இவர் நடித்த புகழ்பெற்ற சமூக படங்கள். மொத்தம் 25 படங்களில்தான் நடித்திருந்தார். அரசியல் மேடையேறிய முதல் திரைப்பட நடிகரும் கே.ஆர்.ராமசாமிதான். தி.மு.க முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்று எதிர்கட்சியானபோது நடந்த மேலவை தேர்தலில் எம்.எல்.ஏ., ஆனவரும் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமிதான். அந்த வகையில் அரசு பதவி ஏற்ற முதல் நடிகரும் அவர்தான். தோழர் அண்ணாத்துரை என்று அழைக்கப்பட்ட அண்ணாவை அறிஞர் அண்ணா என்று அழைத்தவரும் இவர்தான். ஓரிரவு நாடத்தின் போஸ்டர்களில் கதை, உரையாடல் அறிஞர் அண்ணா என்று அச்சிட்டார். அன்று முதல் அறிஞர் அண்ணாவானார்.
அரசியலை விட்டு விலகல்
அண்ணா 1969ம் ஆண்டு மறைந்த பிறகு திராவிட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. அது பிடிக்காமல் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தவர் 1971ம் ஆண்டு மறைந்தார். அவரின் நூற்றாண்டு இது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சினிமா சரித்திரத்தில் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமிக்கு தனி இடம் உண்டு.