ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய மொழிகளில் தமிழ்,மலையாளம், தெலுங்கில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் தமிழக தொழில்நுட்பக் கலைஞர்கள் முத்திரை பதித்து வருகிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவாளர்களுக்கு அங்கு நல்ல வரவேற்பும் மரியாதையும் இருக்கின்றன. அப்படித் தமிழிலிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பஞ்சாபி வரை ஆறுமொழிகளில் ஒளிப்பதிவு செய்து உள்ளவர் ,தொடர்ந்து செய்தும் வருபவர் ஒளிப்பதிவாளர் ராஜரத்னம்.
இவரை மலையாள ஒளிப்பதிவாளரோ என்று நம்புகிற அளவுக்கு அங்கு சுமார் 20 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
அவருடன் ஒரு சந்திப்பு
உங்கள் முன்கதையைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?
எனக்குச் சொந்த ஊர் திண்டுக்கல். எனக்கு சிறுவயது முதலே கேமரா மீது காதல்உண்டு. வீட்டில் என் தொல்லை தாங்காமல் ஒரு சிறிய யாஷிகாகேமரா வாங்கிக் கொடுத் திருந்தார்கள். அவ்வப்போது பிலிம் ரோலுக்கு வேறு செலவு செய்ய பணம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருப்பேன்.திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் பி.எஸ்.ஸி படித்து முடித்ததும் இனி நமக்குச் சினிமாதான் என்றுமுடிவு செய்து விட்டேன். அப்பாவுக்கு தெரிந்தவர் மூலம் ஒளிப்பதிவாளர் ராஜராஜன் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்தேன்.
அவரிடம் பணியாற்றியது ஒரு திரைப்படக் கல்லூரியில் படிப்பது போல நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. அவரிடம் 13 உதவியாளர்கள் இருந்தார்கள். வேலைகளை விதவிதமாகப் பிரித்துக் கொடுத்துக் கற்றுக் கொடுப்பார்.
நான்பாடும் பாடல் சமயத்தில்தான் சேர்ந்தேன் அதன்பிறகு வைதேகி காத்திருந்தாள் ,மெல்லத் திறந்தது கதவு போல 83 படங்களில் இப்படிப் பணிபுரிந்தேன்.
83 படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்த அனுபவங்கள் எப்படி?
திரைப்படக் கல்லூரியில் எவ்வளவு படித்தாலும் கேமராவைத் தொட்டுப் பார்த்து இயக்குகிற வாய்ப்பு பெரிதாகக் கிடைக்காது. ராஜராஜன் அவர்களிடம் கேமராவை ஆபரேட் செய்கிற வாய்ப்பு கிடைத்தது. அது அந்த நேரத்து பரவச அனுபவம். ஒரு திரைப்படக் கல்லூரியில் படிப்பது போல நிறைய அனுபவப் பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்.
நீங்கள் முதலில் ஒளிப்பதிவு செய்தபடம் எது?
சின்னமேடம் தான் முதலில் நான் ஒளிப்பதிவு செய்தபடம், அதன்பிறகு ஆறு படங்கள் செய்தேன். கேமரா நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. பிலிம் மாறி டிஜிட்டலான சமயம் அதுவரை கற்றுக்கொண்டது நமக்குப் போதாது என்று தோன்றியது. எனக்கு மேலும் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
ரவி கே.. சந்திரனிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அப்போது என்னை நண்பர்கள் எல்லாரும் கிண்டல் செய்தார்கள். ஒளிப்பதிவாளராக இத்தனை படங்கள் வேலை பார்த்து விட்டு உதவியாளராகப் போய்விட்டாரே என்று கேலி பேசினார்கள். இருந்தாலும் எனக்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவரிடம் போனேன். ஆனால் அவரிடம் போனபிறகு என் வாழ்க்கையே தலைகீழாக மாறியது போலானது. புது அவதாரம் எடுத்த உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அவரிடம் போய் தமிழ், மலையாளம், இந்திப்படங்கள் விளம்பரப்படங்கள் என்று பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றிட வாய்ப்பு கிடைத்தது. என் அனுபவ அறிவு விசாலமானது அங்குதான். எனக்குள் பல ஜன்னல்கள் திறந்து வெளிச்சம் கிடைத்தது. பல ஒளிப்பதிவாளர்கள் நல்ல திறமை இருந்தும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை அப்டேட் செய்து கொள்ளாததால் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் சினிமாவில் நவீனவளர்ச்சியை தெரிந்து கொள்வது அவசியம். அதனால் அவரிடம் நான் நவீனவளர்ச்சியை,நுட்பத்தை எல்லாம் கற்றுக் கொண்டவை ஏராளம் என்று சொல்வேன். என் வாழ்க்கை அனுபவத்தையே ரவி கே. சந்திரனுக்கு முன் ரவி கே. சந்திரனுக்குப்பின் என்று பிரிக்கலாம். அந்த அளவுக்கு எனக்குள் மாற்றங்களை உணர்ந்தேன்.
பிறமொழிப்பட அனுபவங்கள் பற்றி?
ஒரு படம் வேலைபார்க்கும் போது கிடைக்கிற தொடர்புகள் நட்புகள் மூலம் அடுத்தடுத்த படங்கள் கிடைக்கும் .இப்படித்தான் நான் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி என்று ஆறு மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறேன். ரவி சாரிடமிருந்து வந்தபிறகு தமிழில் ஏபிசிடி ,எல்லாம் அவன் செயல் என்று தொடர்ந்து கடைசியாக கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,கங்காரு வரை பணியாற்றினேன் . இப்போது கே.எஸ்.ரவிகுமார், சுதீப் கூட்டணியில் கன்னடம் மற்றும் தமிழில் படம் செய்கிறேன்.
நான் பணியாற்றிய பஞ்சாபிப் படத்தின் பெயர் யாரோ ஓ தில்தூரா படத்தின் ஹீரோ பெயர் ஹர்பஜன் மான்,
ஐம் எ சிங் படத்தை இந்தியில் முடித்துள்ளேன் மலையாளத்தில் எடுத்துக்கொண்டால் மம்முட்டி நடித்த தாப்பானா ஜெயராமின் ஜிஞ்சர் சுரேஷ்கோபியுடன் டயம் சிந்தாமணி கொலைகேசு ,சவுண்ட் ஆப் பூட் போன்ற 5 படங்கள் திலீப்புடன் சக்கர முத்து ,வினயனின் அதிசயன் போன்ற படங்கள் பெயர் பெற்றுத் தந்தவை. அங்கு ஒரு மாதத்திற்குள் ஒரு படத்தை முடித்து விடுவார்கள். 18 நாட்களில் கூட ஒரு படம் எடுத்தோம். நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். தரத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
ஒளிப்பதிவாளர் அவசியம் பார்க்க வேண்டியது யதார்த்தமா? அழகுணர்ச்சியா?
ஒளிப்பதிவாளருக்குத் தேவை எது என்றால் ஒளியமைப்பு பிரமாண்டமாகக் காட்டுவது ,கேமரா கோணம், அசைவு போன்றவை முக்கியம். கமர்ஷியல் படம் என்றால் கதாநாயகன் , நாயகிகளை அழகாகக் காட்டவேண்டும். கதாநாயகனை தப்பாகக் காட்ட முடியாது. அப்போதுதான் அந்த ஹீரோ நம்மை பிற படங்களுக்கு சிபாரிசு செய்வார். சில கதைகளுக்கு யதார்த்தம் தேவைப்படும் ஆனால் கதையை, நடிப்பவர்களைப் பொறுத்து இவை முடிவாகும்.
இப்போது எல்லாரும் இலகுவாகக் கையாளும் கேமராக்கள் வந்துவிட்டன. தொழில்நுட்பம் சுலபமாக ஒளிப்பதிவாளர்களை உருவாக்கி விடுகிறதே?
எவ்வளவு கேமராக்கள் வந்தாலும் அது தானே இயங்காது. அதை இயக்க ஆள் தேவை.அவர் வெறும் ஆபரேட்டராக இருந்தால் போதாது. கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் அவருக்குத் தேவை.கோணம், வண்ணம், ஒளிபற்றிய புரிதலும் தேவை.அனுபவமும் இருக்க வேண்டும். கேமரா ஒரு மெஷின்தான் அதை பயன்படுத்த கையாள ஒரு மனிதன் தேவை. நீங்கள் சொல்வது போல இருந்தால் நிறைய ஒளிப்பதிவாளர்கள் வந்திருப்பார்கள்.
டிஜிட்டல் வந்த பிறகு செலவு குறைந்து விட்டது எனக் கூறலாமா?
டிஜிட்டல் வந்த பிறகு பெரிதாகக் குறைந்து விட்டது என்று கூறமுடியாது. பிலிம் செலவு என்பது அதிகமானதுதான் .ஆனால் இப்போது டிஜிட்டல் வந்த பிறகு அலட்சியம் வந்து விட்டது. பிலிம் ஒன்றிரண்டு டேக் எடுப்பதை இப்போது டிஜிட்டலில் 20 டேக் எடுக்கிறார்கள். பிலிம் ஆயிரம் அடி 20 ஆயிரம் ரூபாய். டிஜிட்டலில் எடுத்தால் ஹார்டு டிஸ்கே 20 ஆயிரம் ரூபாய் ஆகிவிடும் கேமரா வாடகையும் அதிகம் பிலிம் கேமரா வாடகை 10 ஆயிரம் தான் ஆகும் டிஜிட்டல் கேமரா வாடகை நாளொன்றுக்கு 55 ஆயிரமாகிறது. .. டிஐ மாற்ற 2000 தனி செலவு ஆகும் .இப்படி டிஜிட்டலில் நிறைய செலவுண்டு.
நட்சத்திரங்களில் யாருடன் நெருக்கம் அதிகம்?
பலதரப்பட்ட நட்சத்திரங்களுடனும் பணியாற்றி இருக்கிறேன். மம்முட்டியின் தாப்பானா படத்தில் பணிபுரிந்த போது அவர் முகத்தை சி.ஜியில் டச் செய்துமேலும் பொலிவாக்கி இருந்தேன். இருப்பதை விட மிகவும் இளமையாகத் தெரிந்தார். அதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். முழுப்படமும் அப்படியே செய்யச் சொன்னார் பிறகு எடுக்கும் படங்களிலும் மம்முட்டி அப்படியே செய்யக் கூறி வருகிறார். அவர் ஒரு மெகா ஸ்டார் என்தை மறந்து எளிமையாகப் பழகுவார் இனிமையான மனிதர்..
இந்தத் துறையில் பெருமையாகக் கருதுவது எது?
நான் எப்போதும் புதிதாகக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பவன். அன்றாடம் கற்றுக் கொண்டே இருந்தால்தான் இதில் தாக்குப் பிடிக்க முடியும். எல்லா புதிய நவீன கேமரா பற்றியும் அதைக் கையாள்வது பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். நான் ஒளிப்பதிவாளராக ஆகிவிட்டாலும் புதுப்புது அனுபவங்களைத் தேடிப் பல ஒளிப்பதிவாளர்களிடம் உதவியாளராகவும் செகண்ட் யூனிட் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளேன். இனியும் பணிபுரியத் தயங்க மாட்டேன். நான் என்றும் கற்றுக் கொள்வதில் வெட்கப் படமாட்டேன். அதனால்தான் ரவி கே. சந்திரன், ரவிவர்மன் போன்றவர்களிடம் பணிபுரிந்திடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களும் எனக்கு வாய்ப்புகளை பரிந்துரை செய்கிறார்கள்.
இந்திய அளவில் அமிதாப், மம்முட்டி, கமல்,விக்ரம் ,மணிரத்னம் ,ஷங்கர் வரை பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. நான் உலகம் முழுக்க சுற்றியிருக்கிறேன். தசாவதாரத்தில் செகண்ட் யூனிட் கேமரா மேனாக பணிபுரிந்தேன். மலையாள இயக்குநர்களில் ஷாஜி கைலாஷ் தொழில்நுட்ப ரீதியில் பலமானவர் நிறைய சொல்லிக் கொடுப்பார்.அவரிடம் மட்டுமே 8 படங்கள் பணியாற்றி இருக்கிறேன்.கற்றுக்கொண்டும் இருக்கிறேன்.
சுதீப் பழக்கமாகி விஷ்ணுவர்தனா என்கிற கன்னடப்பட வாய்ப்பு வந்தது. அதன் மூலம் இப்போது கே.எஸ்.விரகுமாரின் கன்னடப் படத்திலும் நான் பணிபுரிகிறேன் என்று ஒளிப்பதிவாளர் ராஜரத்னம் கூறினார்.