'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிறுவயதில் பாடகர்; இளம் வயதில் கீ போர்டு பிளேயர்; தற்போது, இசையமைப்பாளர் என, பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது, சத்யாவின் இசைக் காதல்.'எங்கேயும் எப்போதும்' படம் வெளிவந்த சமயம்... ரசிகர்களை 'சொட்டச் சொட்ட' நனைய வைத்தது, இவரின் இசை மழை! 'நெடுஞ்சாலை' படத்தில், 'இஞ்சாதே இஞ்சாதே...' என, ரசிகர்களின் மனதை கொஞ்சியது! 'இவன் வேற மாதிரி' படத்தில், 'என்னை மறந்தேன்...' என, மயக்கியது! தற்போது, 'காஞ்சனா 2' படத்தில், இவர் இசையமைத்த ஒரே பாடலான 'சில்லாட்டா பில்லாட்டா...' பாடல், செம ஹிட். குஷியான மூடில் இருக்கிறார் சத்யா. அவரை சந்தித்த போது...
முதல் பட வாய்ப்பு?
அது, 2007ம் ஆண்டுன்னு நான் நினைக்கிறேன். ஒரு துணிக்கடை விளம்பரத்துக்கு நான் பண்ணின பின்னணி இசையைக் கேட்ட, 'சில்லுன்னு ஒரு காதல்' இயக்குனர் கிருஷ்ணா, என்னை போன்ல கூப்பிட்டு பாராட்டினார். தொடர்ந்து அவரோட, 'ஏன் இப்படி மயக்கினாய்?' படத்துல வாய்ப்பும் கொடுத்தார்! அந்த படம் வெளியே வரலைன்னாலும், படத்தோட பாடல்களை அவங்க ரிலீஸ் பண்ணினாங்க! 'எங்கேயும் எப்போதும்' படத்துக்கு, நான் இசையமைப்பாளராக அதுதான் மிக முக்கிய காரணம்!
இயக்குனர் சரவணன் உடனான அனுபவம்...?
ஏ.ஆர்.முருகதாஸ் சாரோட சேர்ந்து, 'பாக்ஸ்' தயாரிப்புல முதன்முதலா வெளிவந்த படம், 'எங்கேயும் எப்போதும்.' அப்போ, நான் இயக்குனர் சரவணனை சந்திச்சு, இரண்டு டியூன் கொடுத்து கேட்கச் சொன்னேன். அதுல ஒண்ணு, 'சொட்டச் சொட்ட நனைய வைத்தாய்' பாட்டோட டியூன்! அப்போ எத்தனையோ இசையமைப்பாளர்கள் போட்டியில இருந்தாலும், சரவணன் தேர்ந்தெடுத்தது, என் இசையை!
'காஞ்சனா 2'வின், 'சில்லாட்டா பில்லாட்டா' பாடல் பற்றி...?
லாரன்ஸ் சாரையும், என்னையும் இணைச்சது, ரெண்டு பேருக்கும் விருப்பமான ஆன்மிகம்! 'காஞ்சனா 2' படத்துக்கு ஒரு குத்துப்பாடல் தேவைப்பட்டப்போ, சார் என்கிட்டே பேசினார். அதுக்கு முன்னாடி, சில குத்துப் பாடல்கள் நான் பண்ணியிருந்தாலும், நான் பண்ணின, 'அக்மார்க்' குத்துப்பாடல் 'சில்லாட்டா பில்லாட்டா...' தான்! அதுமட்டுமில்லாம, ஒரே பாடல் வரிகளுக்கு, இரண்டு விதமா டியூன் போட்டு பண்ணின முதல் பாட்டும் இதுதான்!
ஒரு படத்தோட பின்னணி இசை, பாடல் - எதை உருவாக்குவது கடினம்?
பாடல்களுக்கு இசை அமைக்கிறதுல, ஒரு சுதந்திரம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு, நம்ம கற்பனைத்திறனுக்கு ஏத்தமாதிரி டியூன் போடலாம். நான் இசையமைச்ச பாடல்கள், பெரும்பாலும் 'மெலடி' ரகம் தான்! காரணம், 'மெலடி பாடல்கள், காலம் தாண்டி நிற்கும்'ங்கறது என் நம்பிக்கை! பின்னணி இசையைப் பொறுத்தவரை, மத்தவங்களோட கற்பனைவளத்துக்கு, நாம இசை அமைக்கணும்! 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்துல, வசனங்கள் தான், முக்கால்வாசி இருக்கும்! கிடைச்ச இடைவெளியில, பின்னணி இசையமைச்சது பெரிய சவாலா இருந்தது!
நீங்கள் அதிகம் பயன்படுத்தாத இசைக்கருவி?
எனக்கு, 'சாரங்கி' இசைக்கருவி மேல எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு! மனித உணர்வுகளை துல்லியமா பிரதிபலிக்கிற ஒரு இசைக்கருவின்னா, அது 'சாரங்கி' தான்! 'நெடுஞ்சாலை' படத்தோட, 'இஞ்சாதே...' பாட்டுல, அதை பயன்படுத்தியிருப்பேன். அப்புறம், 'இவன் வேற மாதிரி' படத்துல, 'க்ளைமாக்ஸ்' காட்சியிலேயும் அதை பயன்படுத்தியிருப்பேன். ஆனாலும், 'சாரங்கியை இன்னும் முழுமையா பயன்படுத்தலை'ங்கற எண்ணம் எனக்குள்ள இருக்கு!
அடுத்தது என்ன ?
'அசுர குலம், மானே தேனே பேயே, கிட்ணா' படங்களுக்கு இசையமைச்சிட்டு இருக்கிறேன். அப்புறம், பெண்களோட பாதுகாப்பு உட்பட சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துற மாதிரி, ஒரு இசை ஆல்பத்தை கூடிய சீக்கிரம் வெளியிடப் போறேன்.