Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அதிகரிக்கும் அறிமுகங்கள்... ஸ்பெஷல் ஸ்டோரி!

25 மே, 2015 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Increasing-newfaces-in-Tamil-Cinema

எந்த ஒரு துறையிலும் அறிமுகங்கள் அவ்வப்போது இருந்து கொண்டேதான் இருக்கும். அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் பட்சத்தில் கூடிய சீக்கிரத்திலேயே உயர்வான நிலையை அடைவார்கள். இல்லையென்றால் அவர்கள் பல தடுமாற்றங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு துறையிலும் தினமும் பல புதியவர்கள் நுழைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


அதிலும் திரைத் துறையில் கேட்க வேண்டாம், கடந்த சில வருடங்களாக அறிமுகங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது. மற்ற துறைகளிலாவது தங்களது திறமையை நிரூபிக்க கொஞ்சம் கால அவகாசம் கிடைக்கும். ஆனால், சினிமாவில் அப்படியில்லை, அறிமுகமாகும் கலைஞர்களின் முதல் படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள். இல்லையென்றால் அடுத்த வெற்றி கிடைக்கும் வரை அவர்கள் உழைத்துக் கொண்டுதானிருக்க வேண்டும். அந்த வெற்றியும் எப்போது கிடைக்கும் என்று சரிவரத் தெரியாது. என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்று விடுவோம் என்று இன்றும் தங்களது முயற்சிகளை கைவிடாத பலர் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள்.


முதலீடு


மற்ற தொழிலுக்கும் சினிமா தொழிலுக்கும் உள்ள வித்தியாசமே இங்கு போடப்படும் முதலீடுதான். ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தால் அங்கு செய்த வேலைக்கு சம்பளத்தைக் கொடுத்து விடுவார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று நமது திறமையை வைத்து அதை ஓரளவிற்குக் கணித்து விடலாம். ஆனால், சினிமாவில் அப்படியில்லை, என்னதான் திறமை இருந்தாலும் ஒரு படத்தின் வெற்றிதான் அவருடைய நிலையைக் கணிக்கும் விஷயமாக இருக்கிறது.


புற்றீசல் போல் புதுவரவு


கடந்த சில வருடங்களில் அறிமுகமான புதுமுகங்களைப் பற்றிப் பார்த்தால் துல்லியமாக கணக்கு எடுக்க முடியாத அளவிற்கு புற்றீசல் போன்ற வரவாகத்தான் இருந்து வருகிறது. சில படங்கள் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை. அந்தப் படங்களைப் பற்றிய எந்தத் தகவலையும் கூட அவர்கள் அளிப்பதில்லை. ஒரு படத்திற்கு பத்திரிகை தொடர்பாளர் என்ற ஒருவர் இருக்கிறார், அவர் மூலமாகப் படம் பற்றிய செய்திகளை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். ஏதோ ஒரு நாளில் பத்திரிகை விளம்பரம் ஒன்றைக் கொடுத்து விட்டு அத்துடன் விட்டு விடுகிறார்கள். அந்தப் படங்கள் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட தியேட்டரிலோ அல்லது தியேட்டர்களிலோ வெளியானதா, அதை எத்தனை பேர் வந்து பார்த்தார்கள், எவ்வளவு வசூலித்தது என்றெல்லாம் பார்த்தால் படப்பிடிப்பிற்காக அவர்கள் செய்த டீ செலவாவது மிஞ்சுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.


அவ்வளவு ஏன் ஒரு மிகப் பெரிய நடிகர் நடித்த படம் சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது, அந்தப் படத்திற்கு சில காட்சிகளுக்கு ரசிகர்களே வரவில்லை என அந்தக் காட்சிகளையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. ஒரு முன்னணியில் உள்ள அனுபவம் வாய்ந்த நடிகரின் படத்திற்கே அதுதான் கதி என்றால் ஒரு அறிமுக நடிகரின் படத்திற்கு எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.


அனுபவம் இல்லாத தயாரிப்பாளர்கள்


எந்தத் தொழிலில் இறங்கினாலும் அதைப் பற்றி தெரிந்து கொண்டு, அதில் வரும் லாபம், நஷ்டம் எவ்வளவு என்று கணக்குப் பார்த்துத்தான் இறங்குவார்கள். ஆனால், சினிமாத் தொழிலில் மட்டும் அது பற்றிய அனுபவம் சிறிதும் இல்லாதவர்கள் தயாரிப்பாளர்களாக வந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதற்காகத் தயாரிப்பாளர்கள் சங்கம் அவர்களுக்கென ஏதாவது வழி வகைகளையோ, ஆலோசனைகளையோ சொன்னால் நன்றாக இருக்கும் என கோரிக்கை பல காலமாக இருந்து வருகிறது. அதை தயாரிப்பாளர்கள் சங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


தயாரிப்பை விட்டு விலகிய அனுபவ தயாரிப்பாளர்கள்


இன்றைக்கு அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் படத்தைத் தயாரிக்க முன் வருவதே இல்லை. அவர்களில் பலர் முற்றிலுமாக படத் தயாரிப்பை விட்டே விலகி விட்டார்கள். சிலரோ ஐந்தாண்டுகளுக்கு ஒரு படம் என்ற ரீதியில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 90 சதவீதத் தயாரிப்பாளர்கள் அறிமுகத் தயாரிப்பாளர்களாகவே இருக்கிறார்கள். அவர்களிடமும் சிலர் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களே அந்த ஒரு படத்துடன் ஓட வைத்து விடுகிறார்கள்.


தப்பு கணக்கு போடும் தயாரிப்பாளர்கள்


இத்தனை லட்சத்திற்குள் படத்தை முடித்து விடலாம், படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் இத்தனை கோடி போகும், நீங்கள் இவ்வளவு லட்சம் போட்டால் போதும், அவ்வளவு லாபம் வரும் என தவறான கணக்கைக் கொடுத்து புதிதாகப் படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களையும் ஒரு சிலர் சிக்க வைத்து விடுகிறார்கள். இன்றைய தேதியில் முன்னணி நடிகர்களின் படங்களும் வெற்றி பெற்றால் மட்டுமே சாட்டிலைட் ரைட்ஸ் என்பது குறிப்பிட்ட சேனல்களால் வாங்கப்படுகிறது. அறிமுக நடிகர்களின் படங்களை வாங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை.


இன்றைக்கு புதிதாக படம் எடுக்க வருபவர்களும் தாங்கள் நினைப்பதை படமாக எடுத்தால் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்ற தவறான கண்ணோட்டத்திலும் படமெடுக்க வருகிறார்கள். ஒரு பேய் படம் வந்து ஹிட் ஆனால், நாமும் அப்படியே ஒரு படத்தை எடுப்போம் என இவர்களும் அதையே பின்பற்றி படத்தை எடுக்கிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் இப்படி வந்த பேய்ப் படங்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டுவிடும்.


அதையும் மீறி கதைகளில் இருக்கும் கற்பனை வறட்சி தெளிவாகத் தெரிகிறது. நாடகம் போல ஒரே இடத்தில் படமாக்குவதையும் சிலர் செய்திருக்கிறார்கள். சினிமா என்பது காட்சி ஊடகம், அதில் பல்வேறு விதமான காட்சிகள், கண்ணைக் கவரும் விஷயங்கள் இப்படி இருக்கும் என்று எதிர்பார்த்துதான் ஒரு ரசிகன் படம் பார்க்க வருகிறான். ஆனால், அவனை ஒரு நாடகம் பார்ப்பதைப் போன்று ஒரே ஒரு வீட்டிலோ, ஒரு அலுவலகத்திலோ, ஒரு போலீஸ் நிலையத்திலோ மட்டும் கதையை நகர்த்தி அவனைக் கட்டிப் போட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள்.


ஒரு சில படங்களைப் பார்க்கும் போது இதெல்லாம் சினிமாவா என்ற கேள்வியை எழ வைத்துவிடுகிறது. எந்த தைரியத்தில் இப்படிப்பட்ட படங்களை எடுக்கிறார்கள் என்று யோசிக்க வைக்கிறது. டிஜிட்டல் யுகம் வந்த பிறகு சினிமா எடுப்பது ஓரளவிற்கு செலவு கட்டுக்குள் வந்திருப்பது நிஜம்தான், அதற்காக இப்படி எடுக்கலாமா ?. அவர்களிடம் பழைய முறையில் ஃபிலிம் கொடுத்து படத்தை எடுக்கச் சொன்னால் எடுக்க முடியுமா.?


இங்கு அனைவருக்கும் எதையும் செய்ய உரிமை உள்ளது. இருந்தாலும் ஒரு படைப்பை நாம் மட்டுமே ரசிக்க வைக்கும் விதத்தில் எடுப்பதென்பது வேறு, மற்றவர்களையும் ரசிக்க வைக்கும் விதத்தில் எடுப்பதென்பது வேறு. ஒரு டிஜிட்டல் காமிராவும், நான்கு நடிகர்களும், ஒரு இடமும், சில லட்சம் பணமும் கிடைக்கிறது என்பதற்காக ஒரு சினிமாவை எடுத்து விடலாம் என சிலர் நினைப்பது மிகவும் தவறு.


சினிமாவை சுவாசமாக நினைப்பவர்களுக்கு ரசனையாக கொடுங்கள்


இங்கு சினிமாவை தங்களது சுவாசமாக நினைத்துக் கொண்டிருக்கும் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ரசிகர்களும் அடங்குவர். எந்தப் படம் வந்தாலும் போய் பார்க்கும் பழக்கம் கொண்ட பலர் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்காக குறைந்த பட்சம் ஓரளவிற்காவது ரசனையான படத்தைக் கொடுக்க நினைக்க வேண்டும் என புதியவர்கள் நினைக்க வேண்டும்.


ஒரு முறை தோற்றால் அடுத்த முறை வெற்றி பெற்று விடலாம் என்று நினைப்பதற்கு சினிமா ஒன்றும் தேர்வல்ல. ஒரே ஒரு வெற்றி இங்கு எப்படி வாழ்க்கையை மாற்றுகிறதோ, அதே போல ஒரே ஒரு தோல்வியும் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in