ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சமீபத்திய செய்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அட்டகத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதுதான். இது வழக்கம்போல வரும் யூகச் செய்தி அல்ல. பா.ரஞ்சித் இரண்டு முறை ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் ரஜியின் மகள் சவுந்தர்யா. இதை ரஞ்சித்தும் மறைமுகமாக உறுதிப்படுத்தியிருக்கிறார். ரஜினியோ, சவுந்தர்யாவோ மறுக்கவில்லை. இது உறுதியான செய்திதான் ஆனால், இது ஏதோ திடீரென நடந்த விஷயமாகத் தோன்றலாம். ஆனால் ரஜியின் மனதில் கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்த மனவோட்டத்தின் வெளிப்பாடுதான் இது.
இந்த இடத்தில் ரஜினியின் குணாதிசயத்தை பற்றி தெளிவுபடுத்திக் கொள்வோம். எத்தனை பெரிய வெற்றி வந்தாலும் அதை தன் தோளில் தூக்கி போட்டுக்கொண்டு ஆட மாட்டார் ரஜினி. வெற்றியை மிக எளிதாக கடந்து அடுத்த கட்டத்துக்கு சென்று விடுவார். ஆனால் தோல்வி அவரை நிறைய பாதிக்கும். தோல்வியால் மனம் உடைந்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார் என்பதல்ல அதன் பொருள். அந்த தோல்விக்கான காரணத்தை அறிந்து கொள்ளாதவரை அவருக்கு தூக்கம் வராது. அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதை நிவர்த்தி செய்ய பார்ப்பார். இது அவரது இயல்பான குணம்.
பாபா தந்த தோல்வி
படையப்பா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது பாபா. அந்த தோல்வியிலிருந்து ரஜினி மீண்டு வெளிவர மூன்று ஆண்டுகள் ஆனது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு திடீரென முடிவெடுத்து செய்த படம் சந்திரமுகி. இரண்டு படத்துக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் ரஜினியின் இன்றை முடிவு பெரிய விஷயமாகத் தெரியாது. பாபா படம் ஆன்மீகமா, அரசியலா என ரஜினி முடிவெடுக்க வேண்டும் என்று தூண்டிய பக்கா ஹீரோயிச படம். ரஜினியை விட்டால் தமிழ் நாட்டுக்கு வேறு தலைவன் இல்லை என்கிற ரேன்ஞ்சில் எடுக்கப்பட்ட படம். ஆனால் படம் பெரும் தோல்வி.
சந்திரமுகி கொடுத்த மாஸ் ஹிட்
அடுத்து அவர் நடித்த சந்திரமுகி ஹீரோயிச படம் அல்ல. அது ஹீரோயின் சப்ஜெக்ட். அதில் ஆதிக்கம் செலுத்தியது ஜோதிகாதான். அதில் வரும் ஒரு சைக்காட்டிஸ்ட் டாக்டர் கேரக்டர்தான் ரஜினி செய்தது. ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் செய்திருக்க வேண்டிய கேரக்டரை ரஜினிக்காக கொஞ்சம் விரிவுபடுத்தியிருந்தார்கள். படம் செம ஹீட். ரஜினியின் படங்ளிலேயே அதிக நாள் ஓடி அதிக லாபத்தையும் சம்பாதித்த படம். சந்திரமுகி அறிவிக்கப்பட்டபோது இப்போதைய ஆச்சர்யம்தான் அப்போதும் இருந்தது. காலத்தை உணர்ந்து ரஜினி எடுத்த முடிவு அது.
அதன் பிறகு ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றாலும், சிவாஜி படம் பெரிய வசூலை ஈட்டவில்லை என்பது கசப்பான உண்மை. போட்ட பணம் திரும்பி வரவில்லை என்று விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்தை நோக்கி திரும்பினார்கள். இடையில் வந்த குசேலன் படம் மீடியாக்களை கவர்ந்த அளவிற்கு ரசிர்களை கவராமல் போக அதுவும் தோல்விப்படமா அமைந்தது.
லிங்கா பிரச்னை
ரஜினிகாந்த் தனக்கு பிடிக்காமலேயே ஒரு படத்தில் நடித்தார் என்றால் அது கோச்சடையான்தான். தன்னை அனிமேஷன் உருவமாக ரசிகன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இருந்தாலும் மகள் சவுந்தர்யாவின் அதீத ஈடுபாடு, பெரும் பொருள் முதலீடு என்பதால் நடித்துக் கொடுத்தார். அவர் நினைத்ததுதான் நடந்தது. அதனால்தான் ரசிகனின் ஏமாற்ற ஈரம் காய்வதற்குள் ஒரு நேரடி படத்தை கொடுத்துவிட வேண்டும் என்று லிங்காவை கையில் எடுத்தார். அவரது அவசரம் அபாயகரமாக போனது. லிங்காவின் பட்ஜெட்டையும், படத்தின் வசூலையும் கணக்கிட்டால் அது லாபம் ஈட்டிய படம்தான். ஆனாலும் படத்தின் வியாபார கோளாறுகளால் அது தோல்விப் படத்தின் பட்டியலில் சேர்ந்தது.
காலத்தின் மாற்றம்
இவற்றை பல மாதங்களாக மனதுக்குள் போட்டு சீர்தூக்கிப் பார்த்துதான். இனி தனது பழைய பாணி படங்கள் வேண்டாம். இன்றைய இளைஞனுக்காக மாறுவோம். இன்றைய புது சிந்தனைக்குள் தன்னை புகுத்திக் கொள்வோம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் ரஜினி. அதற்கு அவருக்கு இருக்கும் ஒரே ரோல் மாடல் அமிதாப்பச்சன். வயோதிகராக நடிக்கிறார், மூளை வளர்ச்சி அடையாதவாராக நடிக்கிறார். சொந்த மகளையே வெறுப்பவராக நடிக்கிறார். ஆனால் அவரது சூப்பர் ஸ்டார் கீரீடத்தை யாராலும் தட்டிப்பறிக்க முடியவில்லை. அதுதான் ரஜினியின் உந்து சக்தி. எனவே ரஜினியின் இந்த மாற்றம் காலத்தின் கட்டாயம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
இனி ரஜினியின் புதிய அவதாரம்
இனி ஒரு ஓப்பனிங் சாங், ரீலுக்கு ரீல் பன்ஞ் டயலாக், ஸ்டைல் நடை, நாலு டூயட், கிளைமாக்ஸ் பைட் என்று பழைய பல்லவியை பாடினால் ரசிகர்கள் டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும், மீம்க்கள் செய்து காய்ச்சி எடுத்துவிடுவார்கள் என்பதை ரஜினி நன்றாக உணர்ந்திருக்கிறார். அதனால் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள அவர் தயாராகிவிட்டார்.
ரஜினியின் இந்த மாற்றம் இப்போதுதான் நடக்கிறது என்பதில்லை. நல்ல ஆக்ஷன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோதுதான் ஆறிலிருந்து அறுபது வரை நடித்தார். இன்னொருவருடன் ஓடிப்போகும் பெண்ணின் கணவனாக எங்கேயே கேட்ட குரலில் நடித்தார். ஆன்மீக மகான் ஸ்ரீராகவேந்திரராக நடித்தார். இப்படி ரஜினி தன்னை மாற்றிய போதெல்லாம் சினிமா வியாபாரம் மீண்டும், மீண்டும் அவரை பன்ஞ் டயலாக்கிற்கும் தனி ஸ்டைலுக்கும் இழுத்து வந்தது. ஆனால் இந்த முறை அதற்கான சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ரஜினி தனது அடுத்த அவதாரத்திற்கு தயாராகிவிட்டார்.