டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமா என்பது ஒரு இயக்குனரின் கட்டுப்பாட்டில்தான் உருவாகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் அந்த இயக்குனர்தான் முழு பொறுப்பு. நடிப்பவர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் எல்லாருமே இயக்குனரின் கற்பனையைத்தான் நிழல் வடிவமாகக் கொண்டு வருகிறார்கள்.
நல்ல நடிகர்கள் கிடைத்து தோல்விப் படங்களைக் கொடுத்த இயக்குனர்களும் இருக்கிறார்கள். சாதாரண நடிகர்கள் கிடைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
இங்கு கதையும், அதைச் சொல்லும் விதமும் வித்தியாசப்பட்டு இருக்கும் போது அந்தப் படத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் பார்ப்பதில்லை. அந்தப் படம் அவர்களுக்குப் பிடித்துப் போய்விட்டால் அதை கொண்டாடி மகிழ்ந்து வெற்றிப் படமாக்கிவிடுகிறார்கள். அப்போது ஒரு இயக்குனர் வெற்றிகரமாக உருவாகி விடுகிறார்.
அதன்பின், அந்த இயக்குனரிடமிருந்து அடுத்தடுத்து ரசிக்கும்படியான படங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ தங்களது முதல் படங்களிலேயே வெற்றி பெற்றவர்கள், மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் தொடர்ந்து படங்களைத் தர முடியாமல் இருக்கிறார்கள். அப்படி தங்களது முதல் படங்களில் அதிகம் பேசப்பட்ட இயக்குனர்கள் இன்னும் அவர்களின் இரண்டாவது படத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.
சி.எஸ்.அமுதன்
தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்படங்களையே கிண்டலடித்து ஒரு படம் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற வரலாற்றை உருவாக்கியவர் இவர். படத்திற்கும் 'தமிழ்ப் படம்' என்று பெயரிட்டு ஒருவரைக் கூட விடாமல் ஜாலியாக, கிண்டலடித்து, நக்கலடித்து 'ஸ்பூஃப்' வகையிலான படத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். 'தமிழ்ப் படம்' மாபெரும் வெற்றி பெற்று அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின் 'இரண்டாவது படம்' என தன்னுடைய இரண்டாவது படத்திற்குப் பெயர் வைத்து 2011ல் ஆரம்பித்தார். படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் வெளிவராமலே இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
தியாகராஜன் குமாரராஜா
தமிழ்த் திரையுலகத்தில் பலரையும் அதிசயிக்க வைத்த 'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கியவர். இப்படியும் ஒரு படத்தை நம்மவர்களால் இயக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர். அந்த ஆண்டிற்கான சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதையும், சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருதையும் அவர் இயக்கிய 'ஆரண்ய காண்டம்' படம் பெற்றுத் தந்தது. படத்தைப் பார்த்த அனைவருமே மிகவும் வித்தியாசமான, உண்மையிலேயே ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக்கமாக இந்தப் படம் இருந்தது என்று பாராட்டினர். தயாரிப்பாளர் எஸ்.பி.சரணுக்கும், தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் இந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி கூட போடப்படவில்லை.
ஒரு சிறந்த இயக்குனரை அந்தப் படத்தின் தயாரிப்பாளரே வெளிக் கொணராமல் விட்டுவிட்டார் என்றுதான் திரையுலகத்தில் உள்ள பல உதவி இயக்குனர்களும் வருத்தப்பட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'என்னை அறிந்தால்' படத்தின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார். இவர் இயக்கத்தில் வெளிவரும் அடுத்த படத்தைத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
சாந்தகுமார்
தமிழில் சாந்தகுமார் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்த 'மௌன குரு' படத்தைத்தான் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 'அகிரா' என்ற பெயரில் சோனாக்ஷி சின்ஹா நடிக்க ரீமேக் செய்து வருகிறார். வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை, கதாபாத்திரங்கள் என 'மௌன குரு' படம் வெளிவந்த போது விமர்சகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் படம் அதன் பின் கன்னடத்திலும், தெலுங்கிலும் கூட ரீமேக் செய்யப்பட்டது.
ஆனால், ஏனோ சாந்தகுமார் இன்னும் அவருடைய இரண்டாவது படத்தைப் பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிடாமலே இருக்கிறார். இப்போது இவரது கதை ஹிந்தியில் ரீமேக் ஆகிறது என்பது மீண்டும் 'மௌனகுரு' படத்தைப் பற்றிப் பேச வைத்துள்ளது. விரைவில் இவரிடமிருந்து இரண்டாவது படம் பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாமா ?
மணிகண்டன்
முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்து வெளிவந்த 'கண்ணா லட்டு திண்ண ஆசையா' படத்தை இயக்கியவர் மணிகண்டன். 2013ம் ஆண்டில் வெளிவந்த அதிக வசூலை அள்ளிய படங்களில் இந்தப் படமும் ஒன்று. சந்தானம், பவர்ஸ்டார், புதுமுகம் சேது இவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இயக்குனர் மணிகண்டன் கொடுத்த வெற்றி சாதாரணமானது அல்ல. படத்தை வாங்கிய அனைவருக்குமே லாபத்தைக் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட கமர்ஷியல் வெற்றி இயக்குனர்களைத்தான் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மணிகண்டன் இன்னும் தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்காமலேயே இருக்கிறார்.
நவீன்
'மூடர் கூடம்' படம் வெளிவந்த போது அதில் தெரிந்த முகமாக இருந்தது படத்தின் நாயகியாக நடித்த ஓவியா மட்டுமே. இந்தப் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் வாங்கி வெளியிடுகிறார் என்றதும்தான் இந்தப் படம் மீது மற்றவர்களின் வெளிச்சம் பட்டது. நான்கு பேர், ஒரு வீடு, ஒரு குடும்பம் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்திருந்தார் இயக்குனர் நவீன். மீடியாக்களிடம் மட்டுமல்லாது திரையுலகத்தினரிடமும் இந்தப் படம் நிறையவே பாராட்டைப் பெற்றது. கதை சொல்லல் என்பதில் இயக்குனர் நவீன் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டிருந்தார். அதுவே இந்தப் படத்திற்கான பிளஸ் பாயிண்டாக அமைந்தது நவீனிடமிருந்து இந்தத் திரையுலகம் இன்னும் நிறைய படங்களை எதிர்பார்க்கிறது, ஆனாலும், அவருடைய இரண்டாவது படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை.
ராகவன்
தமிழ் சினிமாவில் இந்தக் காலத்தில் குடும்பக் கதைகளை எடுத்தால் யார் பார்க்க வருவார்கள் என்ற எண்ணத்தை முற்றிலும் உடைத்த 'மஞ்சப் பை' படத்தை இயக்கியவர் ராகவன். ஒரு தாத்தாவிற்கும், பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாக வைத்து தமிழில் ஒரு முழு படம் வந்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு படத்தை நெகிழ்ச்சியான காட்சிகள், வசனங்களுடன் வைத்து தயாரிப்பாளரின் மனதை மட்டும் நிறைக்காமல், அவருடைய பணப்பையையும் நிறைத்த படத்தைக் கொடுத்தவர். இந்தப் படம் வெளிவந்து ஏறக்குறைய ஒரு வருடம்தான் ஆகப் போகிறது என்றாலும் வெற்றி பெற்ற இயக்குனர்களை நம் தயாரிப்பாளர்கள் உடனே அவர்களது புதிய படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து தக்க வைத்து விடுவார்கள். ஆனால், ராகவன் விஷயத்தில் அப்படி எதுவும் நடந்ததா என்று தெரியவில்லை. நல்ல படத்தைக் கொடுத்தவரின் மனதை யாராவது அடுத்த படத்தைக் கொடுத்து நிறைத்திருக்க வேண்டாமா ?.
முதல் படத்தில் கிடைத்த வெற்றி கடுமையான போராட்டங்களுக்குப் பின், உண்மையான உழைப்புக்குப் பின் கிடைத்த ஒரு வெற்றியாகும். அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவே எந்த ஒரு இயக்குனரும் போராடுவார்கள். அவர்களின் திறமையை அவர்களது இரண்டாவது படம்தான் முழுமையாக நிரூபிக்க வைக்கும்.
அப்படி அவர்களது திறமையை அவர்கள் இந்த உலகிற்கு வெளிக்காட்ட வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். முதல் படத்தில் வசூல் ரீதியாகவும், பெயர் ரீதியாகவும் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட, அல்லது அனைவராலும் பாராட்டப்பட்ட மேலே சொல்லப்பட்ட இயக்குனர்கள் நிச்சயம் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்று நம்பலாம்.
சினிமவில் நேரமும், காலமும், அதிர்ஷ்டமும் சரியாக அமைய வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களது விஷயத்தில் திறமையையும் மீறி இந்த விஷயங்கள்தான் தடைக்கற்களாக இருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது. அவற்றை உடைத்தெறிந்து தங்களது இரண்டாவது படைப்பின் மூலம் அவர்கள் இன்முகத்துடன் வலம் வரவேண்டும் என்பதே நமது ஆவல். இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டுமா ? என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.