சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் ஒரு காட்சி. தான் நடித்த படத்தை ஆர்வமாக பார்க்க காத்திருக்கிறான் 'அசால்ட்' சேது; தான் எடுத்த படத்திற்கு கிடைக்கப்போகும் வரவேற்பை எண்ணி, திரையரங்கிற்கு வெளியே தவித்திருக்கிறான் கார்த்திக்! படம் ஆரம்பிக்கிறது... அசுர வேகம் எடுக்கிறது! அடுத்தடுத்த நொடிகளில், 'அசால்ட்' சேதுவின் கோபம், படம் எடுத்த பின்னணி, வெற்றியும் பதற்றமுமாய் கார்த்திக் என, சரசரவென்று நகரும் காட்சிகளில், ஆவலையும் விறுவிறுப்பையும் எகிற வைக்கிறது விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு; தற்போது, அதற்கு 'தேசிய விருது' கவுரவம்!
'சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மரியான், காக்கி சட்டை, நண்பேன்டா' என, தமிழ் படங்களிலும், 'அன்வர், 22 பீமேல் கோட்டயம், பெருச்சாளி' உள்ளிட்ட மலையாளப் படங்களிலும் சாதித்தவர் இந்த விவேக். எப்போதும், தன் 'கத்திரிக்கும் தொழிலில்' கண்ணும் கருத்துமாக இருப்பவர், தற்போது, சிவகார்த்திகேயன் நடிக்கும், 'ரஜினி முருகன்,' ஆர்யா தயாரிக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க,' கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'இறைவி' உள்ளிட்ட படங்களுக்கு, தன் கத்திரியை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு மாலை வேளையில் அவரை சந்தித்தோம்; மலையாளம் கலந்த தமிழில், வெகுவாய் நம் மனம் கவர்ந்தார்!
கேரளாவில் இருந்து சென்னை; எப்படி துவங்கியது இந்த பயணம்?
நான் கொச்சியில பி.காம்., படிச்சிட்டு இருந்தேன். அப்போ, சினிமாவுல சாதிக்கணும்னு ஓர் ஆர்வம் இருந்தது. ஆனா, என்ன பண்ணணும்னு, எதுவும் தெரியாது. 2003ல, சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம், படத்தொகுப்பு பத்தி தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கான ஒரு 'கோர்ஸ்' பண்ணினேன். அப்புறம், படத்தொகுப்பாளர் ஆண்டனி சார்கிட்டே, மூணு வருஷம், உதவி படத்தொகுப்பாளரா இருந்தேன்!
அவர்கிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள்?
படத்தொகுப்பு வேலைகளையும் தாண்டி, எடுத்துக்கிட்ட ஒரு வேலையை எப்படி சுலபமா செய்றதுன்னு அவருக்கு நல்லாத் தெரியும்; எதுக்குமே பதற்றப்படாத மனிதர்; ஒரு நாளைக்கு, 7 முதல் 8 மணி நேரம் வரை, க்ரியேட்டிவா யோசிச்சு, வேலையை கச்சிதமா முடிப்பாரு; இதை நான் ரொம்பவே ரசிப்பேன்! மேலும், அவரோட இருந்தப்போ தான், எஸ்.எம்.எஸ்., படம் எடுத்த ராஜேஷும், நானும், நெருங்கிய நண்பர்கள் ஆனோம்; ராஜேஷ் மாதிரி, பல இயக்குனர்களோட தொடர்பு எனக்கு கிடைச்சதும், ஆண்டனி சார் மூலமாத் தான்!
'ஜிகர்தண்டா' பற்றி...
நான் வேலை பார்த்த சில படங்களை கார்த்திக் சுப்புராஜ் பார்த்துட்டு, என்னை கூப்பிட்டு பேசினாரு; உடனே, கூட்டணி அமைச்சிட்டோம்! 'ஆக் ஷன், காமெடி, காதல், த்ரில்லிங்'னு, எல்லாமும் கலந்திருக்கிற ஒரு படம், ஜிகர்தண்டா! வெளிப்படையா சொல்லணும்னா, படத்தோட மொத்த டீமுக்குமே 'தேசிய விருது' கிடைச்சிருக்கணும்.
மலையாளப் படம் - தமிழ் படம்; உங்க 'கத்திரி'க்கு சிரமம் கொடுக்கிறது எது?
எந்த மொழி படமா இருந்தாலும், உணர்வுகள் ஒண்ணுதான்! என்னைப் பொறுத்தவரைக்கும், ஒரு படத்தோட உணர்வுகளை சரியா பிரதிபலிக்கிறதுலதான், ஒரு படத்தொகுப்பாளரோட வெற்றி அடங்கியிருக்கு! அதை நான் சரியா பண்ணிட்டு இருக்கிறதா நினைக்கிறேன்; இன்னும், சிறப்பா பண்ணணும்னு ஆசைப்படுறேன்.
சமீபத்தில் நீங்க ரசித்த எடிட்டிங்?
நான் தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன். அதுல, எனக்கு 'மெட்ராஸ்' படம் ரொம்ப பிடிச்சிருந்தது. கே.எல்.பிரவீன் சாரோட படத்தொகுப்பு மேல, எனக்கு எப்பவும் ஒரு மரியாதை உண்டு. அதை இன்னும், ஒரு படி மேல கொண்டு போயிருக்கு இந்த படம்!
விருது வாங்கியாச்சு... இனி, உங்க சம்பளம் எகிறிடும் தானே?
என்ட குருவாயூரப்பா...இது எந்தா ஒரு சோதனை; ஆளை விடுங்க!
ரைட்டு... நீங்க சீக்கிரம் டெல்லி கிளம்புங்க!