இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சில்ட்ரன் ஆஃப் ஹெவன் என்கிற ஈரானிய படம் இன்றளவுக்கும் உலக சினிமா வரிசையில் முக்கிய இடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் அது குழந்தைகள் உலகத்திலிருந்து கொண்டு குழந்தைகளை பற்றிப் பேசியது. தன் தங்கைக்கு ஒரு ஷூ வாங்குவதற்காக போராடும் ஒரு அண்ணனை பற்றிய அருமையான படம். இதுபோல குழந்தைகளின் மனங்களை பிரதிபலித்த படங்கள் நிறைய இருக்கிறது.
ஆனால் இன்றைக்கு வெளிவருகிற பல தமிழ் படங்கள் சிறார் மனங்களை சிதைப்பதாகவே உள்ளது. ஏற்கனவே இணைய தளங்கள் மூலம், விடியோ கேம்கள் மூலம் கொலை செய்வதையும், செய்ப்படுவதையும் விளையாட்டாக நினைத்து சிறுவர்கள் ரசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் படங்களும் அதனை போதித்தால் வருங்கால சமூதாயம் திசை மாறிச் சென்றுவிடும் ஆபத்து நிறைய இருக்கிறது.
பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்தை எடுக்கிற வரை பள்ளி சீருடையில் காதலிக்கிற கதைகள் சினிமாவில் வந்ததில்லை. முதன் முதலில் அந்த புண்ணியத்தை செய்தவர் பாரதிராஜா. காதல் மதங்களை கடந்தது என்ற அற்புத கருத்தை அந்தப் படம் சொன்னாலும், அது காட்டியது என்னவோ மீசை அரும்பாத பருவத்தில் காம ஆசை அரும்பியதைத்தான். கஸ்தூரிராஜாவின் துள்ளுவதோ இளமை, செல்வராகவனின் காதல் கொண்டேன். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கிய 3 படங்கள் எல்லாமே சீருடைக்கால காதலை மையப்படுத்தி வெளிவந்தவதைதான்.
பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்த பாலாஜி சக்திவேலின் காதல் படம் கற்றுத் தந்ததும் பள்ளிக்கால காதலைத்தான். அவ்வப்போது வந்து கொண்டிருந்த படங்கள் இப்போது தொடர்ச்சியாக வரத் தொடங்கி விட்டது. சிறார்களை காதலர்களாகவும், வன்முறையாளராகவும் சித்திரிக்கிற படங்கள் நிறைய தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு வெளிவந்து வசூலை அள்ளிய கோலிசோடா படம் சிறார்களை வன்முறையாளர்களாக காட்டியது. வசூலைக் குவித்த அந்தப் படத்துக்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராட்டினம் படம் கிளைமாக்சில் நல்ல கருத்தை சொன்னாலும் படம் முழுக்க பள்ளி காதல்தான் பிரதானமாக இருந்தது.
சமீபத்தில் வெளியான வஜ்ரம் என்ற திரைப்படம் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசுவதாக கூறிக்கொண்டு நான்கு சிறுவர்களை கடத்தல்காரர்களாவும், கொலைகாரர்களாகவும் காட்டியது. விரைவில் வெளிவர உள்ள ஜி.வி.பிரகாஷ் நடித்துள் பென்சில் பள்ளி மாணவர்களின் காதலை மையமா கொண்டதுதான். கமர்கட்டு என்ற படத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சீருடையில் டூயட் பாடி, ஆடுகிறார்கள். கஸ்தூரி ராஜா இயக்கி வரும் காசு பணம் துட்டு மணி என்ற படத்தில் சிறுவர்கள் சமூக விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதுதவிர வாண்டுகள், அடங்கா பசங்க உள்பட பத்துக்கும் மேற்பட்ட படங்கள் சிறார்களை மையமாக கொண்டு உருவாகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் சிறார்கள் எப்படி கையாளப்பட்டிருக்கிறார்கள் என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும்.
சிறார்களை மையப்படுத்தி அவ்வப்போது சில நல்ல படங்களும் வெளிவருவதை மறுக்க முடியாது. பாண்டிராஜின் பசங்க படம் சிறார்களின் உலகத்தில் நின்று அவர்களின் உணர்வுகளை படம் பிடித்தது. விரைவில் வெளிவர உள்ள காக்க முட்ட என்ற படம் பீட்சா சாப்பிட நினைக்கும் ஏழை சேரி சிறுவர்களை பற்றியது. சாப்ளின் சாமந்தி என்ற படம் சார்லி சாப்ளின் கேரக்டரால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறுமியின் கதையை பேச இருக்கிறது. ரோகினி இயக்கி வரும் அப்பாவின் மீசை ஒரு சிறுவனின் மனவோட்டத்தை காட்ட இருக்கிறது.
இப்படி சில நல்ல படங்கள் வந்தாலும் அதிகமாக சிறார்களின் மனங்களை சிதைக்கிற. பள்ளி பருவத்திலேயே காதலை துளிர்க்க வைக்கிற படங்கள்தான் அதிகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. தணிக்கை குழுதான் விழிப்புடன் இருக்க வேண்டும்.