ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்த திரையுலகத்துக்கு நான் ஒரு ஆடியன்சாதான் வந்தேன். இப்பவும் ஆடியன்சாதான் இருக்கேன். ஒரு டெக்னீசியனா நான் ஒருபோதும் மாற மாட்டேன். மாறவும் கூடாது என்கிறார் எடிட்டர் எல்.வி.கே.தாஸ். இவர் மைனா, கும்கி, கயல் உள்பட 22 படங்களில் எடிட்டராக பணியாற்றியவர்.
தினமலர் இணையதளத்துக்காக அவருடன் ஒரு நேர்காணல்...
எடிட்டிங் துறைக்குள் எப்படி வந்தீர்கள்?
நான் ப்ளஸ்-2வில் பெயிலாயிட்டேன். அப்போ எங்க சித்தப்பா வந்து உன்னை மாதிரி ஆளுங்கதான் சினிமாவுக்கு தேவைன்னு சொல்லி என்னை கூட்டிட்டு வந்தாரு. நானும் கேமராமேன், அசிஸ்டென்ட் டைரக்டருன்னு சேர்த்து விடுவாருன்னுதான் நெனச்சேன். ஆனா எடிட்டிங்கில் சேர்த்து விட்டாரு. எனக்கு எடிட்டிங்குன்னா என்னென்னே தெரியாதேன்னு அவருகிட்டயே சொன்னேன். அப்ப படம் வெளிய வர்றதுக்கு முன்னாடியே முதல்ல நீங்கதான் பார்ப்பீங்கன்னாரு. அதனால் இந்த வேலைதான் செம ஜாலின்னு எடிட்டிங்குல சேர்ந்தேன். ஆனா உள்ள வந்த பிறகுதான் தெரிஞ்சுது ஒரே படத்தை நாலு வருசமா பார்க்கிற விசயம்.
எந்த எடிட்டரிடம் பயிற்சி பெற்றீர்கள்?
முதல்ல லெனின் சாருகிட்ட உதவியாளரா சேர்ந்தேன். அப்ப கிழக்கும் மேற்கும், காதலே நிம்மதிங்கிற படமெல்லாம் எடிட்டிங் வேலை போய்க்கிட்டு இருந்துது. அதுக்கு அப்புறம் 92ல் இருந்து 96 வரைக்கும் ஜி.முரளிங்கிற கேரள சினிமா எடிட்டர்கிட்ட ஒர்க் பண்ணினேன். ஒரு 150 படத்துக்கு அவருகிட்ட வேலை செய்தேன். நான் அவருகிட்ட சேர்ந்த படம் பூதக்கண்ணாடி. அந்த படமே தேசிய விருது வாங்கியது. 96 ல் அவருகிட்ட இருந்து விலகி, எடிட்டர் உதயசங்கரிடம் சேர்ந்தேன். அதுக்கு அப்புறம் திரும்பவும் லெனின் சார்கிட்ட சேர்ந்தேன். அப்ப மஞ்சக்காமாலை வந்ததினால அவருகிட்ட இருந்து வந்துட்டேன். அப்புறம் ஏவிட் கத்துக்கிட்டேன். 2001ல் வெளியே வந்து படங்கள் பண்ண ஆரம்பிச்சேன்,. 2010ல் மைனாதான் என்னை வெளிச்சம் போட்டு காட்டியது. அதுக்கு அப்புறம் கும்கி. அதோடு நிறைய குறும்படங்களுக்கு எடிட்டிங் பண்ணி விருது வாங்கியிருக்கேன்.
உங்களது கேரியரை எந்த படத்திலிருந்து ஆரம்பிச்சீங்க?
டிசம்பர் 26ங்கிற படத்துலதான் நான் எடிட்டரா முதன்முதலாக ஒர்க் பண்ணினேன். அதுக்கு அப்புறம் சாபூட் த்ரி ன்னு பல படங்கள் டிஜிட்டல்ல பண்ணினேன். பிலிம்ல முதல் படம் மைனா. தான். களஞ்சியத்தின் கருங்காலி படமும் பிலிம்தான். அப்புறம் கும்கி, கொள்ளைக்காரன், பேச்சியக்கா மருமகள், கோழி கூவுது. கயல், மகாபலிபுரம் என 22 படங்கள் பண்ணியிருக்கிறேன். இதுதவிர இன்னும் யாழ், ரு, ஆக்கம், அட்டின்னு நிறைய படங்கள் ரிலீஸ் ஆக வேண்டியதிருக்கு.
பிலிம்-டிஜிட்டலுக்கிடையே என்ன வித்தியாசம் இருப்பதாக கருதுகிறீர்கள?
பிலிம்ல குறைவா ஷூட் பண்ணுவாங்க. ஆனா இப்ப டிஜிட்டல்ல நிறைய எடுக்கிறங்க. ரஷ் பார்க்கிறதுக்கே ஒரு மாதம் ஆகுது. கொஞ்சமா சாப்பாடு வச்சா இன்னும் கொஞ்சம் சாப்பாடு கெடைக்காதான்னு இருக்கும். ஆனா டிஜிட்டல்ல போதும் போதும்கிற அளவுக்கு படமாக்குறாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. அந்த வகையில ஒரு படம் முடிக்கிறதுக்கே ஒரு வருசம் ஆகிடுது. ஒரு இயக்குனரோட ஸ்கிரிப்ட காப்பாத்தணும். ரசிகனை போரடிக்க விடாம படம் பார்க்க வைக்கனுமங்கிறத மனசில வச்சித்தான் ஒவ்வொரு படத்திலேயும் நான் வேலை செய்வேன். ஆனா இயக்குனரோட கலந்துதான் அந்த வேலைய செய்வேன்.
தனி அறையே உங்கள் உலகமான இந்த இருட்டு உலகத்தில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது?
இந்த துறைக்கு நான் இஷ்டப்பட்டு வந்ததனால கஷ்டங்கள் எனக்கு தெரியல.மத்தவங்க பார்க்கிறதுக்கு முன்னாடியே படம் பார்த்திடுறோம். ஒரு இயக்குனருக்கு பக்கத்து சீட்ல உட்கார்ந்து படம் பார்த்து நம்மளோட அவுட்புட்ட கொடுக்கிற பெரிய பங்கு இருப்பதால் அந்த கஷ்டம் தெரியல. 10 வருசமா போராடி ஒரு புரொடியூசரை புடிச்சு அவரோட வாழ்க்கையையே நம்மகிட்ட கொடுக்கும்போது, அவரு லைப்ப நம்ம கையில கொடுக்கிறாரு. அப்ப நம்ம ஒரு டாக்டர் மாதிரிதானே. அந்த ஸ்கிரிப்ட்ட எப்படி குழந்தையை சுகப்பிரசவமாக எடுக்கிறாங்களோ அதே மாதிரி எடுத்து இயக்குனர் கையில கொடுக்கிறது ஒரு எடிட்டரோட கடமை. என்னோட ஒவ்வொரு படத்திலேயும் அதை மனசுல வச்சிக்கிடடுதான் வேலை செய்றேன். மற்றபடி எடிட்டிங்குல பெருசா பிரச்சினைகள் எதுவும இருக்கிறதா எனக்கு தெரியல.
சாதாரணமா ஒரு படத்துக்கு எவ்வளவு புட்டேஜ் எடுத்துட்டு வர்றாங்க?
பிலிம்ல 3 மணி நேரம்தான் புட்டேஜ் கொடுப்பாங்க. ஆனா இப்ப 2 மணி நேர ஸ்கிரிப்டுக்கு 400 மணி நேரம் புட்டேஜ் எடுக்கிறாங்க. படமா பார்க்கிறப்ப 6 மணி நேரம் வரை இருக்கும். இதை நாங்க வந்து 2 மணி நேரத்துக்கு கொண்டு வரணும். எந்தெந்த வகையில சீனை சுருக்கலாம். எந்தெந்த வகையில சீனை ரீமூவ் பண்ணலாம்னு யோசிச்சு செய்வோம். சில சமயங்கள்ல டைரக்டர்கள் ஏன் இந்தந்த இடங்களை மாற்றியமைத்தீர்கள் என்று கேட்பார்கள். அப்போது அதற்கு உரிய விளக்கம் கொடுப்பேன்.
உதாரணத்துக்கு இடைவேளைக்கு முன்னாடி ஒரு பாடல் வச்சா வெளியில எழுந்து போயிடுவாங்க. ஆனா இடைவேளை முடிஞ்சி உள்ளேவந்த பிறகு அந்த பாட்ட வச்சா வெளியில போக மாட்டாங்க. அதனால அதுபோன்ற விசயங்களை மனசில வச்சி சீன்களை மாற்றி ஆர்டர் பண்ணுவோம். ஆனா ஸ்கிரிப்ட்டுக்குள்ளேயே நாம இருக்கணும் அதை விட்டு எங்கேயும் விலகி போயிடக்கூடாது.
பிரபுசாலமனுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி?
அவரது மைனா, கும்கி, கயல் படங்களுக்கு நான்தான் எடிட்டர். அவருடைய மெனக்கெடல் ஜாஸ்தி அதாவது நான் ஒரு வெர்சன் ஒர்க் பண்ணி காமிச்சேன்னா. அவரும் ஒரு வெர்சன் என்னைய தாண்டி ரெடி பண்ணுவாரு. என்னை விட அவரு அசத்திடுவாரு. அதனால் அவரை விட நாம ஏதாவது நிரூபிக்கணுமேன்னு ஒரு பத்து நாள்ல நான் ஒரு புது வெர்சன் ரெடி பண்ணுவேன்.இப்படித்தான் எங்களுக்குள் போட்டி வந்து கொண்டேயிருக்கும்.
டைரக்டர்களின் கதை ஆர்டரை நீங்கள் மாற்ற முடியுமா?
கண்டிப்பாக. எடிட்டர் டேபிளுக்கு வரும்போது ஆர்டர் மாறும். அதை டைரக்டர்களும ஏத்துக்குவாங்க. மைனா டைம்ல எப்படியேனும் ஜெயிக்கணும்ங்கிற ஆர்வம் எனக்கும் இருந்தது. பிரபுசாலமன் சாருக்கும் இருந்தது. இப்படி எல்லா ஒர்க்கும் ஒரே மாதிரியா இருந்ததுன்னா அவரோட பேசிக் ஸ்கிரிப்ட் உள்ளே இருக்கும். அதை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. என்னதான் எடிட்டிங்குல மாத்தினாலும் பேசிக் ஸ்கிரிப்டோட உயிரானது உள்ள இருந்துகிட்டேதான் இருக்கும்.
எடிட்டர்களுக்கென்று ஒரு ஸ்டைல் உள்ளதா?
கண்டிப்பா இருக்கு. நான் லெனின் சாருகிட்ட நேர்த்தியானதுங்கிறத இன்றைக்கு வரைக்கும் கத்துக்கிட்டிருக்கேன். என்ன நேர்த்தின்னா, எடிட்டிங் பண்ணியிருக்காங்க அப்படின்னு சொல்லவே முடியாத அளவுக்கு எடிட்டிங் செய்வதுதான் நேர்த்தியான முறை. நாம எடிட் பண்ணியிருக்கோம்னும் தெரியக்கூடாது.மறைமுகமா இருக்கனும்.
நீங்கள் வியந்து பார்க்கும் எடிட்டர் யார்?
ஜான் மூவை நான் வியந்து பார்ப்பதுண்டு. எடிட்டிங் ரூல்ஸ்களை யூடேர்ன் என்ற ஆங்கில படத்தில் அவர்தான் பிரேக் பண்ணினார். இங்கயெல்லாம் என்ஜி ஷாட்டை ரிமூவ் பண்ணிடுவங்க ஆனா அவர் யூஸ் பண்ணியிருந்தாரு. முதன்முதலா என்ஜி ஷாட்டை யூஸ் பண்ணினவரே அவர்தான். அவருக்கு அப்புறம் கம்பெனிங்கிற இந்தி படத்துல ராம்கோபால்வர்மாவும் அந்த முறையை பயன்படுத்தினாரு.
அதே மாதிரி எடிட்டர் திருநாவுக்கரசு என்னை அதிகம் பாதித்தவர். ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலில் சாங் லீடுக்கு முன்னாடி சைலன்ட் ஷாட்டை ஒரு மூணு நிமிசம் போட்டிருப்பாரு. அலையடிப்பது. பறவைகள் பறப்பதுன்னு போட்டு சாங்க ப்ரேக் பண்ணினதே அவர்தான். இப்படி கட் பண்ணினா நான் எப்படி மியூசிக் போடுறதுன்னு இளையராஜாவே கோபப்பட்டார். அந்த வகையில் இளையராஜாவையே கோபப்பட வைக்கிற ஒரே எடிட்டர் திருநாவுக்கரசுதான். ஒரு சின்ன புல்லோ, பூவோ எதுவாக இருந்தாலும் அதை வீணடிக்காம படத்துக்குள்ள பயன்படுத்திடுவாரு. அதனால அவரோட ஒர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்காகவே நான் கடலோரக் கவிதைகள் படத்தை 150 தடவை பார்த்திருக்கிறேன். ஆனா அந்த திருநாவுக்கரசு சார் யாருங்கிறது மக்களுக்கு தெரியாது.
பெரும்பாலும் எந்த மாதிரி கதைகள் அதிக டயம் எடுக்கும்?
வாழ்வியல் உணர்வுப்பூர்வமான படங்கள்தான் அதிக டயம் எடுக்கும். ஆக்சன் படம்னா ஜிக்ஜாக்தான் அதிகமா இருக்கும். உணர்வுப்பூர்வமான படங்கள்ல இந்த மாதிரியெல்லாம் பண்ண முடியாது.எடிட்டிங்கே மறைமுகமாத்தான் இருக்கனும்.
ஒரு படத்தோட வெற்றிக்கு எடிட்டரோட பங்களிப்பு எத்தனை சதவிகிதம்?
முழு சதவிகிதமும் எடிட்டர்தான் பொறுப்பு.சின்னதா ஒரு தப்பு செஞ்சாலும் நல்லாருக்கு ஆனா லென்த் கம்மியா இருக்குன்னு மொத்த பழியையும் எங்க மேல போட்டுடுவாங்க ஆடியன்சு. ஹிட்டாயிடுச்சுன்னா எடிட்டிங்கால படம் ஓடிச்சுன்னு ஒருத்தர்கூட சொல்ல மாட்டாங்க.
நீங்கள் பண்ணியதில் உணர்வுப்பூர்வமான படங்கள்?
மஞ்சள் குங்குமம், யாழ், கயல். இதில் கயல் படத்தில் ஒரு வெளிச்சத்தை தேடி ஒருத்தன் போறான். அந்த வெளிச்சம் என்பது என்ன என்கிற ஒரு சின்ன லைன்தான். அது ஒரு உணர்வுப்பூர்வமான படம். மைனா, கும்கியை விட எனக்கு ரொம்ப பிடித்த படம் கயல்.
அதேமாதிரி நான் ஒர்க் பண்ணாத இரண்டாம் உலகம் படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். துள்ளுவதோ இளமை படத்தில் இருந்தே நான் செலவராகவனின் ரசிகன். ஒருநாள் நான் அவரைபோய் சந்திச்சேன். அப்ப நாம சேர்ந்து ஒர்க் பண்ணலாம் என்றார். அதற்கு, உங்க பர்ஸ்ட் படத்தை பார்த்துட்டு உங்ககிட்ட பேசணும்னு ஆசைப்பட்டதே இப்ப இரண்டாம் உலகம் பார்த்த பிறகுதான் நிறைவேறியிருக்கு. அதோடு என் சைடுல நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியதிருக்கு. அதை நீங்க குடுத்திட்டீங்கன்னா அப்புறம் நான் எதை நோக்கி போக முடியும். அதனால் அந்த ஆசைய நீங்க பில்லப் பண்ணாதீங்க ன்னு சொல்லிட்டு வந்தேன். அதேமாதிரி உதிரிப்பூக்கள மகேந்திரன், வீணை எஸ்.பாலசந்தர் ஆகிய இயக்குனர்களும் என்னை வெகுவாக பாதித்தவர்கள்தான்.
மேலும், இந்த திரையுலகத்துக்கு நான் ஒரு ஆடியன்சாதான் வந்தேன். இப்பவும் ஆடியன்சாதான் இருக்கேன். ஒரு டெக்னீசியனா நான் மாறவும் மாட்டேன். மாறவும் கூடாது. முக்கியமாக இந்த எடிட்டிங் தொழில்ல ரசிகனாக இருக்கவே ஆசைப்படுறேன்.
உங்களது எதிர்கால ஆசை?
எடிட்டிங்குன்னா என்ன, எந்தெந்த இடத்துல கட் பண்ணலாம். அப்படிங்கிறத ஒரு படமா எடுக்கணுங்கிறது எனது ஆசை. ஹாலிவுட்ல கூட சமீபத்துல ஒரு படம் எடிட்டிங்க பத்தி வந்தது. அதேமாதிரி நம்ம ரசிகர்களுக்காக எடிட்டிங்க பத்தி அவங்க தெரிஞ்சிக்கிறதுக்காக ஒரு படம பண்ணுங்கிறது எனது நீண்டநாள் ஆசை. அது கமர்சியல் படமா இருக்காது. டாக்குமென்ட்ரி படமாக இருக்கும் என்கிறார் எடிட்டர் எல்.வி.கே.தாஸ்.