பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மும்பை முகங்களுக்கு கோலிவுட்டில் எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குஷ்பூ, சிம்ரன், நக்மா, ஜோதிகா, ஹன்சிகா என, இதற்கு பலரை முன் உதாரணங்களாக கூறலாம். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஆஷ்னா ஜாவேரி. துறு துறுவென பேசுகிறார்; அழகாக இருக்கிறார். ஷாருக் கான், ரஜினி, சந்தானம், மோடி, துாய்மை இந்தியா, தமிழகம், கலாசாரம் என, எதைக்கேட்டாலும் பேசுகிறார்; பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் பேசியதை நீங்களும் படியுங்களேன்.
* சினிமாவுக்கு வரும் முன்பு நீங்கள் எப்படி...?
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். அப்பா பிஸினஸ்மேன் அம்மா குடும்பத் தலைவி. ஒரேயொரு அக்கா திருமணமாகிவிட்டது. ஜெர்மனியில் வசிக்கிறார்.
நான் ஃபைன் ஆர்ட்ஸில் பட்டப்படிப்பு முடித்தேன். முதலில் நான் விளம்பரங்களில்தான் நடித்தேன். அதைப் பார்த்துதான் படவாய்ப்பு வந்தது. பிரிண்ட் மீடியா, டிவி மீடியா என பலதரப்பட்ட விளம்பரங்கள் வந்தன சுமார் 30 விளம்பரங்களில் நடித்து இருக்கிறேன். டாடா டீ விளம்பரத்தில் ஷாருக்கானுடன் நடித்தேன்.
* ஷாருக்கானுடன் நடித்த அனுபவம் எப்படி?
இயக்குனர் பால்கி, ஒரு நாள் என்னை அழைத்துப் பேசினார். அமிதாப்பை வைத்து பா, ஷமிதாப் படங்களை இயக்கியவர் அவர். டாடா டீ விளம்பரத்தில் ஷாருக் கானுடன் நடிக்கிறேன் என்றதும் எனக்கு இன்ப அதிர்ச்சி. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
ஷாருக், என்னைப் பொறுத்தவரை ராஜா போன்றவர்; நானோ, சாதாரணமான பெண். எனவே மிகவும் பயந்தேன்; பதற்றமாக இருந்தது. பிரமாண்டமான படக்குழு வேறு பயமுறுத்தியது. ஒரே மிரட்சியாக இருந்தது. ஷாருக் என் நிலைமையைப் புரிந்து கொண்டார். என்னிடம் பொறுமையாகப் பேசி சகஜமாக்கினார். அதற்கு முன் பல விளம்பரங்களில் நடித்திருந்தாலும், அப்போது ரொம்பவே பயந்தேன்; ஆனால், அவர் என்னை ஊக்கப்படுத்தினார். எவ்வளவு உயரத்திலிருக்கும் அவர், இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என, மேலும் பிரமிப்பு ஏற்பட்டது.
* எப்படிப்பட்ட படங்களை விரும்பிப் பார்ப்பீர்கள்?
காமெடி மற்றும் கமர்சியலான, பொழுதுபோக்கான படங்களைத்தான் விரும்பி பார்ப்பேன். மன அழுத்தம் போக்கும் மாதிரியான கதை, காட்சிகள் கொண்ட படங்களையே மிகவும் பிடிக்கும். படம் பார்த்தால், மனம்விட்டு சிரித்துக்கொண்டே வெளியே வரவேண்டும்.
* மாடலிங் - சினிமா இடையில் வேறுபாடு என்ன?
இரண்டுக்கும் கேமரா முன்புதான் நிற்க வேண்டும்; இதுதான் ஒற்றுமை. மாடலிங் என்றால் இரண்டு மூன்று நாட்களில் வேலை முடிந்துவிடும்; சம்பளமும் கணிசமாக வரும். சினிமா என்பது விசாலமான பெரிய உலகம். விளம்பர உலகிலிருந்து சினிமாவுக்கு வருவது, பெரிய அடியை முன்னெடுத்து வைப்பது போலத்தான். இங்கே, எல்லாவகை நடிப்பையும் காட்ட வேண்டும். லவ், காமெடி, ஆவேசம், எமோஷன் என, பல பாவங்கள் காட்டவேண்டும். சினிமாசாதாரணமல்ல; நிறைய கஷ்டப்பட வேண்டும்.
* வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் பட அனுபவம் பற்றி...?
சினிமா பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த எனக்கு, வந்த முதல் வாய்ப்பு அது. ஒன்றுமே புரியாமல் தான் இருந்தேன்; நடித்து முடித்தபோது தான் சினிமா என்றால் என்ன என்றே புரிந்தது.
* முதல் படத்தில் காமெடி நடிகரான சந்தானத்துடன் நடித்துள்ளீர்களே?
ஏன் நடிக்கக் கூடாது; அதிலென்ன தவறு? என்னைப் பொறுத்தவரை, அது ஒரு நல்ல ஜாலியான, சந்தோஷமான, திருப்தியான அனுபவம். சந்தானம் நல்ல நடிகர்; நல்ல மனிதர். தன்னைச் சுற்றியுள்ளவர்களை, எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பார். அவர் என்னை தைரியப்படுத்தி, ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார். ஷாருக் கானுடன் நடித்த விளம்பர படத்தை பார்த்து தான், என்னை அந்த படத்துக்கு, புக் செய்தனர். பல பேரைப் பார்த்து பிடிக்காமல், என்னைத் தேர்வு செய்ததாகக் கூறினார். முதல் படமே வெற்றியும் பெற்றுவிட்டது. நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலிதான்.
* மீண்டும் சந்தானம் படத்தில் நடிப்பது பற்றி..?
இதுவும் என் அதிர்ஷ்டம்தான். இதில் அந்தப்படத்தில் நடித்ததற்கு நேர் மாறான கதாபாத்திரம். சந்தானத்துக்கு எதிரான பாத்திரம். எதையும் பேச தயங்காத துணிச்சல் மிக்க பெண்ணாக வருகிறேன்.
* அண்மையில் பார்த்த தமிழ்ப் படங்கள் எவை..?
ஐ படம் பார்த்தேன். விக்ரமின் நடிப்பைக் கண்டு அசந்து போனேன். விக்ரம் ஒரு அற்புதமான நடிகர். சிறப்பாக நடித்திருந்தார், நான் அதை ரசித்தேன். சந்தானமும் நடித்திருந்தார். இதுதவிர டிவியில் சிறுத்தை, காதலன் உள்ளிட்ட படங்களையும் பார்த்தேன். இப்போதெல்லாம் நிறைய தமிழ்ப்படங்களையும், பாடல்களையும் பார்க்கிறேன், ரசிக்கிறேன்.
* பிடித்த நடிகர்கள்..?
அங்கே ஷாருக்கான், கஜோல், இங்கே ரஜினி,கமல்... இப்படி பலர் இருக்கிறார்கள். ஹாலிவுட்டில் பெரிய பட்டியலே இருக்கிறது.
* வேறு எதில் எல்லாம் ஆர்வம்?
எனக்கு இசை மிகவும் பிடிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. யோகாவில் ஆர்வமுண்டு. நான் ஒரு சிவபக்தை. வீட்டில் சின்னதாக ஒரு கோவில் இருக்கிறது, காலை
எழுந்தவுடன் சிறிதுநேரம் தியானம் செய்வேன். பரமசிவன், பார்வதியை வழிபாடு செய்வேன்.
* தமிழ் பேசத் தெரியாமல் நடிப்பது சிரமமாக இல்லையா?
முதல் படத்தின் போது தமிழ் எனக்கு தெரியவில்லை; புரியவில்லை. ஆனாலும், என்ன பேசப் போகிறேன், அதன் அர்த்தம் என்ன என்று கேட்டுப் புரிந்த பின்தான் நடித்தேன். எனக்குத் தமிழ் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதற்கு நிறைய தமிழ்ப் படங்கள் பார்க்கிறேன். வணக்கம், எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா, சாப்பிட்டீங்களா? இவை, எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தைகள். விரைவில், தமிழைக் கற்றுக் கொள்ள ஆசை. 30 நாட்களில் தமிழ் பாஷை புத்தகம் கூட வாங்கி விட்டேன்.
* மும்பைக்கும் சென்னைக்கும் வேறுபாடு என்ன?
சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடே பிடித்துள்ளது. காரணம், இங்கு ஒரு கலாசாரம் இருக்கிறது; ஒரு பாரம்பரியம் இருக்கிறது; கலாசார மதிப்பு இருக்கிறது. மரியாதை தெரிந்த மக்கள்; அவர்களிடம் ஆன்மிக உணர்வு உள்ளது. இங்கே நிறைய சிவன் கோவில்களை பார்க்கிறேன். ஒரேநாளில் திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் சென்றேன். தஞ்சாவூரில் இருப்பது பெரிய சிவன்கோவில். மதுரைக்கும் சென்றேன்; கோவை செல்ல வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. இங்குள்ள கோவில்களுக்கு போனபோதெல்லாம் மனதுக்கு நிம்மதியும், புத்துணர்வும் கிடைத்தது. மும்பை என் சொந்த ஊர்தான். அங்கு போகும்போது, சென்னையை மிஸ் பண்ற உணர்வு வருகிறது.
* நம் இந்தியா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எல்லாவற்றையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என்கிற மனநிலை, மக்களிடம் இருக்கிறது; இது மாறவேண்டும். பிரதமர் மோடியின், துாய்மை இந்தியா திட்டம் எனக்குப் பிடித்துள்ளது.மக்கள் நடத்தையில் இன்னமும் மாற்றம் வேண்டும். தகுதியுள்ள குடிமகனாக மாறும் விழிப்புணர்வு வர வேண்டும். சுத்தம் என்று சொல்லிக் கொண்டு, சாலைக்கு துடைப்பத்துடன் செல்கின்றனர்; பிரசாரம் செய்கின்றனர்; இதுபற்றி, சிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர்.
எப்படியாவது ஒரு விழிப்புணர்வு வரட்டுமே என்று தான் இதை செய்கின்றனர். அதைப் பார்த்து, சிறுசிறு மாற்றம் வரட்டுமே. நல்ல குடிமகனாக விளங்கும் உணர்வுடன், கல்வியறிவும் கட்டாயம் தேவை. இவை இரண்டும் இணைந்தால், நம்மை யாரும் ஜெயிக்க முடியாது.