‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சினிமாவே வேண்டாம் என்ற வார்த்தையை உதிர்த்து விட்டு, தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்ட லட்சுமி மேனனை தேடிப்பிடித்து, என்னாச்சு பொண்ணுக்கு? என, கேள்விக்கணைகளை தொடுத்தோம். தன் ஆதங்கத்தையும், ஆசைகளையும், ஆவேசத்துடன் அடுக்கடுக்காக கொட்டித் தீர்த்தார். மலையாளம் கலந்த தமிழில் நம்முடன் அவர் பேசியதிலிருந்து...
* கோலிவுட்டின் செல்லப் பிள்ளையான நீங்கள், திடீரென சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக கூறியது ஏன்?
சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக ஒருபோதும் கூறவில்லை. சிலர், இதை தவறாக புரிந்து கொண்டு விட்டனர். தொடர்ந்து நடித்து வருவதால், எனக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது. படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த நினைக்கிறேன். மேலும், ஒரே மாதிரி கிராமத்து பின்னணியில் அமைந்த கதைகள் தான் தொடர்ந்து எனக்கு கிடைக்கின்றன; இதில் விருப்பம் இல்லை. வித்தியாசமான வேடங்கள் கிடைத்தாலோ, என் தோற்றத்தை மாடர்னாக காட்டும் வேடங்கள் கிடைத்தாலோ தொடர்ந்து நடிப்பேன். மற்றபடி, எனக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை; ஆசையும் இல்லை.
* தமிழ் சினிமாவில், நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லையா?
பட வாய்ப்புகளுக்காக நான் யாரையும் தேடிப் போனது இல்லை. என்னை தேடி வந்த வாய்ப்புகளில் மட்டுமே நடித்தேன். அதில், சில படங்கள் நன்றாக அமைந்தன. நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. எனக்கென தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது என்ற நம்பிக்கையில்லை. இன்னிக்கு என் படம் ஹிட்; எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. நாளை மற்றொரு நடிகை படம், ஹிட்டானால், அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க; இது சினிமா வரலாறு.
* விஜய், அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு ஏன் கிடைக்கவில்லையா?
அந்த வாய்ப்பு எனக்கு ஏன் கிடைக்கவில்லை என, தெரியவில்லை. நானும், அதற்காக முயற்சி எடுக்கவில்லை.
* சசிகுமார் தவிர உங்களது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள் யாராவது.?
என் வளர்ச்சியில் சசிகுமார் சாருக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் அவர் தவிர வேறு யாரும் எனக்கு அந்தளவு பழக்கம் கிடையாது. சினிமா வட்டாரத்தில் எனக்கு பெரிய நட்பு வட்டாரம் எதுவும் கிடையாது.
* சினிமாவை பற்றி என்னதான் தெரிந்து வைத்துள்ளீர்கள்?
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் நான் வரவில்லை. வாய்ப்புடன், அதிர்ஷ்டமும் எனக்கு தோதாக அமைந்தது. இதனால், ஜெயிச்சுக்கிட்டே இருந்தேன். சினிமா மீது எனக்கு பைத்தியம் இல்லை. அந்த பட வாய்ப்பு போய்விடுமோ, இந்த பட வாய்ப்பு போய் விடுமோ என்ற கவலை இல்லை. நான் சென்னையில் வசிக்கவில்லை; கேரளாவில் தான் வசிக்கிறேன். நான் எடுக்கும் முடிவுக்கு, என் குடும்பத்தினர் ஒத்துழைக்கின்றனர்.
* சினிமாவில் நீங்க நினைத்த எதுவும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் உண்டா?
சினிமாவில், எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. கும்கியில் நடித்தபோது, பெரிய படங்கள் கிடைக்கும்; பெரிய நடிகையா பேசப்படுவோம் என, நினைக்கவில்லை. வெற்றி, தோல்வி, பரபரப்பு என, எந்த நிலையிலும் அமைதியை மட்டுமே ஆராதித்தேன்.
*ஒரே மாதிரி காஸ்ட்யூமில் நடிப்பது தான் உங்களுக்கு வெறுப்பை தந்துவிட்டதா?
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, பாவாடை, தாவணி என்னோட உடை. கேரளாவில் இந்த மாதிரி காஸ்ட்யூம் எங்கேயும் பார்க்க முடியாது. நான் எப்பவும் கேஸ்வல் உடைகளைத் தான் அணிவேன். அந்த மாதிரியான சாதாரண உடைகளில் கூட, இங்கு நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. போர் அடிச்சிடுச்சி; போதும்பா... அப்படின்னு ஆயிடுச்சி.
* உங்க பிளஸ், மைனஸ் என்ன?
நான், ரொம்ப முன் கோபக்காரி. என்னை ஏதாவது சொல்லிவிட்டால், பொசுக்குனு கோபம் வந்திடும். பிளஸ்ன்னா, நான் ஈசியா எல்லாரிடமும் பழகிடுவேன்; என்னை எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி நடந்துப்பேன்.
* ஷூட்டிங் இல்லாத நாட்களில் உங்களது பொழுதுபோக்கு என்ன.?
பெரும்பாலும் வீட்டில் தான் இருப்பேன். படிக்கின்ற நேரம் போக வீட்டில் இருக்கும்போது அனிமேஷன் படங்கள் பார்ப்பேன். கூடவே ஆங்கில காதல் படம் பார்ப்பேன்.
* உங்களது சின்ன சின்ன ஆசை.?
தனியாக இந்த உலகம் முழுக்க சுற்றி வர வேண்டும் என் ஆசை உள்ளது. லண்டன் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர் அங்கு ஒருதடவை சென்று வர வேண்டும். இது தான் எனது சின்ன சின்ன ஆசை.
* மனம் கவர்ந்த நடிகர், நடிகை யார்?
ரன்பீர், அமீர் கான் போன்ற இந்தி நடிகர்ளை ரொம்ப பிடிக்கும். தமிழில் எனக்கு பிடித்த ஹீரோக்கள் யாருமில்லை. ஹீரோயினை பொறுத்தமட்டில் வித்யாபாலனும், கங்கனாவும் ரொம்ப பிடிக்கும்.
* தமிழகத்தில் உங்களுக்கு என்ன தான் பிடிக்கும்?
எனக்கு சென்னை சாப்பாடு சுத்தமா பிடிக்காது; நான் சுத்த சைவம். அதனால், கேரள சாப்பாடு எங்கு கிடைக்குதோ, அங்கு வாங்கி வந்து தருவர். அப்படி இல்லையென்றால், எங்க பாட்டி, எனக்கு கேரள சாப்பாடு சமைத்து தருவாங்க. தமிழகத்தில், யாரும் என்னை மலையாள பெண்ணாக பார்க்கவில்லை. தமிழகத்தை சேர்ந்த பெண்ணாகவே பார்த்தனர். என்னுடைய தோற்றம், தமிழ் பெண் போல் இருந்தது தான் இதற்கு காரணம். என்னை இப்படி மாற்றிய பெருமை, தமிழ் திரைப்பட இயக்குனர்களையே சேரும்.
* உங்களைப் பற்றி ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான பின் தான், இப்படி ஒரு முடிவு எடுத்தீங்களா?
அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. அதைப்பற்றி பேசவே அசிங்கப்படுகிறேன். வேற கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்.
* கொம்பன் படத்தை பற்றி சொல்லுங்க...?
கொம்பன் பட ஷூட்டிங்கின் போது முதல் இரண்டு நாள் கார்த்தி, என்னுடன் பேசுவாரா... பேசமாட்டாரா...? என்ற தயக்கம் என்னுள் இருந்தது. பிறகு சகஜமாக பேசினார். கொம்பன் படம் என்னை சுற்றி தான் நடக்கும் ஒரு கதை என்றெல்லாம் நான் கதை சொல்லமாட்டேன். ஒரு அப்பாவுக்கும், பெண்ணுக்குமான பாசம், ஒரு மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையிலான உறவு பற்றி சொல்லபோகிற உணர்வுப்பூர்மான படம் இது. இதுதான் தமிழில் நான் நடித்த கடைசி படம், வேறு எந்த படமும் நான் அதன் பிறகு ஒப்புக்கொள்ளவில்லை.
* சமீபத்தில் பார்த்த தமிழ்படம்.?
ஐ படம் பார்த்தேன். சூப்பர் படம்.
* இந்த பிரேக் உங்களுக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.?
இப்போதைக்கு ஒரு பிரேக் எடுக்கிறேன். திரும்பவும் உங்களுக்கு சினிமா கிடைக்குமா என்று கேட்டால், கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால் அதைப்பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை. ஒரு நல்ல கதை, இந்தக்கதையை கண்டிப்பாக நாம் விடக்கூடாது என்று தோன்றினால் கண்டிப்பாக நடிப்பேன்.
* உங்களின்,பிரேக்கிற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? அதாவது, காதல், கீதல்...
அய்யோ, நான் பிளஸ் 2 படிக்கிற பொண்ணுங்க. நானே விரும்பித் தான் இந்த முடிவை எடுத்தேன். நீங்கள் நினைப்பது போல், காதல், கத்திரிக்காய் எதுவுமில்லை.
* பாடகியான அனுபவம் பற்றி.?
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் அந்த பாட்டை ரெக்கார்டு செய்த பிறகு இமான் பாராட்டினார். பாட்டும் நன்றாக வந்திருந்தது. நிறையபேர் அந்த பாட்டை பாராட்டினார்கள். இசை எப்போதும் என் வாழ்க்கையில் ஒரு அங்கம். என் பாட்டி ஒரு இசை ஆசிரியை, அவர் பாடும் போது உட்கார்ந்து கேட்டுள்ளேன். ஆனால் முறைப்படி இசையை கற்று கொள்ளவில்லை. கேட்கும் ஞானம் தான், ஓரளவுக்கு பாடுவேன்.
* மலையாள நடிகைகள் டான்ஸ், பாட்டு என்று அதகளம் பண்றாங்களே.? நீங்க எப்படி.?
எங்க அம்மா பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கிற டீச்சர். சின்ன வயதில் அவரிடம் நாட்டியம் கற்றுள்ளேன், மற்றபடி வேறு எதுவும் தெரியாது.
* சினிமா இல்லாவிட்டால் வேறு எந்த வேலைக்கு போவீர்கள்.?
எனக்கு பேஷன் டிசைன் மேல் கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதனால் அந்த வேலைக்கு கண்டிப்பாக செல்வேன்.
இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார்.