ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தனம் இல்லாத கல்யாணமும் இல்லை; சந்தானம் இல்லாத தமிழ் சினிமாவும் இல்லை என கூறும் அளவுக்கு, ரவுண்டு கட்டி அடிக்கிறார் சந்தானம். கிண்டலையும், கேலியையும் மொத்த குத்தகைக்கு எடுத்து, தோன்றும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு பட்டாசை கொளுத்திப் போடும் சந்தானம், நேற்று தன், 35வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். பிசியான படப்பிடிப்புக்கு நடுவே, நமக்காக அவர் பேசியதிலிருந்து...
* இந்த பொங்கல், உங்கள் பொங்கலாகி விட்டதே?
பொங்கலுக்கு வந்த இரண்டு படங்களில், நான் மெயின் ரோல் பண்ணியிருக்கிறேன். இரண்டு படங்களும், ஹிட் ஆனது பெரிய சந்தோஷம். எல்லாரும் சந்தோஷப்படுறாங்க; தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழியுது. மற்ற பொங்கலை விட, இந்த பொங்கல் எனக்கு ஸ்பெஷலா இருந்தது.
* நீங்களே பெரிய லொள்ளு பார்ட்டி; உங்களையே லொள்ளு செய்யும் ஹீரோ யார்?
ஆர்யா தான்; காலங்காத்தாலே 4:00 மணிக்கு சைக்கிளை எடுத்துட்டு வீட்டுக்கு வந்திடுவான். வா மச்சான் போலாம்ன்னு, மகாபலிபுரம் கிட்ட கூட்டிட்டு போயிடு வான். அப்படியே, சூட்டிங் போயிட்டு, நைட்ல கூடசைக்கிள்ல வர வச்சிடுவான். அவன் பண்ற டார்ச்சர் இருக்கே, அய்யய்ய்ய்யோ...
* ரஜினியோடு நடித்த அனுபவம்?
ஆர்யா, ஜீவாவுடன் நடிக்கும்போது, கலாய்ப்பது மாதிரி, ரஜினி சாரை கலாய்க்க முடியாது. அவர், காமெடியை ரசிப்பார்; நம்மள பேச விடுவார். ரவிகுமார் சாரும் அப்படித் தான். சூட்டிங்கில் மட்டுமல்லாமல், டப்பிங்கின் போதும், ஒரு சில நேரம் எக்ஸ்ட்ரா பிட்டிங் வைச்சு அடிச்சுருக்கேன். ரஜினி சாரும், ரவிக்குமார் சாரும் அதை கண்டுகொள்ளாமல், எனக்கு சுதந்திரம் கொடுத்தாங்க.
* உங்களின் காமெடியை ரசிக்கும் நடிகைககள் யார்?
நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா இப்படி நிறைய ஹீரோயின்களை சொல்லலாம். சூட்டிங் ஸ்பாட்டில் நான் அடிக்கிற கமென்ட்டை கேட்டு, விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அந்த இடமே கலகலப்பாகி விடும். சூட்டிங் முடிந்து, பூசணிக்காய் உடைக்கும்போது தான், உங்களை மிஸ் பண்றேன் என, மெசேஜை தட்டி விடுவாங்க; உஷாரான பொண்ணுங்க.
* யாருடைய காமெடி உங்களுக்கு பிடிக்கும்?
கவுண்டமணி சார் காமெடி ரொம்ப பிடிக்கும். நேரம் போவதே தெரியாமல், விழுந்து விழுந்து சிரிப்பேன். நீண்ட இடைவெளிக்கு பின், அவர் நடிக்கும் படம் வெளியாகப்போகிறது; அந்த படத்துக்காக காத்திருக்கிறேன்.
* ஹீரோவாக நடிப்பதற்கும், ஹீரோவின் நண்பராக நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. நண்பனா நடிக்கும் போது சண்டை, டூயட் மட்டும் இருக்காது. மற்றபடி, படம் முழுவதும் நானும் வருவேன். ஹீரோவாக நடிக்கும் போது சண்டை, டூயட் காட்சிகளிலும் நடிக்க வேண்டியிருக்கும்.
* சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும்பலருக்கும், நீங்கள் தானே முன் உதாரணம்?
சின்னத்திரையை பொறுத்தவரை, திறமையாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்பதுதான் உண்மை. டிவியில், நான் செய்த லொள்ளு சபா, சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சி, எல்லாருக்கும், ரீச் ஆயிடுச்சு. அதைத் தொடர்ந்து தான், சினிமா வாய்ப்பு வந்தது. சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு பலரும் வருவதற்கு, நான் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்திருக்கலாம்; ஆனால், நான் தான் காரணம் என, சொல்ல முடியாது.
* ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்குவதை விட,உங்களிடம் வாங்குவது ரொம்ப சிரமம் போலிருக்கே?
வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக, எல்லா படங்களையும் ஒத்துக் கொள்வது இல்லை. படத்தின் கதை, திரைக்கதை, அதில் எனக்குள்ள பங்கு என, எல்லாத்தையும் தெரிந்தபின் தான், புதிய படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன்.
* ஹீரோயின்களுக்கு பிரியாணி கொடுக்கும் ஆர்யா, உங்களுக்கும் கொடுப்பது உண்டா?
எனக்கு தெரிந்தவரை, ரம்ஜானுக்கு எல்லாருக்குமே பிரியாணி கொடுப்பான். கிட்டதட்ட, அவன் வீடு, நடிகர் சங்கம் மாதிரி ஜே, ஜே என, நிரம்பி வழியும். யாராவது விரும்பி கேட்டால், பிரியாணி தருவான். ஆர்யா வீட்டு பிரியாணி செமையா இருக்கும் என்று நானே தமன்னா கிட்ட சொல்லியிருக்கேன். அவங்க, அப்படியா?ன்னு கேட்டாங்க. இப்படிதான் நியூஸ் பரவுதே தவிர, ஆர்யா, துாக்குசட்டியில் பிரியாணி போட்டு, எல்லா நடிகைகளுக்கும் எடுத்துட்டு போகமாட்டான்.
* உங்களின் காமெடி, சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகிறதே?
யார் மனதையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதில், எப்போதுமே கவனமாக இருப்பேன். படங்களில் காமெடி சீனில் நடிக்கும்போது, மற்றவர்களின் மனம் கஷ்டப்படுகிறது மாதிரி பேசமாட்டேன்; கை தட்டுற மாதிரி தான் பேசுவேன். அதனால் தான், என்னுடைய காமெடி, ரசிகர்களின் மனங்களில் தொடர்ந்து நிற்கிறது.
கவுண்டமணி ரீ-என்ட்ரி ஆகிறார் தெரியுமா...?
அய்யோ, நான் அந்தப்படத்தை(49 ஓ) ரொம்பவே எதிர்பார்க்கிறேன். திரும்பவும் அவர் வருவது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.
இப்போது நீங்கள் நடிக்கும் படங்கள் பற்றி...?
VSOP - அய்யோ இது டிரிங்ஸ் இல்லிங்க. வாசுவும் சிவாவும் ஒன்னா படிச்சவங்க என்று ஒரு படத்தின் பெயர் தான் இது. ராஜேஷ் இயக்குகிறார். சிறுத்தை சிவா இயக்கும் படம் மற்றும் நான் ஹீரோவாக நடிக்கும் படம். இந்த மூன்று படங்களை முடித்த பிறகு தான் எனது அடுத்தப்படத்தை கமிட் பண்ணுவேன்.
* ரசிகர்களிடம் பாராட்டு பெற்ற டயலாக்.?
தேனடை, பட்டுக்குட்டி, தல தளபதி, நண்பேன்டா உள்ளிட்ட நிறைய டயலாக்குகள் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.
* லிங்காவில் சொல்ற ப்ராக்ஸ், இந்த வார்த்தை எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீங்க.?
ஷூட்டிங் ஸ்பாட்டில், வாங்க கிளம்பலாம், கிளம்புங்க காத்து வரட்டும் அது இது என்று பேசி பார்த்தோம். விடுறா ஜூட் பறக்கலாம் என்று கடைசியா ஒரு வார்த்தை வந்தது. இதை இன்னும் கொஞ்சம் மாற்றலாம் என்றார். ப்ரகாஸ் என்று சொல்லி பார்த்தோம், அதுவே ஓ.கே. ஆனது. அதை அப்படியே ஆங்காங்கே படத்தில் பயன்படுத்தி கொண்டோம். அதேமாதிரி தான் நண்பனை பற்றி சொல்லும்போது நண்பேன்டா எனும் வார்த்தை வந்தது. பிறகு அந்த வார்த்தை பெரிய அளவில் ரீச்சானது. சில வார்த்தைகள் ஸ்பாட்டில் அப்படியே வந்துவிடும்.
* தயாரிப்பாளராக நீங்கள் ஜெயித்துவிட்டீர்களா..?
என் முதல் தயாரிப்பு கண்ணா லட்டு தின்ன ஆசையா, பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த இரண்டு படமும் சூப்பர் ஹிட். அடுத்தப்படியாக இப்போது நான் முருகன் ஆனந்த் இயக்கத்தில், ஆஸ்னா சவேரி, அகிலா கிஷோர் கூட நடித்து கொண்டு இருக்கிறேன். இன்னும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. நிறைய புதுமுகங்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, பார்க்கலாம்.
* தமிழில் எந்த நடிகர் கூட நடிக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது?
நான் நிறைய ஹீரோக்களுடன் நடித்துவிட்டேன். ஆனால் இன்னும் கமல் சார் கூட மட்டும் நடிக்கவில்லை. விரைவில் அது நடக்கும், அதற்கான காலநேரம் வரும் என்று நம்புகிறேன், அதுவரை நான் காத்திருப்பேன்.
இவ்வாறு சந்தானம் கூறினார்.