டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அக்மார்க் கும்பகோணத்து தமிழர் ஆர்.பாலகிருஷ்ணன். இப்படி சொன்னால் யாருக்கும் தெரியாது. சீனி கம் பால்கி என்றால் பாலிவுட்டே திரும்பிப் பார்க்கும். அந்த அளவுக்கு தன் முதல் படத்திலேயே பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்தவர். அதன் பிறகு பா படத்தின் மூலம் உலக சினிமாவை, பாலிவுட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர். இப்போது தனது ஷமிதாப் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராக இருக்கிறார். பிப்ரவரி 6ந் தேதி ஷமிதாப் ரிலீசாகிறது. இளையராஜாவுடன் பின்னணி இசை பணிக்காக சென்னை வந்திருந்தவர் அளித்த சிறப்பு பேட்டி:
* இந்தியில் இசை ஜாம்பவான்கள் இருந்தபோதும் இளையராஜா இசையைத் தேடிவருவது ஏன்?
இளையராஜாவின் ஒவ்வொரு இசையும் எனக்குள் பொதிந்து கிடக்கிறது. அவரது பாடல்களால் எனது பொழுது விடிகிறது, முடிகிறது. 80களில் அவர் இசை குடித்து மயங்கிக் கிடந்தவர்களில் நானும் ஒருவன். இப்போதும் சொல்கிறேன். பின்னணி இசையில் அவரை மிஞ்ச இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே ஆள் இல்லை. நான் எடுக்கும் படங்களுக்கு உயிர் கொடுத்து நடமாட விடுகிறவர் அவர். பாவையும், சீனி கம்மையும் பார்த்துவிட்டு ரசிகர்கள் கண்ணீர் சிந்தியபடி வெளியே வந்தார்கள் என்றால் அவர்களை அழ வைத்தது நான் அல்ல, இளையராஜா. அவர் இல்லாமல் படம் இயக்குவது எனக்கு சாத்தியமே இல்லை.
* பி.சி.ஸ்ரீராமையும், அமிதாப்பையும் விட மறுக்குறீர்களே...?
முந்தைய கேள்வியில் இளையராஜாவுக்கு சொன்ன அத்தனை காரணங்களும் இந்த இருவருக்கும் பொருந்தும். பி.சியுடன் நிறைய விளம்பர படங்கள் செய்திருக்கிறேன். அந்த நட்பு சினிமாவிலும் தொடர்கிறது. என் கற்பனைக்குள் இருக்கும் காட்சிகளை 100 சதவிகிதம் திரையில் எடுத்து தருகிறவர் அவர். இளையராஜாவுக்கு பின்னணி இசைபோல பி.சிக்கு லைட்டிங் சென்ஸ். பா படத்தில் அமிதாப்புக்கு அதீத மேக்அப் கொஞ்சம் லைட்டிங் மிஸ் பண்ணினாலும் அருவருப்பாக இருக்கும். அதை அழகாக தந்தவர் பி.சி.
அதே மாதிரிதான் அமிதாப். என் கனவு நாயகன். மதிப்பு மிக்க கலைஞன். அவரது நடிப்பு பசிக்கான தீனியை இன்னும் யாரும் போடவில்லை என்றுதான் சொல்லுவேன். ஒரு இயக்குனர் என்ன நினைக்கிறாரோ அதுவாக மாறி வந்து நிற்கிறவர். ஒரு சூப்பர் ஸ்டார், சீனியர் இதெல்லாமே வெளி உலகத்துக்குத்தான் அவர் இன்னும் தன்னை புதுமுக நடிகராக நினைத்துக்கொண்டுதான் தினமும் படப்பிடிப்புக்கு வருகிறார்.
ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது குளிர்ந்த நீரில் அவர் குளித்து விட்டு நடுங்கிக் கொண்டே வருவதுமாதிரி சீன். 70 வயது தாண்டியரை ஊட்டி குளிரில் குளிக்க வைக்க முடியுமா? தண்ணீரை ஸ்பிரே அடித்துவிட்டு அந்த காட்சியை எடுக்க தீர்மானித்திருந்தோம் ஸ்பாட்டுக்கு வந்தவர் நிஜ குளிர் நீர் வேண்டும் என்று கேட்டு வாங்கி அதை தலையில் ஊற்றி நிஜமாகவே நடுங்கிக் கொண்டு நடித்தார்.
ஒரு காட்சியில் அழுக்காக சட்டை அணிய வேண்டும் ஒரு புதுசட்டையில் லேசாக மண்ணை தடவி கொடுத்தோம். "என்னையா நடிகனுக்குத்தான் மேக்அப் போடணும் சட்டைக்கு யாராவது மேக்அப் போடுவாங்களா?" என்ற அந்த சட்டையோடு தரையில் உருண்டு இன்னும் அழுக்காக்கிக் கொண்டு நடித்தார். அதுதான் அமிதாப். அதனால்தான் என் படங்களில் அவர் தொடர்கிறார்.
* உங்க ப்ராஜக்டுக்குள்ள தனுஷ் எப்படி வந்தார்?
ஆக்சுவலா இந்த கதையை அமிதாப்ஜிக்கிட்ட சொன்ன உடனே அவர் கேட்ட முதல் கேள்வி "அந்த நடிகர் கேரக்டரில் யார் நடிக்கிறாங்க" என்றார். நான் தென்னிந்தியாவிலிருந்து ஒருத்தர் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னேன். "யாருன்னு சொல்லுங்க" என்றார். ரஜினி இல்லேன்னா தனுஷ் என்றேன். சற்றும் யோசிக்காமல் "தனுஷ்கிட்ட பேசுங்க" என்றார். அவரின் அந்த ஒரு நொடி கணிப்பு படம் பூராவும் அற்புதமா தெரிஞ்சுது. ஷமிதாப் தனுசுக்கு பல உயரங்களை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
* அக்ஷரா ஹாசன் எப்படி?
என் வேலைகளை ரொம்ப சுலபமாக்கியவர். ரத்தத்துலேயே நடிப்பு இருக்கு. வேறென்ன வேணும்?. அவரை ஹீரோயின்னு தனித்து சொல்ல முடியாது. அமிதாப்ஜி, தனுஷ், அக்ஷாரா இந்த முணுபேரும்தான் கதையின் துருவங்கள் இவர்களுக்குள் நடக்கும் விஷயங்கள்தான் கதை. முதல் படத்துலயே கனமான கேரக்டரை சுமந்து வருகிறார் அக்ஷரா.
* ஒவ்வொரு படம் எடுக்கிறதுக்கும் நிறைய டைம் எடுத்துக்குறீங்களே?
நான் சினிமாவை வைத்து வியாபாரம் செய்யவில்லை. பணம் சம்பாதிக்கவில்லை. அதுக்கு எனக்கு வேறு துறைகள் இருக்கிறது. இதை சினிமாவா எடுக்கணுங்ற பொறி எனக்குள்ள விழணும். அது எப்போ விழும்னு எனக்கே தெரியாது. அந்த பொறி விழுந்துச்சுன்னா பேனாவை கையில எடுத்துடுவேன். அடுத்த 6 மாசத்துல கேமரா பக்கம் வந்திடுவேன்.
ஒருமுறை அமிதாப்ஜி வீட்டுக்குப் போனபோது. அபிஷேக் பச்சன் என்னிடம் "அப்பா குழந்தை மாதிரி சேட்டை பண்ணுகிறார். அவரை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு"ன்னு சொன்னார். அவர் கேசுவலாக சொன்ன அந்த ஒரு வரிதான் பா படத்துக்கான ஒன்லைன். அன்றைக்கு ராத்திரியே உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சேன். அமிதாப்ஜி குழந்தையாவும், அபிஷேக் அப்பாவாகவும் இருந்தா எப்படி இருக்கும்னு தோணின விஷயம்தான் பா.
* இளையராஜா இசையில் தேசிய கீதம் ஐடியா எப்படி வந்தது?
இளையராஜா இசையில் அமிதாப்ஜி ஷமிதாப்புக்காக ஒரு பாட்டு பாடினார். இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தால் சின்ன குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பது மாதிரி தெரியும். நேரம் காலம் தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இருவரும் காலங்காலமாக இணைந்து இருக்க ஏதாவது செய்யணுமே என்று யோசித்தபோது வந்ததுதான் தேசிய கீதம். 15 நிமிடங்களில் இசை அமைத்தார் இளையராஜா. அதை இருவருமே பாடினார்கள். அதைக்கேட்ட பி.சி.ஸ்ரீராம் சார், இதற்கு நான் விசுவல் தர்றேன் என்று சொல்லி இருவர் பாடுவதையும் படம் பிடித்து அதோடு சில காட்சிகளை இணைத்து ஆல்பமாக்கிவிட்டார்.
* தமிழ் படம் இயக்க மாட்டீர்களா?
கண்டிப்பா இயக்கணும்னு ஆசை இருக்கு. அதற்கான கதை அந்த கதைக்கான பொறி எனக்குள்ள விழுந்திச்சின்னா அடுத்த படம் தமிழ் படமாகக்கூட இருக்கலாம்.
* ஷிமிதாப் தமிழில் டப் ஆகுமா?
டப் செய்ய முடியாத படம் ஷமிதாப். ஆனால் ஷமிதாப்பை உணர மொழி பெரிய தடையாக இருக்காது. காரணம் வசனங்களை விட உணர்வும், இசையும் தான் பிரதானம். வேண்டுமானால் ரீமேக் செய்யலாம். படம் வந்தவுடன் ஆர்வமுள்ளவர்கள் யாராவது வந்தால் பார்க்கலாம்.