டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நான் உடல் நலக் குறைவாக இருப்பதாகவும், என்னை கவனிக்க ஆள் இல்லை என்றும், நடிகர் மன்சூர் அலிகான் சொல்லியிருப்பவை அவருடைய உணர்வு. என் மீது அவர் கொண்டுள்ள அதீத அன்பே காரணம், என, நடிகை மனோரமா, 71, கூறினார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து, ஆச்சி என, சினிமா துறையினரும், ரசிகர்களும் அழைக்கும் நடிகை மனோரமா, முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.சில மாதங்களுக்கு முன், குளியலறையில் வழுக்கி விழுந்ததில், மூட்டு வலியாலும், சிறுநீரக பாதிப்பாலும் அவதிப்பட்டு வந்த அவருக்கு, உடல் நிலை மேலும் மோசமடைந்தது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அவருக்கு, சிறுநீரகக் கோளாறுக்காக, டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன், தன் மகள் திருமணத்துக்காக, அழைப்பிதழ் கொடுக்க, நடிகர் மன்சூர் அலிகான், மனோரமா வீட்டுக்குச் சென்றார்.
அங்கிருந்து திரும்பிய அவர், மனோரமா உடல் நிலை குறித்து கூறியதாவது: மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, ஆச்சி வீட்டுக்குச் சென்றேன். அவர் உடல் நிலையை பார்த்து கலங்கி விட்டேன். முகம் வீங்கி இருந்தது. சிறுநீரக பாதிப்பால் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அடிக்கடி, டயாலிசிஸ் செய்ய வேண்டும். ஆனால், அதைக்கூட செய்யாமல் விட்டு இருக்கின்றனர். அந்த பாதிப்பும் அவரை கூடுதலாக வாட்டிக் கொண்டிருக்கிறது. அவருக்கு, சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்தால், நீண்ட காலம் வாழ்வார். அவருக்கு கோடி கோடியாக சொத்துகள் உள்ளன. ஆனால், அவரை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க யாரும் இல்லை.இப்படி சொல்வதால், என் மீது பலருக்கு வருத்தம் ஏற்படலாம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.திரைத் துறையினராவது, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மன்சூர் அலிகான் அளித்த தகவல் குறித்து, தினமலர் நாளிதழுக்கு மனோரமா அளித்த பேட்டி: எனக்கு உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் பலர் என் மீது பரிவும், பாசமும் வைத்திருக்கின்றனர். அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான் என் மேல், அன்பும் மரியாதையும் கொண்டவர்.அவர் தன் மகள் திருமணத்துக்காக, அழைப்பிதழ் கொடுக்க வீட்டுக்கு வந்தார். அப்போது என் நிலையைப் பார்த்து விட்டு மனம் நொந்து போய் விட்டார். ஆச்சி, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்; நீங்கள் தைரியமாக இருங்கள் என்று, திரும்ப திரும்பச் சொன்னார். அது எனக்கு ஆறுதல் அளித்தது.என் உடல் நிலை மற்றும் உடல் உபாதைகள் குறித்தும், எனக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், அவர் கேட்டறிந்து வருத்தப்பட்டார். இத்தனை இருந்தும், நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்... எனச் சொல்லி, வருந்தினார்.அதைத் தான், வெளி யே சொல்லி விட்டார் என, நினைக்கிறேன்.
மன்சூர் அலிகான் சந்தித்து சென்ற பின், என் உடல் நிலை கொஞ்சம் தேறி இருப்பதாக உணருகிறேன்.முன்னை விட இப்போது, முக வீக்கம் குறைந்திருப்பதாகவே உணருகிறேன். கை, கால்களிலும் இருந்த வீக்கம் கொஞ்சம் வடிந்திருக்கிறது. நடக்க முடியாமல் கஷ்டப்பட்டேன்; இப்போது நடக்கிறேன்.சிகிச்சைகள் குறித்தெல்லாம் விளக்கமாக சொல்ல முடியவில்லை. இதனால், எனக்கு ஏதோ சிக்கல்கள் இருப்பதாக நினைக்க வேண்டாம். முன்பைப் போல என்னால், எதையும் நினைத்ததும் செய்ய முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே, 24 மணி நேரமும் முடங்கிக் கிடக்கிறேன்.திடீர் திடீர் என, உடம்புக்கு ஏதோ செய்வதால், ஒரே இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறேன். 24 மணி நேரமும், டிவி தான் என் ஒரே பொழுது போக்கு.என்னோடு நடித்தவர்கள், என்னை சினிமாவில் பார்த்து, என் நடிப்பை ரசித்தவர்கள் என, சினிமா உலகத்திலேயே நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே, என்னை வந்து சந்தித்து நலம் விசாரித்தனர்.
என் குறைகளை அவர்கள் நொடியில் தீர்த்து விட முடியும். அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமும், மனமும் இருக்க வேண்டும்.என் உடல் நிலை குறித்து நேரில் வந்தோ, போனிலோ விசாரித்தவர்களைக் காட்டிலும், ரசிகர்கள் எனக்கு எழுதும் கடிதங்கள் தான் ஆறுதல். இந்த கடிதங்கள் தான், நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்.நடிகை சாவித்திரி கூட, கடைசி நாட்களில், இதைத் தான் சொன்னார்.நிறைய பேச நினைக்கிறேன். அதில், எதைச் சொல்வது; எதை விடுவது என தெரியவில்லை. சொல்ல நினைப்பதை மறந்தும் விடுகிறேன நான், நிறைய பேரை சந்திக்க ஆசைப்படுகிறேன். அவர்கள் என்னை சந்திப்பரா என தெரியவில்லை. இவ்வாறு, மனோரமா கூறினார்.