மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஒரு காலத்தில் வெளிநாட்டிற்கு சென்று படம் எடுத்தால் அதுவே பெரிய சாதனை. சிவாஜியின் சிவந்த மண், எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், கமலின் நினைத்தாலே இனிக்கும், ரஜினியின் ப்ரியா, ஜெய்சங்கரின் ஒரே வானம் ஒரே பூமி போன்றவை வெளிநாட்டில் எடுக்கப்பட்டதற்காகவே ஓடிய படங்கள். அதன் பிறகு வெளிநாட்டிற்கு பாடல் காட்சிகளை எடுக்கச் செல்வது சர்வசாதாரணமாகி விட்டது. ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் போன்ற இயக்குனர்கள் உலகம் முழுதும் உள்ள அழகான இடங்களைத் தேடிப் போய் படம் எடுத்து வருகிறார்கள்.
வெளிநாட்டு படங்கள்
இப்போது முழு திரைப்படமும் வெளிநாட்டில் எடுப்பது அதிகரித்துள்ளது. அந்தந்த நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியோடு அந்தப் படங்கள் உருவாகி வருகிறது. டிஜிட்டல் சினிமா வந்த பிறகு சினிமா சிம்பிளாகி விட்டதால் சினிமா கனவுகளோடு வெளிநாட்டில் இருக்கும் கலைஞர்களுக்கு இப்போது சொந்த சினிமா சாத்தியப்பட்டிருக்கிறது.
கூட்டு தயாரிப்பு
பத்து பதினைந்து பேர் ஒன்றாக சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள். சொந்தமாக ஒரு ரெட் ஒண் கேமரா வாங்கிக் கொள்கிறார்கள். வார இறுதியின் விடுமுறை நாட்களில் அவர்களில் ஒருவர் இயக்க, மற்றவர்கள் நடிக்க. தனித்தனி வேலைகளை செய்து கொண்டு ஒரு படத்தை தயாரித்து விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் வேலை இல்லாமல் இருக்கும் சில நடிகர்கள், இயக்குனர்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இங்கு உள்ள சில இயக்குனர்கள் அங்கு சென்று அவர்களுக்காக படம் இயக்கிக் கொடுக்கிறார்கள். படத்தை எடுத்து முடித்து விட்டு இங்கு வந்து சென்சார் செய்து வெளியிடுகிறார்கள். ஓடுகிறதோ இல்லையோ தங்கள் சினிமா கனவு நிறைவேறிய மன நிறைவோடு நாடு திரும்புகிறார்கள்.
ரிலீசான படங்கள்
இர்பான் நடித்த எதிர்வீச்சு என்ற படம் மலேசியாவில் தயாரானது. அங்கு சூதாட்டம் போன்று நடக்கும் இண்டோர் புட்பால் பற்றிய படம் இது. மலேசியாவில் நீண்ட தூரம் பயணம் செய்யும் ஒரு ரெயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து விரட்டு என்ற படத்தை எடுத்தார்கள். இந்த இரண்டு படங்களும் ரிலீசாகிவிட்டது. தற்போது தயாரிப்பில் உள்ள சில படங்கள் பற்றி பார்க்கலாம்.
மணல் நகரம்
ஒரு தலை ராகம் படத்தில் அறிமுகமான நடிகர் சங்கர் மணல் நகரம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இது துபாயில் நடக்கும் கதை. அங்கு வாழும் தமிழர்களுக்கு இடையே நடக்கும் ஒரு காதல் கதை. துபாய் வாழ் தமிழர்களும், மலையாளிகளும் நடித்துள்ளனர்.
திருந்துடா காதல் திருடா
அசோக் ஆர். நாத் என்ற மலையாள இயக்குனர் இயக்கும் படம். இது சவூதி அரேபிய நாட்டில் உள்ள 7 மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் தமிழ் மற்றும் மலையாள மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது. அங்கு வாழும் மக்களே நடித்துள்ளனர். மலையாள நடிகர் முகேஷ், கொச்சு பிரமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
சேர்ந்து போலாமா
மலையாளத்தில் 40 படங்களுக்கு மேல் இயக்கி உள்ள அனில்குமார் இயக்கியுள்ள படம் சேர்ந்துபோலாமா. இது நியூசிலாந்தில் எடுக்கப்பட்டுள்ள படம். விநய், மதுரிமா, ப்ரீத்தி பால், தம்பி ராமையா, தலைவாசல் விஜய் நடித்துள்ளனர். நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்ட சசிதரன் என்பவர் தயாரித்திருக்கிறார். நியூசிலாந்தில் பிறந்த வளர்ந்த தமிழ் நண்பர்கள் ஒரு சுற்றுலாவுக்கு செல்லும்போது சந்திக்கும் அதிர்ச்சி சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
விளம்பரம்
ராமானுஜன் படத்தில் நடித்துள்ள ஜெமினி கணேசன், சாவித்ரி தம்பதிகளின் பேரன் அபிநவ் ராமானுஜன் படத்தில் நடிப்பதற்கு முன்பு நடத்துள்ள படம் விளம்பரம். அட்டகத்தி ஐஸ்வர்யாவும் நடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு விளம்பர படம் எடுக்கச் செல்லும் ஒருவன் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
ஐ லவ் மலேசியா
நடிகர் ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்து வரும் படம் ஐ லவ் மலேசியா. தலைநகர் கோலாலம்பூருக்குள் புகுந்துள்ள ஒரு தீவிரவாத கூட்டத்தை அங்கு போலீசாக இருக்கும் தமிழர்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்கிற கதை. படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இதுதவிர வின் என்ற படத்தையும் மலேசியாவிலேயே எடுத்து வருகிறார் ஜெய் ஆகாஷ். தி.நகர், அகம் புறம் படங்களை இயக்கிய திருமலை மலேசிய நண்பர்கள் என்ற படத்தை மலேசியாவில் எடுத்து வருகிறார். சென்னை டூ சிங்கப்பூர் என்ற படம் சிங்கப்பூரில் தயாராகி வருகிறது.
கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், நார்வே ஆகிய நாடுகளிலும் முழுநீள தமிழ் திரைப்படங்கள் தயாராகி வருகிறது. லோக்கேஷன்களுக்கு மிக குறைந்த கட்டணம் (சில நாடுகள் இலவசமாகவே கொடுக்கும்), பெப்சி பிரச்னை இல்லை. அதிக செலவு இல்லை. இதனால் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள். தாங்களே சொந்தமாக படம் எடுத்து தங்கள் சினிமா தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.