ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்துக்கு பெரிய பிரேக்காக அமைந்தது போன்று, அதன் ரீமேக் படம் எனக்கும் பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் படம் தோல்வியடைந்து எனக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது என்கிறார் நடிகர் தமன். தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி...
* சினிமாவுக்குள் வந்தது பற்றி?
நடிகனாக வேண்டும் என்பது கனவு. அதனால் மனசு நிறைய கனவுகளுடன் மதுரை மேலமாசி வீதியில் இருந்து சென்னை பட்டணத்தை நோக்கி வந்தேன். அப்போது எடுத்த முயற்சியின் பலனாக ஆச்சர்யங்கள் என்ற படத்தில் ஹீரோவானேன். அப்படம் வித்தியாசமான கதைதான். என்றாலும், மிகச்சிறிய பட்ஜெட்டில் தயாரானது. அதனால் பெரிய அளவில் அது ரீச் ஆகவில்லை. ஆனால், அந்த படத்தில் எனது நடிப்பைப்பார்த்து விட்டுதான், சட்டம் ஒரு இருட்டறை, சும்மா நச்சுன்னு இருக்கு படங்களில் நடிக்க சான்ஸ் கிடைத்தது.
* சட்டம் ஒரு இருட்டறையில் நடிக்க கமிட்டானபோது உங்களது எதிர்பார்ப்பு எப்படி இருந்தது?
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், விஜயகாந்த் 1981ல் நடித்த படம். பள்ளியில் படிக்கிற காலத்தில் பலமுறை அப்படத்தை பார்த்திருக்கிறேன். அதனால், அப்படத்தின் ரீ-மேக்கில் நான் நடிக்கப்போகிறேன் என்றதும் ரொம்ப சந்தோசப்பட்டேன். காரணம், அதிரடியான ஆக்சன் படங்கள்தான் நடிகர்களுக்கு பிரேக்காக அமையும். அதனால், விஜயகாந்தைப்போல் நமக்கும் அப்படம் பிரேக் கொடுக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அப்படத்தில் நடித்தேன். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. எனக்கும் பிரேக் கிடைக்கவில்லை. அதனால் பெரிய அளவில் ஏமாற்றமடைந்தேன். இருப்பினும் அடுத்தது நடிக்கிற படங்களில் பிரேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனதை தேற்றிக்கொண்டு இப்போது வித்தியாசமான கதை தேடலில் ஈடுபட்டிருக்கிறேன்.
* தொட்டால் தொடரும் படத்தில் எந்த மாதிரி ரோலில் நடிக்கிறீர்கள்?
அது ஒரு ஆக்சன் த்ரில்லர் படம். நாயகியாக வெளுத்துக்கட்டு அருந்ததி நடிக்கிறார். அவரைச்சுற்றித்தான் கதை நகரும். ஒரு சிக்கலில் மாட்டியிருக்கும் அவரை காப்பாற்றும் வேடத்தில் நான் நடித்துள்ளேன். இந்த படத்தில் இருவரை நடித்ததை விட நடிப்பில் இன்னும் ஸ்கோர் பண்ணியிருக்கிறேன். அதற்கான வாய்ப்புகளும் இந்த படத்தில் கிடைத்தது. கேபிள் சங்கர் இயக்கியுள்ள இந்த படம் ஜூலை அல்லது ஆகஸ்டில் திரைக்கு வரும். அதன்பிறகு வித்தியாசமான கதைகளில் நடிக்க இயக்குனர்கள் கண்டிப்பாக என்னை அழைபபார்கள்.
* எந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறீர்கள்?
இப்போதைக்கு இந்த மாதிரி கதைகளில்தான் நடிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் என்னிடம் இல்லை. வருகிற கதைகளில் எது நல்லது என்று படுகிறதோ அந்த கதைகளில் நடிக்கிறேன். மேலும், இப்போதைய ரசிகர்கள் சினிமாவை சினிமாவாக பார்க்கும் மனநிலைக்கு வந்து விட்டார்களாம். அதனால் படத்துக்குப்படம் பாசிட்டீவ் கேரக்டர்களில்தான் நடிப்பேன் என்றில்லை. வித்தியாசமான கோணத்தில் என்னை வெளிப்படுத்தும் நெட்டீவ் கேரக்டர்கள் கிடைத்தாலும் நடிப்பேன். இப்போதைக்கு எனது நூறு சதவிகித நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய சேலஞ்சிங்கான கதைகளைத்தான் தேடுகிறேன்.
* விஜயசேதுபதி போன்று கேரக்டர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும ஐடியா உள்ளதா?
இப்படித்தான் ஹீரோ இருக்க வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. அதை உடைத்தெறிந்த நடிகர் விஜயசேதுபதி என்று நினைக்கிறேன். அவரது கதைத் தேர்வு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் யாருமே நம்பாத குறும்பட டைரக்டர்களை நம்பி நடித்து பல ஹிட்களை கொடுத்த விஜயசேதுபதி இப்போதைய நடிகர்களில் என்னை அதிகம் கவர்ந்தவர். அவரைப்போன்று நல்ல கதைகளுடன் குறும்பட டைரக்டர்கள் என்னை அணுகினாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். இபபோதெல்லாம் புதிதாக வருபவர்களிடம் நல்ல பயர் உள்ளது. புதுமையாக சிந்திக்கிறார்கள். சினிமாவுக்கென்று இத்தனை காலமும் இருந்துவந்த பார்முலாவில் இருந்து விடுபட்டு புதிய பாதையில் யோசிப்பது வரவேற்கத்தக்கது. அதற்கு ரசிகர்களும் வரவேற்பு கொடுப்பதால்தான் விஜயசேதுபதி நடிக்கிற படங்கள் அனைத்துமே ஹிட்டடித்து வருகிறது. அதனால் புதுமையான கதைகளில் நடித்து புதுமையான நடிகனாக சினிமாவில் இடம் பிடிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளேன்.
* சிங்கிள் ஹீரோ கதைகளில் மட்டும்தான் நடிப்பீர்களா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. மல்டி ஹீரோ கதைகளில் நடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலர் ஒரே படத்தில் நடிப்பது போன்று நம்ம ஊரிலும் இப்போதுதான் ஏற்பட்டு வருகிறது. இது தொடர வேண்டும். நானும் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும், மலையாள நடிகர் ப்ருத்விராஜ், அங்கு பெரிய ஹீரோதான். ஆனபோதும் தமிழில் ஹீரோவாக, வில்லனாக, கேரக்டர் ஆர்டிஸ்டாக பல படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல், என்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்ளாமல் மாறுபட்ட நடிகனாக, எல்லாவிதமான கதாபாத்திரங்களில் நடித்து என்னை ப்ரூப் பண்ணவே விரும்புகிறேன். அதனால் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க எப்போதுமே தயார் நிலையில் உள்ளேன்.
* ப்ருதிவிராஜ் நடித்ததில் உங்களை கவர்ந்த படம் எது?
ஸ்ரீகாந்துடன் இணைந்து அவர் நடித்த கனா கண்டேன் படம் ரொம்ப பிடிக்கும். அதாவது வழக்கமான சராசரியான வில்லனாக இல்லாமல் மிரட்டலான வில்லனாக நடித்திருப்பார். அவரது பார்வை, நடை உடை என ஒவ்வொன்றும் புதுமையாக இருக்கும். வில்லன் என்றாலும் சண்டை போட வேண்டும் கத்தி பேச வேண்டும் என்ற பார்முலாவை உடைத்து சத்தமே இல்லாமலும் வில்லத்தனம் பண்ண முடியும் என்பதை நிரூபிக்கிற வேடத்தில் நடித்திருந்தார். ஒவ்வொரு சீனும் அதிரடியாக இருக்கும். சத்தமாக பேசகூட மாட்டார். ஆனால் அவர் வந்தாலே அந்த சீன் பயமாக இருக்கும். அப்படியொரு பயங்கரமான வில்லனாக நடித்திருந்தார். அந்த மாதிரியான நடிப்பை ரசிப்பதோடு, அதுமாதிரி பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய கேரக்டர்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
* தற்போதைய தமிழ் நடிகைகளில் உங்களை கவர்ந்த நடிகை யார்?
நான் கல்லூரி படிக்கும்போதில் இருந்தே த்ரிஷா, அனுஷ்கா ஆகிய இரண்டு பேருமே எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் த்ரிஷா, முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோன்ற தனது அழகை இன்றுவரைக்கும் பராமரித்து வருகிறார். சில படங்களில் அவரது நடிப்பை ரொம்பவே ரசித்திருக்கிறேன். அதேபோல், அனுஷ்காவும் நான் பார்த்து வியந்த நடிகைதான். அருந்ததி படத்தில் ஹீரோக்களைப்போனற வெயிட்டான கதாபாத்திரத்தை தனது தோளில் சுமந்தவர். இப்போது ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி என சரித்திர படங்களின் நாயகியாக நடிக்கிறார். இதற்கெல்லாம் நிறைய மெனக்கெடல் வேண்டும். அந்த வகையில், நடிப்பு மட்டுமின்றி அழகாலும் என்னை கவர்ந்த நடிகை அனுஷ்கா. அவரது சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போதுவரை நான் அவருடைய தீவிரமான ரசிகனாக இருக்கிறேன்.
* உங்களது பேவரிட் ஹீரோயினிகளுடன் டூயட் பாட வேண்டும் என்ற கனவு இருக்குமல்லவா?
அவர்களுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தால் அதை விட சந்தோசம் எதுவுமே கிடையாது. ஆனால் நான் இப்போதுதான் வளர்ந்து வரும் ஹீரோ. அவர்களோ வளர்ந்து நிற்கும் ஹீரோயினிகள் அதனால் அவர்களுடன் இணைவது என்பது அத்தனை எளிதான விசயமல்ல. அதனால் அவர்களுக்கு ரசிகனாக இருப்பதே போதும் என்று நினைக்கிறேன் என்கிறார் தமன்.