பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் சினிமாவில் இவர் எடுத்தது இரண்டே படங்கள் தான். கற்றது தமிழ்... வேலைவாய்ப்பில்லாத இளைஞனின் உண்மையான சமூகத்தை வெளிப்படுத்தியிருக்கும். தங்கமீன்கள்... குழந்தைகளின் உலகத்தை, புதுமையாக கையாண்ட விதம்... சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளை குவித்தது. கோவாவில் நடந்த இந்தியன் பனோரமாவில், தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப்படம். தங்கமீன்கள். ஐதராபாத்தில் நடந்த 54வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில், 'கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளின் உலகத்தை படம் பிடித்த சிறந்த படம்' என்று, பாராட்டப்பட்டது, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த கவுரவம். மதுரை வந்த ராம் அளித்த சிறப்புப் பேட்டி:
* முதல் இரண்டு படங்களுமே சமூகப் பிரச்னைகளை சொல்கின்றன. 'தரமணியும்' அதேபோல் தானா? அல்லது வணிகப்படைப்பா?
சென்னையில் உள்ள தரமணி என்ற இடம், கிராமமாக இருந்து, இன்று உலக வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு நடக்கும் ஆண், பெண் விஷயங்களை படமாக்கி
வருகிறேன். ஐ.டி., பி.பி.ஓ., துறையைப் பற்றி தனியாக எதுவும் சொல்லவில்லை. ஆண், பெண் உறவில், காதல் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் காணப்படும் ஈகோ, ஆளுமை, வாழ்க்கை நடைமுறை போன்ற உறவு சிக்கல்கள், படத்தில் இடம்பெறும். பணம் தேவைப்படும் போது, வணிகரீதியான படங்களையும் எடுப்பேன்.
* சினிமா என்றாலே காதல் தானா?
சினிமாவிற்கு இதுதான் என்று விதிவிலக்கு இல்லை. எனக்கு காதல், காமெடி, ஆக்ஷன், ஜனரஞ்சகமான படங்கள் பிடிக்கும். மக்களுக்கு பிடிப்பதை, சினிமா வெவ்வேறு கோணங்களில் தருகிறது. 'மாஸ் ஹீரோ' நடிகர்கள், மக்களுக்கு பொழுதுபோக்கைத் தருகின்றனர். ஷாரூக் கானுக்கு நானும் ஒரு ரசிகன். அவரிடம் ஆட்டோகிராப் வாங்க விரும்புகிறேன்.
* உங்களின் அடுத்த படத்திற்கான 'மாஸ் ஹீரோ' யார்?
சிம்பு, அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியின் பெயர்கள், நினைவில் இருக்கிறது. அந்த கனவுப்படத்திற்கான கதை உருவாகும் போது... பட்ஜெட் தயாராக இருக்கும் போது... கதைக்கேற்ற ஹீரோவைத் தேர்வு செய்வேன்.
* தங்கமீன்கள்... கதைக்களம் உருவானது எப்படி?
நானும் என் மகளும் அடிக்கடி போனில் உரையாடுவதை அடிப்படையாக கொண்ட கதை. கதைக்களத்திலும் அவளுடன் விவாதித்தேன். இது, குழந்தைகளைப் பற்றி, பெரியவர்கள் பார்க்க வேண்டிய படம். குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை, குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டிய படம்.
* தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பது?
வில்லன் இல்லாத படங்கள் வரவேண்டும். தமிழ் சினிமா வரலாற்றில், அப்படி 50 படங்களை பட்டியலிடலாம். பாலு மகேந்திராவின் வீடு, சந்தியாராகம், உதிரிப்பூக்கள், மூன்றாம் பிறை படங்களைச் சொல்லலாம்.
* அப்படியானால், மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது, பொருந்தாத சண்டைக்காட்சிகளும் தேவையில்லை தானே?
வில்லன் இல்லாமல் ஒரு படத்தை உருவாக்குவது கடினம். வில்லனை மையப்படுத்தி தான், கதையே உருவாகிறது. இதைத்தாண்டி சிந்திக்கும் போது தான், மனிதர்களின் உண்மையான மனச் சிக்கல்கள் தெரியவரும். வில்லன் இல்லாத படங்கள், அதிகமாக வரவேண்டும், என்பது தான் ஆசை. டூயட்டோ, சண்டைக்காட்சிகளோ ரசிக்கும் படியிருந்தால், பார்க்க வேண்டியது தான்.
* சமீபத்தில் ரசித்த படம்?
வருத்தப்படாத வாலிபர் சங்கம். சமகால அரசியல் பிரச்னைகளை, சமூகத்தில் நடக்கும் காதல் கவுரவக் கொலைகளை, எளிமையான நகைச்சுவையோடு கலந்து தந்திருப்பது தான்.
* மீண்டும் நடிப்பீர்களா?
தயாரிப்பாளர் கவுதம் மேனன் சொன்னதால் நடித்தேன். அந்த நடிப்புக்கு ஓகே. கதை வசனம், திரைக்கதை எழுதுபவர்களால், நன்றாக நடிக்க முடியும். ஆனால், அடுத்தவர் கதைக்கு, என்னால் நடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. தயாரிப்பாளர் விருப்பப்பட்டால், நடிகனாகத் தயார்.