ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'ரத்தமும், சத்தமும் நிறைந்த மனிதர்களின் மத்தியில், குரோதமும், கோபமும் கொண்ட ஒரு குடும்பத்தின் பாசத்தையும், பகையையும்,' இதுவரை பார்க்காத வகையில், திரையில் காட்டி இயக்குனர் விக்ரம் சுகுமாறன், தன் முதல் படத்திலேயே, முத்திரை பதித்துவிட்டார். சத்தமில்லாமல் வந்து, வசூலில் சாதனை படைத்த 'மதயானைக் கூட்டம்' படத்தின் இயக்குனர் என்ற பெருமையோடு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை பூர்வீகமாக கொண்ட, இந்த மண்ணின் மைந்தனாய் பளிச்சிடுகிறார் விக்ரம் சுகுமாறன்.
அறிமுகங்களை கொண்டு அத்தனை கதாபாத்திரத்தையும் அடைத்து, தன் திரைக்கதை தான் திரும்பி பார்க்க வைக்கும் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும், மெனக்கெட்ட அவரின் உழைப்பு, பாலு மகேந்திராவின் மாணவர் என்பதற்கு, பாராட்டு பத்திரம். பாலுமகேந்திராவின் படைப்புகளான 'அது ஒரு கனாக்காலம், ஜூலி கணபதி'யில், உதவி இயக்குனராக பணியாற்றி, மதயானைக்கூட்டத்தில் கர்ஜித்த அவரை, காரைக்குடியில் சந்தித்தபோது...
* இத்தனை புதுமுகங்களா? எப்படி வந்தது தைரியம்?
கதாபாத்திரம் என்றாலும், தந்தை, மகன் என வரும் போது, ஒரே மாதிரியான 'சாயல்' இருக்க வேண்டும். வெற்றி படத்திற்கு, மொழி முக்கியம்; அதனால்தான், புதுமுகம் என்பதை விட, மண்ணுக்கு சொந்தக்காரர்களை தேர்வு செய்தேன். நடித்த பெரும்பாலானோர், தேனி, உசிலம்பட்டி, மதுரையைச் சேர்ந்தவர்கள்.
* தென்மாவட்டம் என்றால், 'ரத்த பூமி' தானா?
வடக்கில் வசிப்பவர்கள், திருச்சியை தாண்டினாலே, அரிவாள், வேல்கம்பு, வெட்டு, குத்து என்று தான் நினைக்கின்றனர். செம்மண் என்றாலே ரத்த நிறம்தானே.
* நீங்கள் ஏன், தென்மாவட்ட களத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?
தென் மாவட்டத்தில் தான், வாழ்க்கை, கலாசாரம் புதைந்துள்ளது. சென்னையில், அதை பார்க்க முடியாது. அதுமட்டுமன்றி, நான் பிறந்த ஊர், என் வீடு, நான் அறிந்த மக்களை பதிவு செய்ய வேண்டும், என நினைத்தேன்.
* எழுத்தாளரை, வில்லனாக்கிட்டீங்களே?
எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, கலைக்குழு நடத்தி வருகிறார். சென்னையிலிருந்து ஒருவரை அழைத்து வருவதை விட, இப்பகுதியை புரிந்தவரை நடிக்க வைப்பது எளிது என நினைத்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு, அவரை தவிர வேறு யாரையும் எனக்குத் தோன்றவில்லை. அவர் எழுதிய 'கூட்டாஞ்சோறு' நாவலை 50 முறையாவது படித்திருப்பேன். அவரது ரசிகன் என்பதால், உடனே 'டிக்' செய்தேன்.
* தயாரிப்பாளர் ஜீ.வி.,யை பாடலுடன் முடித்துவிட்டீர்களே?
'நான் தயாரிக்கும் படத்தில், நானே இசையமைத்தால் நன்றாக இருக்காது,' என, ஜீ.வி.பிரகாஷ் கூறிவிட்டார். அவரது உதவியாளர் ரகுநந்தனுக்கு வாய்ப்பளித்தார். நானும், அவரும் வாய்ப்பிற்கு ஒன்றாய் அலைந்தவர்கள் என்பதால், படத்திற்கு ஏற்ப இசை கிடைத்தது.
* பாலு மகேந்திரா பற்றி...?
இந்த கதையை தேர்வு செய்ய காரணமே அவர் தான். தன்னிடம் வரும் உதவியாளரை, தகுதியானவராக மாற்றாமல் விடமாட்டார். அவருக்காகவே, ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற முடிவில் தான், மதயானைக்கூட்டம் உருவாக்கினேன். படத்தை பார்த்த பின், “பரவாயில்லை, மற்றவர்கள் மாதிரி இல்லாமல், நானும் உன்னை என் உதவியாளர் என சொல்லிக் கொள்ளலாம்,” என, பாராட்டினார். அவரிடம் நிறைய ஆலோசிக்க வேண்டும் என்ற ஆசை, நிறைவேறாமல் போய்விட்டது.
* 'காமெடி டிராக்' அமைக்க விரும்பவில்லையா?
மதயானைக் கூட்டம், மண்சார்ந்த படம். கதையோடு சேர்ந்த, பேச்சு வழக்கில் வரும் காமெடி போதும் என நினைத்தேன். கதையை விட்டு காமெடி வெளியே சென்றால், விறுவிறுப்பு குறைந்துவிடும்.
* அடுத்த படைப்பை, எப்போது எதிர்பார்க்கலாம்?
கதைக்கான 'டிஸ்கஷன்' நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அறிவிப்பு வரும், எனக்கூறி, நம்மிடம் விடைபெற்றார்.