ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமானவர் அருந்ததி. முதல் படத்திலேயே கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால், நடிப்பில் முத்திரை பதித்தார். ஆனால், அடுத்தடுத்து அவரது திறமையை மெருகேற்றும் கதைகள் அமையவில்லை. அதனால், சிறந்த பர்பாமென்ஸ் நடிகை என்ற இடத்தை பிடிக்க வேண்டிய அருந்ததி மார்க்கெட்டில் பின்தங்கியே நிற்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு...
* கதைகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
தமிழுக்கு வரும்போது முன்னணி நடிகையாக வேண்டும் என்று நினைத்த நான், முதல் படத்திலேயே கதிர் என்ற புதுமுக நடிகருடன்தான் நடித்தேன். ஆனால், மிகப்பெரிய டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்த படம் என்பதால், நல்லதொரு என்ட்ரி கிடைக்கும் என்று அப்படத்தில் நடித்தேன். அதில் ஹீரோவை விட எனக்குத்தான் முக்கியத்துவமும் இருந்தது. இருப்பினும் படம் வெற்றி பெறாததால் அதன்பிறகு நான் எதிர்பார்த்தது போன்ற படங்கள் கிடைக்கவில்லை. அதனால், கிடைக்கிற படங்களில் நல்லதாக தேர்வு செய்து நடித்து வருகிறேன்.
* வெளுத்துக்கட்டு படத்தில் நடித்தபோது, விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்றீர்களே அதற்காக முயற்சி எடுத்தீர்களா?
விஜய் பெரிய நடிகர். அவருடன் நடிக்க வேண்டுமென்றால் நானும் ஓரளவு பெரிய நடிகையாக இருக்க வேண்டும். ஆனால், அடுத்தடுத்து எனக்கு பெரிய அளவிலான படங்கள் கிடைக்கவில்லை. போடி நாயக்கனூர் கணேசன், சுண்டாட்டம், நேற்று இன்று போன்ற படங்களில்தான் நடித்தேன். இந்த படங்களும் வெற்றி பெறவில்லை. அதனால் விஜய்யுடன் நடிக்கிற ஆசைகளை தற்காலிகமாக தள்ளி வைத்து விட்டேன்.
* நேற்று இன்று படத்தில் அதிக கிளாமராக நடித்தது பற்றி?
அது அதிகமான கிளாமர் கிடையாது. தண்ணீருக்குள் மூழ்கியபடி காட்சி அமைக்கப்பட்டதால் அப்படி தெரிந்தது. மேலும், அந்த கதாபாத்திரம் ஒரு மார்க்கமானது. அதற்கேற்றபடி நடிப்பை வெளிப்படுத்தினேன். மேலும், காட்சிகளை ஆபாசமாக படமாக்கி விட்டது போன்று தெரிந்ததால், அப்பட டைரக்டரிடம் நான் கேட்டுக்கொண்ட பிறகு அதிகப்படியான காட்சிகளை கத்தரித்து விட்டார்கள்.
* அதையடுத்து கிளாமர் அல்லாத வேடங்களாக மட்டுமே நீங்கள் தேடிப்பிடித்து நடிக்கிறீர்களாமே?
ஆமாம், எந்தமாதிரியான வேடங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்கிற பிறகு எதற்காக உடம்பைக்காடடி நடிக்க வேண்டும் என்று நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள படங்களாக தேடிப்பிடித்து நடித்து வருகிறேன. அந்த வகையில், வி.சேகர் இயக்கத்தில் நடிக்கும் சரவண பொய்கை படத்தில் அருமையான வேடம் எனக்கு. மிகப்பெரிய டைரக்டர் என்பதால் காதல் மற்றும் குடும்ப பிரச்னைகளை அழகாக படமாக்கியிருக்கிறார். அதில் அவரது மகன் காரல்மார்க்ஸ் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருப்பதுபோல், எனக்கும் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற வெறி இருப்பதால், இருவருமே போட்டி போட்டு நடித்துள்ளோம். ஆக, எங்கள் இருவருக்குமே சரவண பொய்கை படம் பெரிய திருப்புமுனையாக அமையும்.
* இப்படத்திலும் ஒரு குளியல் காட்சி உள்ளதாமே?
சரவண பொய்கை குடும்பப்படம். இதில் நான் பாவாடை தாவணி, புடவை அணிந்துதான் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு காட்சியில் ஏரியில் நான் குளிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. ஆனால், அதில் குடும்பப் பெண்கள் குளிப்பது போன்று பாவாடை கட்டிக்கொண்டு குளித்திருக்கிறேன். அதில் துளியும் ஆபாசம் இருக்காது. அதுவும் குடும்பப்பட இயக்குனர் வி.சேகர் படமாச்சே. ஒரு காட்சியில்கூட கண்ணியம் மீறாமல் அழகு மிளிர படமாக்கியிருக்கிறார். வெளுத்துக்கட்டுக்குப்பிறகு இந்த படத்தில் நான் எனது கதாபாத்திரத்தை ரசித்துக்கொண்டே நடித்தேன்.
* அப்படியென்றால் இதன்பிறகு குடும்ப நடிகை என்ற இமேஜ் உருவாகிவிடுமே?
இன்றைய நிலையில் அப்படியொரு இமேஜ் கிடைக்கிறதென்றால் சாதாரண விசயமா? அந்த மாதிரி படங்களில் நடிக்கிறபோதுதான் தனித்தன்மை வெளிப்படும். சிம்ரன், ஜோதிகா, சினேகா போன்ற நடிகைகளுக்கு இன்றைக்கும் ஒரு நல்ல பெயர் இருக்கிறதென்றால் அவர்கள் அந்த மாதிரியான படங்களில் நடித்திருப்பதுதான். அதனால், சரவண பொய்கை படம் எனக்கு ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்தும் என்று அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
* அப்படியென்றால் இனிமேல் கவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க மாட்டீர்களா?
கவர்ச்சிக்கு ஒருபோதும் நான் எதிரியல்ல. ஆனால் அது ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். அதுவே வல்கராகும்போது முகம் சுழிப்பார்கள். அதனால் கவர்ச்சியைகூட அழகியலோடு எந்த இயக்குனர் வெளிப்படுத்தினாலும் அந்த கதைகளில் தயங்காமல நடிப்பேன். இப்போது தொட்டால் தொடரும் என்றொரு படத்தில் நடித்துள்ளோம். சட்டம் ஒரு இருட்டறை பட நாயகன் தமன் அதில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த ஆக்ஷன் திரில்லர் படத்தில் பாடல் காட்சிகளில் என்னை ரொம்ப அழகாக காண்பித்திருக்கிறார்கள். மாடர்ன் கெட்டப்பில் முதன்முறையாக வித்தியாசமான வேடத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்திலும் என்னை சுற்றிதான் கதை நடக்கும். வெளுத்துக்கட்டுக்குப்பிறகு நான் நடிக்கும் வித்தியாசமான படம் இது.
* சிலர், அருந்ததி நன்றாக நடிக்கிறார். ஆனால் தப்பான படங்களாக செலக்ட் பண்ணுகிறார் என்கிறார்களே?
கதை கேட்கும்போது எல்லாமே நல்ல கதை போன்றுதான் தெரிகிறது. ஆனால் நல்ல கதையை சரியாக படமாக்குவதும், தவறாக படமாக்குவதும் இயக்குனர்களின் கையில்தான் உள்ளது. அதனால் சில சமயங்களில் கணிப்புகள் தவறாகி விடுகிறது. அப்படித்தான் நான் நடித்த சில படங்களில் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், இப்போது சுதாரித்துக்கொண்டேன். சரவண பொய்கை, தொட்டால் தொடரும் படங்களை சரியாக தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறேன். அதனால் இனி என்னைப்பார்த்து அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.