பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்த, கடைக்குட்டி சிங்கம் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும், கார்த்தியிடம் பேசியதிலிருந்து...
கடைக்குட்டி சிங்கம் எந்த மாதிரியான படம்?
இயக்குனர் பாண்டிராஜ், மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த கதையை சொன்னார். ஆனால், இருவருக்கும் வாய்ப்பு அமையவில்லை. தற்போது சரியான நேரம் அமைந்தது. பெரிய குடும்பம் உடைய கதையில் நடிக்க வேண்டும் என்ற, என் நீண்ட நாள் ஆசை, இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
இது குடும்ப படம். நான், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, விவசாயத்தில் ஈடுபடுவது போன்ற ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். சமூக விஷயங்களில் அக்கறை உள்ள விவசாயியாக நடித்துள்ளேன்.
படத்திற்காக எந்த மாதிரி கஷ்டப்பட்டீர்கள்?
தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக, எடையை கஷ்டப்பட்டு குறைத்தேன். கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக, எடையை கஷ்டப்பட்டு கூட்ட வேண்டியிருந்தது. நாற்று நடுவது, பாத்தி கட்டுவது என அனைத்தையும், முறைப்படி கற்று, நடித்தேன்.
விவசாயிக்காகவே எடுக்கப்பட்ட படமா?
ஒரு விவசாயிக்கு உள்ள நியாயமான கேள்விகளை, இந்த படத்தில் கேட்டு உள்ளோம். மற்ற வேலைகளுக்கு ஓய்வு இருந்தாலும், விவசாயத்திற்கு மட்டும் ஓய்வே இல்லை. எந்த வயதிலும், விவசாயம் செய்ய முடியும். இருப்பதை வைத்து, சந்தோஷமாக வாழ்பவர்கள் விவசாயிகள். அந்த பெருந்தன்மையை, மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ரேக்ளா பந்தய அனுபவம் எப்படி இருந்தது?
திருமயத்தில் ரேக்ளா பந்தயம் நடத்துபவர்களை வைத்து தான், பந்தயக் காட்சியை எடுத்தோம். குதிரை ஓட்ட பயிற்சி எடுத்ததால், மாட்டு வண்டி ஓட்டுவது, சற்று எளிமையாக இருந்தது. மாட்டு வண்டியில் நான் மட்டும் தான், உட்கார முடியும். உடன் ஓடி வந்தவர், ஒரு கட்டத்தில் ஓட முடியாத நிலையில், நான் மட்டுமே மாட்டு வண்டியில் சென்று திரும்ப வேண்டியிருந்தது. அத்லெடிக்கில் எப்படி பயிற்சி எடுக்கிறோமோ, அதே போல், மாட்டு வண்டி பந்தயத்திற்கும், மாடுகளுக்கு பயிற்சி தருகின்றனர்.
படத்தில் மூன்று நாயகியரை எப்படி சமாளித்தீர்கள்?
மூன்று நாயகியர் விஷயத்தில், எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. ஆனால், நடனம் ஆடும்போது தான், சிரமமாக இருந்தது. எனக்காக, அவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தனர்.
இயக்குனர் ஆகும் எண்ணம் உண்டா?
இயக்குனர்கள் படும் கஷ்டம், எனக்கு நன்றாக தெரியும். எதற்கு அதற்குள் சிக்க வேண்டும்? இப்போதைக்கு நடிப்பு மட்டும் தான். 17 படம் தான் நடித்துள்ளேன். இயக்குனராகும் எண்ணமே இல்லை. உதவி இயக்குனராக செயல்பட தயார். எனக்கு தோன்றுவதை, இயக்குனரிடம் கூறுவேன். அதை ஏற்பதும், ஏற்காததும், அவர்கள் விருப்பம்.
தந்தையிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
இன்பம், துன்பம் அனைத்தையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்வது போன்ற பல விஷயங்களை, தந்தையிடம் கற்றுக் கொள்ளலாம். தொழில் மீதான பக்தியும், அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது தான்.