'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரங்கூன், இவன் தந்திரன் என, தொடர் வெற்றி படங்களை கொடுத்த கவுதம் கார்த்திக், ஹரஹர மகாதேவகி படத்தில், மிகப் பெரிய, ரிஸ்க் எடுத்துள்ளார். ஏ தணிக்கை சான்றிதழுடன் இந்த படம் வெளியாக உள்ளது, கோலிவுட்டில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் பற்றி, கவுதம் என்ன சொல்கிறார் என, பார்க்கலாம்.
இந்த படத்தில் நடிக்க சம்மதிக்க காரணம் என்ன?
இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், முதலில் படத்தின் பாடல்களைத் தான் போட்டு காட்டினார்; அருமையாக இருந்தன. அதன்பின் தான், கதை கேட்டேன்; அதுவும் நன்றாக இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். நான்கு நண்பர்கள் ஒரு இடத்தில் சேர்ந்தால், அந்த இடம் எப்படி கலகலப்பாக மாறுமோ, அப்படித் தான், இந்த படமும் இருக்கும்.
வசனங்கள் எல்லாம், இரட்டை அர்த்தத்துடன் இருப்பதாக...
நீங்கள் நினைப்பது போல், படம் அந்த மாதிரி இருக்காது; பெண்களை தவறாக சித்தரிக்கவில்லை. நல்ல காமெடி படம். டிரெய்லரில், வெறும் வசனங்களை பார்க்கும் போது, உங்களுக்கு அந்த மாதிரி தோன்றியிருக்கலாம்; மற்றபடி, படம், ஜாலியாகத் தான் இருக்கும். இந்த படத்தை பார்த்து, மக்கள் கெட்டுப் போய் விடுவர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
இது, இளைஞர்களுக்கான படமா?
கண்டிப்பாக, 18 வயதுக்கும் மேற்பட்ட யார் வேண்டுமானாலும், இந்த படத்தை பார்க்கலாம். இந்த விஷயத்தில், யாரையும் நாங்கள் ஏமாற்றி விளம்பரப் படுத்தவில்லை.
ரங்கூன், இவன் தந்திரன் படங்கள் உங்களுக்கு ஒரு நல்ல இமேஜை கொடுத்தன; இப்போது இந்த மாதிரி படத்தில் நடித்தால் சரியாக இருக்குமா?
எனக்கு இந்த படம், சரியாக வரும் என தான் நினைக்கிறேன். நீங்கள் கூறிய அந்த இரண்டு படங்களும், சீரியசான கதை களம் கொண்டவை. இதே போன்ற கதைகளில் தொடர்ந்து நடித்தால், ரசிகர்களிடம் வெறுப்பு வந்து விடும். அதனால், கொஞ்சம் வித்தியாசமான படங்களிலும் நடிக்கலாமே என்ற முயற்சி தான், இது.
இந்த படத்தின் கதையை கேட்ட, 18 ஹீரோக்கள், நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது; நீங்கள் மட்டும் எப்படி தைரியமாக நடித்தீர்கள்?
கதை கேட்ட, அந்த, 18 ஹீரோக்களும், பெரிய ஹீரோக்கள் தான். அவர்கள், கதையை, ரொம்ப கவனமாக தேர்வு செய்வர். நான், இப்போது தான், வளர்ந்து வருகிறேன். இதுபோன்ற நேரத்தில் தான், புதுப்புது கதைகளில் நடிக்க முடியும். இந்த வயதில், எனக்கு அந்த சுதந்திரம் உள்ளது.
அப்பாவிடம், இந்த கதையை விவாதித்தீர்களா?
அப்பா, எப்பவுமே தன்னை இளமையாக தான் காட்டி கொள்வார். இந்த படத்தின் கதையை கூறிய போது, விழுந்து விழுந்து சிரித்தார். அந்த தைரியத்தில் தான், இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
ஹரஹர மகாதேவகி தலைப்பு ஏன்?
சென்னையில், இதே பெயரில், ஒரு ரிசார்ட் இருக்கு. இந்த இடத்தில் தான், எல்லாரும் ஒன்று சேருவோம். கதைக்களம், அங்கிருந்து தான், சூடுபிடிக்கும். அதனால், இந்த பெயரை தலைப்பாக வைத்தோம்.
விஜய் சேதுபதியுடன் நீங்கள் நடிக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து படம் பற்றி?
படப்பிடிப்பு முடிந்து, தற்போது, டப்பிங் வேலை நடக்கிறது. செமத்தியான காமெடி படம். சேதுபதி அண்ணாவுடன் நடித்தது, நல்ல அனுபவமாக இருந்தது.
அப்பாவுடன் சேர்ந்து நடிக்க கதைகள் வந்திருக்கா?
விரைவில் இந்த கேள்விக்கு பதிலை எதிர்பார்க்கலாம்; ரசிகர்களுக்கு செமத்தியான விருந்து காத்திருக்கு.
காதல், கல்யாணம்...
இப்போது நடிப்பில் தான், பிசியாக இருக்கிறேன். 40 வயதில் கூட, கல்யாணம் செய்யலாம். இப்போது, கல்யாணம் செய்வதில் ஆர்வம் இல்லை. சினிமாவில், எனக்கான இடம் கிடைக்க வேண்டும்; நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும். தனி அடையாளத்துடன் இந்த துறையில் வெற்றிகரமாக வலம் வர விரும்புகிறேன்.