தினமலர் விமர்சனம்
பணம் மட்டுமே குறிக்கோளாக வாழும் நகரத்து மனிதர்களால் பெற்றோர் பாசம் கிடைக்காமல் தவிக்கும்நகரத்து குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் தீர்வும், தீர்ப்பும் சொல்லி வந்திருக்கும் படம்தான் வண்ணத்துப்பூச்சி!
கதைப்படி வசதியும், வாய்ப்பும் வந்தபிறகு பெற்ற தந்தையையும், பிறந்த ஊரையும் மறக்கும், மறைக்கும் அப்பாவிற்கும், அடிக்கடி குடித்து கும்மாளமடிக்கும் அலட்டல் அம்மாவிற்கும் பிறந்து வளரும் சிறுமி திவ்யபாரதி. ஒரு சமயம் தங்களது கிராமத்திற்கு செல்லும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கிறது. அங்கு தன் தாத்தாவின் அன்பிலும், கிராமத்து மக்களின் அரவணைப்பிலும் திக்கு முக்காடிப் போகும் அம்மணி, அதன்பின் ஊர் திரும்ப மறுக்கிறாள். பெற்றோர் வலுகட்டாயப்படுத்தவும் அவர்கள் கொடுமை படுத்துவதாக கோர்ட்டில் தாத்தா மற்றும் ஊரார் உதவியுடன் கேஸ் போடுகிறாள். இந்த விசித்திர வழக்கை விசாரிக்கும் நீதிபதி என்ன தீர்ப்பு சொல்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.
கிராமத்து தாத்தாவாக வாழ்ந்திருக்கும் பாலாசிங், சிறுமி திவ்யபாரதியாக வரும் ஸ்ரீலட்சுமி, சாப்ட்வேர் அலட்டல் பெற்றோர்கள் சித்தார்த், மாதவி, நீதிபதியாக வரும் நடிகை ரேவதி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். அதிலும் சிறுமி ஸ்ரீலட்சுமி குட்டி சாவித்ரியாக மின்னுகிறார் என்றால், பாலாசிங் நடிகர் தினகனையும் மிஞ்சுகிறார்! விஞ்சுகிறார்!!
நாடகத்தனமான காட்சிகளையும், நீள - நீளமான வசனங்களையும் சற்றே தவிர்த்திருந்தால் மேலும் சிறப்பாக வண்ணத்துப்பூச்சி பறந்திருக்கும். ரேஹானின் இனிய இசையும், பி.எஸ்.தரணின் அழகிய ஒளிப்பதிவும், அழகப்பன் சி.,யின் கருத்துக்கும், கதைக்கும், இயக்கத்திற்கும் வலுசேர்த்திருக்கின்றன.
குழந்தைகளின் எதிர்காலத்தை உணர்ந்து, நிகழ்காலத்தை மறந்து எந்திரத்தனமாக வாழும் நகர்ப்புற பெற்றோர்களையும், குழந்தைகளின் ஆசாபாசங்களையும் அழகாக படமாக்கி, உயிரோட்டமான காட்சிகளாக்கி இருக்கும் அழகப்பன் சி., பாராட்டப்பட வேண்டியவர்!
வண்ணத்துப்பூச்சி : குழந்தைகளின் எண்ணத்து சாட்சி!!
|