ஏ.பி.சி. ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சி.சரவணன், டி.ஆர்.சேவுகன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் விகட கவி. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜி.கிருஷ்ணன். திரைப்படக்கல்லூரி மாணவரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னக மொழிகளிலும் இரண்டாயிரம் படங்களுக்கு மேல் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றியவர். விகடகவி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சதீஷ் என்ற புதுமுகம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த அமலா பால் நடிக்கிறார். ஆடி மாசத்தில குழந்தை பொறந்தால் வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்வாங்க. ஒரு ஊரில் ஐந்து குழந்தைகள் ஆடி மாசத்தில் பிறக்கின்றன. ஆடியில பொறந்த பசங்களால அந்த ஊரு என்ன பாடுபடுதுங்கிறதுதான் படத்தோட கதை, என்கிறார் டைரக்டர் ஜி.கிருஷ்ணன். இந்தப்படத்தில் வினோத், கவிதா, டயானா, கருணா, விருமாண்டி என்ற ஐந்து பேர்தான் மெயின் கேரக்டர்கள். இவர்களில் வினோத் ஹீரோ, கவிதா ஹீரோயின். இந்த ஐந்து கேரக்டர்களின் பெயரின் முதல் எழுத்தைக்குறிக்கும் வகையில்தான் விகடகவி என்ற டைட்டிலை வைத்திருக்கிறார்களாம்.
விகடகவி படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் அற்புதமாக இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ரதன். ஒளிப்பதிவு - மா.பொ.வாணன். விகடகவி படத்தின் படப்பிடிப்பு மதுரை, கம்பம், தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
|