ஊரே தூற்றும் மொடா குடிகாரர் ஆர்.கே.. அவரது அண்ணன் நெப்போலியனோ உரே போற்றும் மகா நல்லவர். ஆர்.கே.வின் போதையால் அவரது அண்ணன் நெப்போலியன் ஊரார் முன் தலைகுனிய வேண்டிய ஒரு சூழல்! அண்ணன் ஊரார் முன் மன்னிப்பு கேட்டு மண்டியிடுவதை பார்த்த மறு வினாடி, குடியை விடுகிறார் ஆர்.கே. அடுத்த நொடி சிட்டியில் இருந்து அந்த ஊருக்கு வரும் பானுவை பார்க்கிறார். அவர் மீது காதல் கொள்கிறார்? அப்புறம? அப்புறமென்ன...? பானு சென்னைக்கு திரும்புகிறார். அவரை திருமணம் செய்து கொண்டுதான் ஊர் திரும்புவேன் என சென்னை வருகிறார் ஆர்.கே. அவருக்கும் அவரது அண்ணன் நெப்ஸூக்கும் பொது வில்லன் லால் இதன் பிறகும் சும்மா இருப்பாரா? சும்மா இல்லை... ஊரில் இருந்தபடியே தன் வேலையை.. அதாங்க, வில்லன் வேலையை செய்கிறார். அதையெல்லாம் வெற்றி கொண்டு நாயகன், நாயகியை கை பிடித்தாரா, இல்லையா என்பது மீதிக் கதை!
இதனூடே வடிவேல் - சோனாவின் காதல் காமெடி, நெப்போலியன் - ரஞ்சிதாவின் பிளாஷ்பேக் காதல், நெப்ஸ் பிரதர்ஸ் - லால் இடையேயான பகை இத்யாதி, இத்யாதி விஷயங்களை எல்லாம் சேர்த்து அழகம் மலையை அழகுபட தந்திருக்கிறார்கள்.
முதலில் குடிகாரனாகவும், அதன் பின் பொறுப்புணர்ந்த குடும்பஸ்தானாகவும், பானுவின் அன்பு காதலனாகவும் ஆர்.கே. அழகாக பொருந்தி நடித்திருக்கிறார். இவரது முதல் படமான எல்லாம் அவன் செயலைக் காட்டிலும் நடிப்பில் ஏகப்பட்ட மெச்சூரிட்டி! கீப் இட் அப்!
தாமிரபரணி பானுவா இது? என கேட்க வைத்து சபாஷ பானு! என சொல்ல வைக்கிறார் நாயகி பானு! நெப்போலியன், ரஞ்சிதா, வடிவேலு, சோனா, வில்லன் லால், மணிவண்ணன் என சகலரும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர்.
இளையராஜாவின் இசையும், பாடல்களும் ஏ.கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும், லைட்டிங்கும், எஸ்.பி.ராஜகுமாரின் இயக்கத்தில் அழகர் மலையை அழகு மலையாக ஆக்கியுள்ளது.
அழகர் மலை : சில, பல குறைகள் இருந்தாலும் அழகு மலை
----------------------------------
குமுதம் விமர்சனம்
குவாட்டர் பாட்டில் தம்பி... "பன்னீர் செம்பு' அண்ணன்.... பழைய பிரச்னைக்காக அடிக்கடி பொருமுகிற வில்லன்... இவர்களுக்கு ஒரு காவி வேட்டி ஃப்ளாஷ்பேக்... இதை உதறிக் காயப் போட்டால் "அழகர் மலை.'
டாட்டா சுமோவில் புகழேந்தி பி.ஏ. என்று பந்தா ஸ்டிக்கர் ஒட்டி வம்புதும்புக்கு அலைகிற கிராமத்தான் கேரக்டருக்கு ஆர்.கே., ஓ.கே. என்ன... ஜாலியாக கலாய்த்தாலும் ரொமான்ட்டிக்காக சிரித்தாலும் முறைப்பது மாதிரியே தெரிவதுதான் பிரச்னை.
பானுவுக்கு கல்லூரி விடுமுறையில் கிராமத்துக்கு டூர் வந்து எந்தக் கேள்வியும் கேட்காமல் ஹீரோவைக் காதலிக்கிற மாமூல் கேரக்டர், அழும் காட்சிகளிலாவது லிப்ஸ்டிக்கை தவிர்த்திருக்கலாம்.
ஆர்.கே.வுக்கு பொறுப்பான அண்ணனாக வருகிற நெப்போலியனின் அடக்கி வாசிக்கும் நடிப்பில் நிறையவே மெச்சூரிட்டி ஊர்ப் பஞ்சாயத்தில் அண்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக நேத்து அடிச்ச சரக்கு சரியில்லை என்கிற முகபாவத்துடன் ஆர்.கே. திருந்துவதும், தம்பிக்குப் பெண் தேடி அலையும் நெப்ஸ் ஆர்.கே.,வுக்கும் பானுவுக்குமான காதலை சின்ன ஜெர்க்கூட இல்லாமல் எதிர்கொள்வதும் தேடிவந்த கேட்ச்களை அடுத்தடுத்து தவறவிடுகிற சொதப்பல் ஃபீல்டிங்.
நெப்போலியனும், அவரோடு மோதிக் கொண்டேயிருக்கிற லாலும் காவி வேஷ்டி அணிந்திருப்பதற்கு சொல்கிற கதை சிரிப்பு ஃப்ளாஷ்பேக். நெப்போலியனின் காதலி ரஞ்சிதா. லாலிடமிருந்து தப்பிப்பதற்காக அரளிவிதை தின்று தற்கொலை செய்வதெல்லாம் சரிதான். அந்த சோகத்தை அவர் ஏதோ குருவி பிஸ்கட்டைப் பிடுங்கித் திண்கிற மாதிரியா காட்சிப்படுத்த வேண்டும்?
இரண்டு பேர் தன்னைக் கை தூக்கிவிடுவார்கள் என்று ரொம்பவே நம்பியிருக்கிறார் டைரக்டர் எஸ்.பி. ராஜ்குமார். முதலாமவர் வடிவேலு புதிதாக ஊருக்கு வந்த பானுவிடம் நான் காட்டுமுத்து, கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணிட்டிருக்கேன் என செம துணிச்சலான இன்ட்ரோ கொடுக்கிற காட்சியை தவிர மற்ற இடங்களில் வடிவேலு... வெடிவேலு. இரண்டாமவர் இளையராஜா. தனக்கே உரிய சாயலும் உற்சாகமும் குறையாத பாடல்களை மட்டும் போட்டுத் தந்து விட்டு, பின்னணி இசையில் அதெல்லாம் உங்களுக்கு அதிகம்ப்பா' என்று ஒதுங்கி விட்டார். மீனாட்சி அம்மன் கோயில், தாயார் நினைவிடம் என்று இமைஞானியை வலம் வர வைத்துள்ள ஆரம்பப் பாட்டு அவரது ரசிகர்களுக்கு கவுரவமான டெடிகேஷன்!
அழகர் மலை : அலும்பு மலை. குமுதம் ரேட்டிங் : சுமார்