|
நடிகைக்கு மொழியறிவு அவசியம் : நடிகை தமன்னா
|
|
|
|
ஒண்ணாம் வாய்பாட்டுக்கும் தமன்னாவின் அழகுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. தங்கு தடையின்றி வர்ணித்துக் கொண்டே போகலாம்... திறந்தவெளியில் தட்டானைப் பிடிக்க முயற்சிக்கும் சிறுமியைப் போல, தமிழ் வார்த்தைகளை துரத்தித் துரத்தி பிடித்து அவர் அளித்த பேட்டி...
"நல்ல கேரக்டர், நல்ல டைரக்டர், நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால், ஒரு நடிகை பெரிய அளவில் கவனிக்கப்படுவார். அந்த கவனிப்பு தற்போது எனக்கும் உருவாகியிருக்கிறது. இது எனக்குப் பெருமையையும், பொறுப்பையும் ஒருசேர ஏற்படுத்தி இருக்கிறது. "கல்லூரி' படத்தில், முதல் பாதியில் சாதாரணமாகவும், இரண்டாம் பாதியில் இறுக்கமாகவும் எனது பாத்திரம் இருந்தது. இந்த வித்தியாசத்தை மிகச் சிறப்பாக என்னிடம் இருந்து வெளிக்கொணர்ந்தார் டைரக்டர்.
"அதன்பின், "படிக்காதவன், அயன்' படங்கள். எனது முந்தைய படத்தின் சாயல், இந்த படத்தில் இல்லை. தைரியமான டைரக்டர்கள் எனக்கு வேறுவிதமான கேரக்டர்கள் கொடுத்தனர். அதை மிக ஆர்வமாக எதிர் கொண்டேன். அயனில் துறுதுறுப்பான கல்லூரி மாணவி வேடத்தைப் பார்த்த எனது தோழிகள் ஆச்சரியப்பட்டார்கள். காரணம், இயல்பில் நான் ரொம்ப சாதுவாகத்தான் இருப்பேன்.
"ஆனந்த தாண்டவம்' படத்தின் பாத்திரம் ரொம்ப சவாலாகவே இருந்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் எனக்கு ஓர் ரசிகர் வட்டம் உருவாகி வருகிறது. அதை தக்க வைக்க, வித்தியாசமான கேரக்டர்களை தேடிப்பிடித்து வருகிறேன். "நடிகைக்கு மொழியறிவு அவசியம். சொந்தக் குரலில் பேசவில்லை என்றாலும், வசனத்தின் ஆழத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான உணர்ச்சியை வெளிப்படுத்த முடியும்' எனச் சொல்வார்கள். அது மிகச் சரியான ஒன்று.
இந்தியில் வெற்றி பெற்ற "ஜப் வி மெட்' படத்தில், கரீனா கபூரின் பாத்திரம் மிக சிறப்பாக இருக்கும். அதுபோன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். எனது அதிர்ஷ்டம், அந்தப் படத்தின் ரீ மேக்கான "கண்டேன் காதலை' படமே எனக்கு கிடைத்தது. தமன்னா நல்ல நடிகை என்ற பெயரெடுத்தால் போதுமானது; இது தான் இப்போதைய கனவு''.
"கோலிவுட்'டின் கனவு தேவதையான தமன்னாவோடு பேசியதில் ஒரு விஷயம் தெளிவானது. அது, கனவுக்கும் கனவு வரும்!
-தினமலர் சினி டீம்-
|
|
|